டந்த நவம்பர் 27 மாவீரர் நாளன்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று அறிவித்துக்கொண்ட பெண்ணின் உரை உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருள் ஆகியுள்ளது. அந்தக் காணொளியில் பேசியது துவாரகா இல்லை என்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் வாழும் ஒரு பெண்ணை கூட்டிவந்து வேடமிட்டு பேசவைத்துள்ளார்கள் என்றும் அடுத்தடுத்த நாட்களிலேயே செய்திகள் வெளியாகிறது.  ஏன் இப்படியொரு வேலையைச் செய்யவேண்டும்? இதன் பின்னணியில் உள்ளது யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதைக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் புறந்தள்ளி பேசியது துவாரகாதான் என நிரூபிக்க நெடுமாறன் – கவுதமன் கும்பல் முயலவில்லை. நம்பும் முட்டாள்கள் போதும்‌ என்பது அவர்கள் கணக்கு.

ஈழவிடுதலைப் போராட்டத்தின்போது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஆசிய, அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா நாடுகளில் தஞ்சமடைந்த ஈழ தமிழர்கள் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரித்து பெரும் நிதி வழங்கிவந்தனர். போராட்ட நிதியை வசூல் செய்யவும், அதன் மூலம் தேவையான ஆயுதங்கள் மற்ற பொருட்கள் வாங்கவும் வெளிநாடுகளிலேயே தனது ஆதரவாளர்களை நியமித்து ஒழுங்குபடுத்திவந்தனர் புலிகள். பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு அந்தப் பணத்தை ஆட்டையப்போடவும், புலம்பெயர் தமிழர்களிடத்தில் இன்னும் வசூல்வேட்டையைத் தொடரவும் விரும்பிய கும்பல் ஒன்று இன்றுவரை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் உயிரோடு இருப்பதாகவும், மீண்டும் தனி தமிழீழப்போராட்டத்தை தொடருவார் என்றும் கம்பிகட்டிக்கொண்டிருக்கின்றன.

துவாரகா உயிரோடு இருக்கிறார் என்று தமிழர்களை குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை நம்பவைத்துவிட்டால் பிறகு என்ன பணத்தை வாரிக்குவிக்கலாம் என்பது அக்கும்பலின் கணக்கு.   அக்கும்பலின் தமிழகப் பிரதிநிதிகளான பழம்பெரும் நெடுஞ்சுவரும், ஈழக்கவிபாடியான காவி ஆனந்தனும் அக்கினிச்சட்டி டைரக்டர் மூலமாக முன்னறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த கதையில் தங்கள் அண்ணனுக்கு ஏதும் பாத்திரம் அளிக்கப்படவில்லை என்பதால் கொதித்தெழுந்த நாம் தமிழர் தம்பிகள் இணைய ஊடகங்களில் துவாரகா நாடகத்திற்கு எதராக களமாடுகின்றனர்.

இந்த இரண்டு கும்பலும் தமிழ் ஈழத்துக்காக கடந்த 14 ஆண்டுகளாக ஒன்றும் பிடுங்கவில்லை என்பதே உண்மை. மாறாக, இவர்கள் செய்ததெல்லாம்  ஆர்எஸ்எஸ்.-பாஜகவின் தமிழக ஏஜெண்டுகளாக இருந்து தமிழக மக்களிடம் காங்கிரஸ், திமுக எதிர்ப்புணர்வைத் தூண்டி ஓட்டுக்களை மடைமாற்றி தாமரையை மலரவைக்கும் முயற்சிகளே. இப்போலி தமிழ்தேசியவாதிகள் மோடி  மீண்டும் பிரதமராக வந்துவிட்டால் தனிஈழத்தை வாங்கி அப்படியே தட்டில்வைத்து நீட்டிவிடுவார் என்று பல புலம்பெயர் தமிழர்களை நம்ப செய்தனர்.


இதையும் படியுங்கள்: ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை உடனே வழங்கு!


ஆனால் சீதா பிராட்டியாருக்காக இராமன் இராவணனுடன் போர் புரிந்து வெற்றிகொண்ட இலங்கையை தனது அகண்ட பாரதத்தில் அடக்கி அதை அதானிக்கும் அம்பானிக்கு குத்தகைக்கு விடுவதே ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் கணக்கு. ஏற்கனவே தனது இந்துத்துவா அமைப்புகளை ஆரம்பித்து ஈழ தமிழர்களிடத்திலுள்ள சாதிவேற்றுமைகளையும், முஸ்லீம் மதவெறுப்பையும் விசிறிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியை திணித்து, மின்விநியோகத்தையும் துறைமுகத்தையும் அதானிக்கு பெற்றுக்கொடுத்து அகண்ட பாரதத்திற்குள் இலங்கையையும் கொண்டுவந்துவிட முயற்சி எடுத்துவருகிறது. உலகில் எந்த ஒரு இனத்தின் விடுதலையையும் ஒருபோதும் ஆதரிக்காத பாசிச ஆர்.எஸ்.எஸ்-சும் அதன் அரசியல் பிரிவான பாசிச பா.ஜ.க-வும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக மக்களை ஏய்க்கும் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசியவாதிகளும், காசி ஆனந்தன் போன்ற ஈழத்து துரோகிகளும் காவி பாசிஸ்டுகளின் கைக்கூலிகளாக மாறிநிற்கிறார்கள்.

இவர்களின் இந்த கீழ்த்தரமான நோக்கத்திற்காக   துவாரகா மாவீரர்நாள் உரை என்று ஒரு புதிய நாடகத்தை நிகழ்த்தி உள்ளனர்.  இப்படிச் செய்ததன்மூலம் ஈழமக்களின் மகத்தான போராட்டத்தையும், பிரபாகரன் குடும்பத்தாரின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துகிறது இத்துரோகிக்கும்பல். உலகம் முழுவதும் அம்பலமாகிவிட்ட இந்த போலிதமிழ்தேசிய கபடதாரிகளை புறம்தள்ளுவோம், காவிபாசிஸ்டுகளை தமிழர் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்!

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here