பொய்யும் புனைவும் ஆராய்ச்சி ஆகுமா..?
( இதோ பூலான்குறிச்சி கல்வெட்டு )

நண்பர்களே..
தமிழ்நாட்டு வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கருத்துக்களில் தெளிந்த ஆராய்ச்சியாளர்களைப் போன்று, தோழர் மணியரசனைச் சேர்ந்த சிலர் பொய்மையையும் புளுகு மூட்டைகளையும் துணிச்சலுடன் பேசி வருகின்றனர். அத்துடன் நில்லாது என்னால் சரியான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்ற பல வரலாற்றுச் செய்திகளின் ஆதாரங்களை மறுக்க முடியாததனால் இவர் எந்த சாதி என்று கேட்டு, கேட்பவர்களையும் படிப்பவர்களையும் திசை திருப்பி விடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இத்தகையவர்கள் என்னை நோக்கி நீங்கள் என்ன சாதி என்று கேட்பதைப் போன்று அவர்களை நோக்கி அதே கேள்வியை நான் கேட்டால் அவர்கள் பதறிப் போய் “சாதியைக் கேட்கிறார்“ “சாதியைக் கேட்கிறார்“ என்று கூக்குரலிட்டு இது என்ன நியாயம், இது என்ன நாகரிகம் என்று பதறுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாக இருப்பது எனக்கு நியாயமாக இருக்காதா..?

இத்தகைய செயல்களை நியாயப்படுத்தவதற்காக அவர்கள் எந்தவிதமான பொய்யையும் துணிந்து சொல்கின்றனர். தன் எதிரில் நிற்கும் மனிதனுக்கு ஆராயும் ஆறாம் அறிவே இருக்காது ( இந்த கருத்து ஆழமாகப் பதிந்ததனால் பகுத்தறிவு என்ற ஒன்று மனிதனுக்கு இருக்காது, இருக்கவும் கூடாது என்று கதைப் பேசுகின்றனர். ) என்ற நம்பிக்கையுடன் இத்தகையவர்கள் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர் விட்ட “கப்சா”வின் தரம் என்னவென்று காட்டுவதற்கான ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறேன். குறிப்பாக சோழர்காலத்தைப் பற்றி ( இத்தகைய செய்திகள் பாண்டியர்கள் காலத்திலும் நாயக்கர்கள் காலத்திலும் மராட்டியர்கள் காலத்திலும் பிரி்ட்டிஷ்காரர்கள் காலத்திலும் ஏன் சுதந்திரத்திற்கு பின்பும் பல ஊர்களில் இதேபோன்று நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள் ) அவர்கள் சொல்லுகின்ற சில விசயங்கள் அப்பட்டமான பொய் என்பதை ஜப்பானிய வரலாற்று அறிஞர் எழுதிய “வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்” நூலின் பக்கங்களை உங்கள் முன் வைத்துள்ளேன். கூடுதலாக அந்நூலின் இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

1. . சோழர் காலத்து சமூக அமைப்பைப் பற்றிய இத்தகையவர்களின் பொய்மூட்டைகளை அவிழ்ப்பதற்கு ஜப்பானைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் நொபுரு கரஷிமா அவர்கள் சோழர்காலத்தில் வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை ஆராய்ந்து ஆராய்ச்சி செய்து இந்நூல் வெளியிடப்பட்டது. இத்தகைய அரிய நூலின் பெயர் “வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்” என்பதாகும். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் இணையதள இணைப்பை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

2. களப்பிரர்களைப் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் என்று வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற பலரும் கொடுத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் தான் என்னுடைய எழுத்துக்கள் அமைந்துள்ளன. முதலில் அத்தகைய வரலாற்று அறிஞர்களின் கூற்றுக்களின் வன்மை மென்மையை ஆராய்ந்து விட்டு என் எழுத்துக்களுக்கு வருவதுதான் முறையாக இருக்கும்.

3. வேள்விக்குடி செப்பேடு போன்ற வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் மேற்கண்ட வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடும் கருத்துக்களை இவர்கள் மனம் போனபடி அவதூறு செய்கின்றனர். அப்படியான நேரத்தில் தங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சிறிதளவாவது அறிவு இருக்கும் என்று இவர்கள் கருதுவதில்லை போன்று தெரிகிறது. எப்படியென்றால் “யாப்பருங்கலம்” என்ற நூலில் உள்ள செய்தியை “யாப்பருங்கல காரிகை”யில் உள்ளதாகக் கதைவிடுவார்கள். ( ஏனென்றால் எதிரில் இருந்து கேட்டு கொண்டிருக்கும் மனிதன் ஒரு மோடுமுட்டி என்ற ஒரு வலுவான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு ) அப்படி ஒரு பொய்யை சொல்லும்போது கூட ஒரு முழுமையான பாடலில் அங்கமாக அமைந்த ஒரு நான்கு வரிகளை மட்டும் உருவியெடுத்து இதுதான் முழுமையான பாடல் என்று கதைப்பார்கள்.

4. சைவ சித்தாந்தத்தைப் போதிக்கும் சிவஞான போதம் நூலை தமிழர் தத்துவம் என்று உங்களிடம் அவர் கூறுவார். அதே நேரத்தில் அந்த நூலை எழுதிய ஆசிரியர் மெய்க்கண்டார். மெய்க்கண்டாரின் தந்தையின் பெயர் “அச்சுத களப்பாளர்“ என்ற செய்தியை உங்களுக்குச் சொல்லமாட்டார். ( யாராவது ஒரு வாசகர் மெய்க்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் களப்பிரரா? என்று கேட்டால் இவர்கள் என்ன கூறுவார்கள்.?)

5. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “ஆசாரக்கோவை” என்ற நூல் ஆரியர்களின் தர்ம சூத்திரங்களைப் பின்பற்றி கி.பி. 8 ம் நூற்றாண்டிற்கு பின்பு எழுதப்பட்டது என்பதையும் அந்தக் காலக்கட்டத்தில் களப்பிரர்கள் ஒழிக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பதை மறைத்துவிட்டு அந்த நூல் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தது என்று உங்கள் காதுகளில் பூ சுற்றுவார்.19:21

6. இதற்கு மேலும் கேட்டுக் கொண்ருப்பவர்கள் தவறுதலாகச் சிந்தித்து ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காக “பூலான்குறிச்சி” கல்வெட்டைப் பார் என்று பயப்படுத்துவார். கேட்பவர்களைக் கலக்கிவிடுவார். பயப்படாதீர்கள் அந்தக் கல்வெட்டின் வாசகங்கள் முழுமையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இன்றைய நிலை வரையிலும் மிகத் தெளிவாக இந்தக் கல்வெட்டை யாராலும் விளக்கமுடியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அந்தக் கல்வெட்டு முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்துள்ளது. எனவே இக்கல்வெட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறுவதற்கு இடம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு சரியென்று தோன்றுகின்ற கருத்தைப் பெறுவதற்காக அந்தக் கல்வெட்டையே ஒரு தொல்லியல் அறிஞருடைய கருத்துக்களுடன் வெளியிடப்பட்ட கல்வெட்டை உங்களுக்கு முன் வைக்கிறேன்.

குறிப்பு
கூடிய சீக்கிரம் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் என்னுடைய பதிவு வந்த ஒருசில நாட்களிலேயே இது போன்ற பல நூல்கள் தரவிறக்கம் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டுகிறேன். )

வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் ( அறிஞர் நொபொரு கராஷிமா பல நூற்றுகணக்கான சோழர்கால கல்வெட்டுகளை கணினி மூலம் ஆராய்ந்து எழுதிய நவீன வரலாற்று நூல் இது )

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6jZhy&tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#book1/

நன்றி: பொ. வேல்சாமி.
முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here