ரு நண்பரின் குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டேன். அங்கு ஒரு பத்திரிக்கையாளரும் குடும்ப சகிதம் வந்திருந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

அவர் இப்பொழுது என்ன பத்திரிக்கையில் வேலை செய்கிறார் என்பதைச் சொன்னார். முதலில் வேலை செய்த பத்திரிக்கை பெயரையும் சொன்னார்.

”ஏன் அங்கிருந்து இங்கு மாறினீர்கள்? அங்குள்ள சூழ்நிலையை விட இந்த சூழ்நிலை சிக்கலாக இல்லையா!” என கேட்டதற்கு… ”அங்கு ஒரு குழுவாய் வேலை செய்துவந்தோம். ஒரு சமயத்தில் மொத்தமாய் மாறிய பொழுது, அவர்களோடு நானும் இந்த பத்திரிக்கைக்கு வந்துவிட்டேன்” என்றார்.

இரண்டு பத்திரிக்கையிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகம். அந்த சூழலில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் வேலை செய்த அனுபவம் எப்படிப்பட்டது என கேட்கும் பொழுது சில அம்சங்களைச் சொன்னார்.

“பத்திரிக்கையில் சில பிரிவுகள் இருக்கிறது அல்லவா?” நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள்?”

“பத்து ஆண்டுகளை கடந்துவிட்டதால்.. இப்பொழுது டெஸ்கில் இருக்கிறேன். அரசியல் செய்திகள் பிரிவில் வேலை செய்கிறேன்.”

” உங்கள் அனுபவத்தில் பார்ப்பனர்கள் தலித்துகளிடம் எப்படி பழகுவார்கள்?”

”நான் வேலை செய்த பத்திரிக்கைகளில், தலித்துகளை வேலைக்கு எடுத்தால் தானே! துவக்கத்திலேயே கழித்துக்கட்டிவிடுவார்கள்.”

”உங்கள் அனுபவம் எப்படி?”

“நேரடியாக சாதியை கேட்கமாட்டார்கள். நான் எந்த ஊரில் வாழ்ந்தேன். எந்த தெருவில் வாழ்ந்தேன் என்பது முதற்கொண்டு கேட்டு… நம் சாதியை கண்டுப்பிடிக்க பார்ப்பார்கள். தோளில் கைப்போட்டு பழகுவது போல நூல் இருக்கிறதா என பார்ப்பார்கள்.”

“எல்லா பார்ப்பனர்களும் அப்படி இருக்க மாட்டார்கள் தானே?”

“இத்தனை ஆண்டுகளில் என் அனுபவத்தில் பெரும்பாலான பார்ப்பனர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள்.”

”இப்பொழுது உள்ள சூழ்நிலையில் மோடி கும்பலுக்கு ஆதரவான நிலையை பல பத்திரிக்கையாளர்கள் எடுத்திருக்கிறார்களே! செய்திகளை எப்படி வழங்குகிறார்கள்?”

“செய்திகளை மறைப்பதில்லை. எழுதுவார்கள். ஆனால், அதன் முனை மழுங்கடிக்கப்பட்டு இருக்கும். எதிராக எழுதமாட்டார்கள். அது செய்தால் போதும் என்று தான் மோடி கும்பல் எதிர்பார்க்கிறது. இவர்களும் கவனமாய் அதற்கேற்றபடி நடந்துகொள்கிறார்கள்”

“பத்திரிக்கையில் கட்டுரைகளை, செய்திகளை அனுமதிப்பது எப்படி?”

“ஒரு கட்டுரைக்காக/செய்திக்காக நிறைய உழைத்து எழுதியிருப்போம். இறுதி வடிவம் கொடுத்து பிரிண்டிங்குக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு போயிருப்போம். அடுத்தநாள் அந்த செய்தியோ/ கட்டுரையோ பத்திரிக்கையில் வராது. கேட்டால்… வேறு ஒரு முக்கிய செய்தி வந்துவிட்டது. அதனால் வெளியிடவில்லை என்பார்கள். அந்த செய்தியைப் படித்துப் பார்த்தால் மொக்கையாக இருக்கும்.”

“பேஸ்புக்கில் உங்கள் சொந்த பக்கத்தில் நீங்கள் நினைத்ததை எழுத முடியுமா? அதிலும் நிபந்தனைகள் விதிப்பார்களா?”

“வாய்ப்பேயில்லை. வேலைக்கு சேரும் பொழுதே, நமது பேஸ்புக் பக்கத்தின் முகவரி, டிவிட்டர் முகவரி என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு தான் வேலையிலேயே சேர்க்கிறார்கள். தொடர்ந்து என்ன எழுதுகிறோம் என்பதையும் கண்காணிக்கிறார்கள்.”

“உங்களுக்கான பத்திரிக்கையாளர் சங்கம் உற்சாகமாக செயல்படுகிறதா?”

“சொல்லும்படி இல்லை. கவலைக்கிடம் தான்.”

”படித்தது வேறு துறை என்கிறீர்கள். பத்திரிக்கையாளர் துறையில் வந்ததற்காக சந்தோசப்படுகிறீர்களா?”

”நிறைய செய்யலாம் என நினைத்து தான் உள்ளே வந்தேன். ஆனால் பத்திரிக்கையின் சூழல், நடைமுறை எல்லாம் அதற்கு சாத்தியமில்லை என உணர்த்திவிட்டது. அடக்கி வாசிக்கவேண்டும். வேலையை தக்க வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான்!”

பத்திரிக்கையாளரை சந்தித்த விசயம் தொடர்பாக ஒரு மூத்த தோழரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ”அந்த காலத்தில் இருந்து பத்திரிக்கை உலகம் இப்படித்தான் இருக்கிறது. தமிழகத்து சூழலில் கூட பெரிய மாற்றம் வராமல் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தான் இவர் சொல்வதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. குமுதத்தில் அதன் முதலாளி செட்டியார் சாதியை சார்ந்தவர் என்றாலும்.. நிர்வாகத்தை கையில் வைத்துக்கொண்டு… ஆசிரியராக ஒரு அய்யரை கூட அல்ல! குறிப்பாக அய்யங்காரை நியமித்துக்கொள்வார்கள். அய்யங்காரே பத்திரிக்கை முதலாளி என்றால்… சொல்லவே வேண்டாம். இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருப்பதைத் தான் இந்த சூழ்நிலை காட்டுகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here