மின்சார வாரியம் ஏகப்பட்ட கடனில் இருக்கிறது.  (ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி). கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவே இல்லை. ஆகையால், உயர்த்துகிறோம் என கடந்த ஆண்டு உயர்த்தினார்கள்.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, கல்வி கட்டண உயர்வு என பல திசைகளிலிருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டு திணறிக்கொண்டிருந்த மக்கள்,  மின்சார கணக்கீட்டை மாதம் இருமுறை கணக்கு எடுப்பதால், ஏகப்பட்ட கட்டணம் வருகிறது. மாதம் மாதம் எடுங்கள் என மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் பொழுது தான் இந்த விலை உயர்வையும் அறிவித்து, அதிர்ச்சி தந்தார்கள்.

இப்படி மின்சார கட்டணத்தை உயர்த்தியும், அவர்களுக்கு பெருமளவு வருமானம் வரவில்லையாம். ஆகையால் மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில் ஏற்றிக்கொள்ளலாம் என கடந்த ஆண்டே அனுமதி அளித்துவிட்டது. மக்களின் கூலி என்பது வருடம் வருடம் உயர்வதில்லை. ஆனால், ஒருங்குமுறை ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மக்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அக்கறையும், புரிதலும் இல்லாமல் அறிவித்தார்கள். ”உனக்கென்னப்பா! பைத்தியம். எது வேணா சொல்லுவ!” வசனம் தான் நினைவுக்கு வந்தது.


இதையும் படியுங்கள்:

♦ எச்சரிக்கை – விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல!

புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா ; 2020 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து! மக்கள் மீது கட்டணக் கொள்ளை!


இப்படித்தான் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கலாம் என ஒன்றிய அரசு மாற்றினார்கள்.  ஒரு லிட்டர் எண்பது ரூபாய்க்கு இருந்த பெட்ரோலை 103 ரூபாய் வரை விலை ஏற்றி ஒன்றிய அரசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டுக்கொள்ளையடிக்கிறார்கள்.  ஆனால் விலை குறையும் பொழுது, கவனமாய் குறைக்க மறந்து போகிறார்கள்.

ஒன்றிய அரசு சுங்கவரி கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை உயர்த்திக்கொண்டே போகிறார்கள்.  அதனால், எல்லா போக்குவரத்து கட்டணமும் உயர்ந்து, விலைவாசியும் எகிறிக்கொண்டே போகிறது.

தமிழக அரசும், மின்சார வாரியமும் உயர்வுக்கு சொல்லும் காரணம் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது என்கிறார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த வாரியம் எப்படி ஒரு லட்சத்து, நாற்பதினாயிரம் கடனாகிப்போனது என்றால்,  தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளினால், தனியாரிடம் அநியாய விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தார்கள்.  அரசு புதிதாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என தடை விதித்தார்கள். அதன் விளைவு தான் மலை போல கடன் சேர்ந்துவிட்டது.  இந்த கடனுக்கு பின்னால் உள்ள ஊழலை நேர்மையாக விசாரித்தால், இப்பொழுது உள்ள தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளே தான் இருக்கவேண்டும்.

அப்பொழுது நாம்  கேட்கத்தவறியதின் விளைவு தான் அவர்கள் (பெருமளவு அதிமுக) ஊழல் செய்து ஏற்றி வைத்த கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்.  இப்படி கடன், நஷ்டம் என சொல்லிக்கொண்டே இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல மின்சார வாரியத்தை தனியார் தரகு முதலாளிகளுக்கு நைசாக கை மாற்றிவிடவும் முயலுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஒன்றாம் தேதி மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற உத்தரவுக்கு எதிராக போராடப் போகிறோமா அல்லது கட்டண உயர்வு தரும் ஷாக்கை எதிர்கொள்ளபோகிறோமா என்பதை நாம் தாம் முடிவு செய்ய வேண்டும்.

  • சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here