ந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு கூறு போட்டு தாரை வார்த்து வரும் மோடி தலைமையிலான காவி கும்பல் எப்பொழுதுமே சூரப்புலிகளாக உதார் விட்டுத் திரிகிறது; ஆனால் உண்மையில் தொடை நடுங்குகிறது . இதற்கு ரூட்ஸ் தமிழ் சேனல் மீதான அடக்கு முறையே ஒரு உதாரணம்.

தனது வார் ரூம் மூலம் படித்த வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து கூலிக்கு அமர்த்தி, கருத்துருவாக்கம் செய்யும் கேடுகெட்ட மோடி கும்பலானது, அடியாள் படைகளை பெருக்கும் சாகா பயிற்சிகளை நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கும் அதே வேளையில், உண்மையை துணிந்து பேசும், எழுதும், எளிய நாட்டுப் பற்று கொண்ட சாமானியர்களை கண்டு அஞ்சி நடுங்குகிறது. அவர்கள் மீது UAPA உள்ளிட்ட சட்டங்களை ஏவி, கருத்தே சொல்ல விடாமல் ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளுகிறது. ஸ்டேன்ஸ் சாமி போன்றவர்களை சிறையிலேயே கொல்லவும் செய்துள்ளது.

இந்த சூழலிலும் உண்மையை உரக்க சொல்பவர்கள் துணிந்து நிற்கிறார்கள். உண்மைகளைக் கண்டு அஞ்சும் கோழைகளான காவி பாசிஸ்ட்டுகளோ, தனது அடக்கு முறையை மேலும் மூர்க்கமாக தொடர்கிறார்கள். படுகொலைகளையும் செய்கிறார்கள்.

நாலாந்தர கிரிமினல் கும்பல்களான சனாதன் சாஸ்தா போன்றவற்றை களம் இறக்கி கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களை சுட்டுத் தள்ளியபோதும், உண்மையை பேசும் குரல்வளையை மொத்தமாக நெரிக்க முடியவில்லை.

காஷ்மீரில் ஆண்டுக் கணக்கில் இணையத்தை முடக்கி, மீடியாக்களை கண்காணிப்பில் வைத்து, செய்தியே வெளிவராமல்  தனது அடக்கு முறையை ஏவிய சூரப்புலிகளான மோடி, அமித்ஷா கும்பல் மூக்குடைபட்டே நிற்கிறது.காஷ்மீரமோ, வடகிழக்கு மாநிலங்களோ அடக்குமுறைக்கு பணிவதாக இல்லை. காஷ்மீரில் பழைய நண்பர்களான மகபூபா போன்றவர்கள் பாசிச பாஜக விற்கு எதிராக அரசியலில் தீவிரம் காட்டுகிறார்கள்.

தமிழகத்திலும் தனது அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்வி கேட்கும் அமைப்பினரை, இயக்கத்தினரை தீவிரவாதி – பயங்கரவாதி என முத்திரை குத்தி சிறையில் அடைப்பதும் தொடரவே செய்கிறது. அவர்களுக்காக வாதாட முன்வரும் பல வழக்குரைஞர்களும் கூட தாக்குதல் இலக்காக்கப்படுவதையே மதுரையின் அப்பாஸ் கைது சுட்டிக்காட்டுகிறது. அந்த அளவிற்கு கருத்து கூறுவதையே, நியாயம் கேட்பதையே, சட்டத்தின் முன் விவாதங்களை வைப்பதையே சகிக்க முடியாமல், தான் அம்பலமாகி விடுவோம் என்று அஞ்சி நடுங்குகிறது காவி கும்பல்.

எந்த அளவிற்கு அஞ்சுகிறதோ அந்த அளவிற்கு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அண்ணாமலைகளை வைத்து மூர்க்கமாக உதார் விட்டு, ஏறித் தாக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

 

மத்தியில் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட அடக்குமுறைக்கான உறுப்புகளில் ஆர்எஸ்எஸ் காரர்களை வரிசையாக நியமித்துக் கொண்டு, தான் வெறுப்பவர்களை எல்லாம் ஆள் தூக்கி சட்டங்களில் அள்ளிப்போட்டு சிறைகளில் அடைத்துக் கொண்டு, கார்ப்பரேட் விசுவாசியாக அமெரிக்க எஜமானர்களின் காலடியில் விழுந்து கிடக்கும் மோடி, அமித்ஷா  கும்பல் உண்மையில் சாமானியர்களைக் கண்டு அஞ்சுவதையே ரூட்ஸ் தமிழ் மீதான தாக்குதல் வெளிக்காட்டுகிறது.

பொதுவாக கார்ப்பரேட் மீடியாக்கள் பல நூறு கோடி முதலீட்டில், நாடு தழுவிய வலைப்பின்னல்களை கொண்டதாக உருவாக்கப்பட்டு, அவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களாக மக்களின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தி இடையறாது கருத்துருவாக்கம் செய்து வரும் சூழலில், மிக எளிமையாக, மூலதன பலமின்றி, தனது உழைப்பை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு, உண்மையை உரக்கச் சொல்லும் துணிவுடன் தொழிலில் இறங்கியுள்ள யூட்யூபர்களை கண்டு அஞ்சி அலறுகிறது பாசிச மோடி கும்பல்.

இதையும் படியுங்கள்: ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனல் முடக்கம் ஜனநாயக விரோதமானது! கண்டனத்துக்குரியது!

ரூட்ஸ் தமிழ் சேனலில் கரிகாலன் எடுத்து வரும் பேட்டிகள், தமது செல்வாக்கை சரிப்பதைக் கண்டு அஞ்சி, அதை முடக்கி விட்டு கொக்கரித்தது காவி கும்பல். you Tube போன்ற  கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வித விசாரணையும் இன்றி, அதிகார வர்க்கத்தின் கண் அசைவுக்கு தாளம் போடுபவர்களாகவே உள்ளன. கார்ப்பரேட்டுகளின் பிடியில் உள்ள நிறுவனங்களைக் கொண்டே, அவர்களுக்கு எதிரான கருத்துக்களை, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் உண்மைகளை துணிந்து சொல்வதும், தொழிலில் நீடிப்பது என்பதும் அசாத்தியமானது தான்.

அப்படி உண்மைகளை உரக்கச் சொல்லி தமிழகத்தில் தனக்கென அங்கீகாரத்தையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொண்ட கரிகாலனைப் பார்த்து, வானளாவிய அதிகாரங்களை குவித்து வைத்துள்ள பாசிச கும்பல் அஞ்சி நடுங்குகிறது. அதனால் தான் அவரது ரூட்ஸ் தமிழ் சேனலை முடக்கியதோடு, அவர் அசராமல் அடுத்ததாக தொடங்கிய ரூட்ஸ் 24×7 சேனலையும் முடக்கி புதைப்பதற்கு நிற்கிறது. அவர் அடுத்து என்ன செய்வாரோ? என்று அஞ்சித்  தவிப்பதும் அம்பலமாகி நாறுகிறது.

‘பாசிஸ்ட்டுகள் ஆகப்பெறும் கோழைகள்’ என்பதையே இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் அம்பலப்படுத்துகின்றன. உண்மைகள் முன் பொய்கள் எப்போதும் தோற்றே தீர வேண்டும். பொய்களையே ஆதாரமாக வைத்து பிழைப்பு நடத்தும் காவி பாசிஸ்ட்டுகளை நாம் உண்மையைக் கொண்டு துவைத்தெடுப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here