வெனிசுலா: டாவோஸில்  நடந்த பணக்காரர்களின் கூட்டம் எதையும் மாற்றவில்லை!.
உன்னிப்பாகக் கவனித்தால், அமெரிக்க இராணுவம் அமெரிக்கத் தனியார் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிப்பதற்கும் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆன வேலையைச் செய்து வருகிறது.

சந்தைப் பொருளாதாரம் மற்றும் நேர்மையான போட்டி ஆகியவையே தனது அடிப்படைக் கொள்கைகள் என்று முதலாளித்துவம் எப்போதும் நமக்குக் கற்பித்து வந்தது. கடின உழைப்பின் மூலமும் விதிகளைப் பின்பற்றுவதன் மூலமும் யார் வேண்டுமானாலும், எந்த நாடும் செல்வந்தராக முடியும் என்றும் அது கூறியது. ஆனாலும், உலகம் சந்தைப் பொருளாதாரத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப இயங்குவதில்லை. அது உண்மையாக இருந்திருந்தால்,  இத்தனை போர்கள் நடந்திருக்காது.

சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகளான வெனிசுலா மீதான தாக்குதல், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்த டிரம்பின் மிரட்டல்கள், காசாவிற்கான சர்ச்சைக்குரிய ‘அமைதி வாரிய’த் திட்டம் ஆகியவை அனைத்தும், மற்றொரு வளச் சுரண்டல் காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகின்றன. உண்மையில், வளச் சுரண்டலே முதலாளித்துவத்தின் மையக் கொள்கையாகும். அதன் தோற்றக் கதையே காலனித்துவம், அடிமை வர்த்தகம், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் கொள்ளை போன்ற சூறையாடல்களால் ஆனதுதான். பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கொள்கைகள் வழியாக இது தொடர்கிறது. அவ்வப்போது நிகழும் வளச் சுரண்டல் போர்களால் இது மேலும் வளர்க்கப்படுகிறது.

மேலும், இந்த முறை தாராளமய முதலாளித்துவ சொர்க்கத்தின் தலைவராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட  டொனால்ட் டிரம்ப், தனது பேரரசின் லட்சியங்களை முடிந்தவரை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒருவர் ஒரே நேரத்தில் போர்களைத் தூண்டிவிட்டு, நாடுகளுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து, அமைதிக்கான நோபல் பரிசையும் கேட்பது என்பது எவ்வளவு அபத்தமானது.

வெனிசுலாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்குப் பின்னணியில் இருந்த உண்மையான நோக்கம் எண்ணெய் தான் என்பது ஒவ்வொரு அறிவுள்ள மனிதனுக்கும் தெரியும். இருந்தபோதிலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் இந்த விவாதத்தை போதைப்பொருள் மற்றும் ஜனநாயகம் என்ற திசையில் திசைதிருப்பிக்கொண்டே இருந்தது. ஆனால் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட உடனேயே, டிரம்ப் முதல் மார்கோ ரூபியோ வரை அனைவரும் வெனிசுலா எண்ணெய்யைக் கொள்ளையடிப்பதற்கான தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க

 வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்! | புதிய ஜனநாயகம்

 ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

அதிகரித்து வரும் தேசியக் கடன், உயர்ந்து வரும் நுகர்வோர் கடன், பணவீக்கம் மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுடன், அமெரிக்கப் பொருளாதாரம் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது. அது நிலைத்து நிற்க அதிக வளங்கள் தேவைப்படுகின்றன. அது உச்சத்தில் நீடிக்க, தனது பெட்ரோடாலர் மேலாதிக்கத்தைப் பராமரிக்க வேண்டும். அறியாதவர்களுக்கு, அமெரிக்க டாலர் எண்ணெய் பணத்துடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. 1970-களின் முற்பகுதியில், அனைத்து எண்ணெய் வர்த்தகப் பரிவர்த்தனைகளும் டாலர்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா சவுதி அரேபியாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது நாடுகளைத் தங்கள் அந்நியச் செலாவணிக் கணக்குகளில் டாலர் இருப்பைப் பராமரிக்க கட்டாயப்படுத்துகிறது. ஆனால் இன்று, உலகம் மாறிவிட்டது.

பிரிக்ஸ் நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% ஏற்கனவே யூரோ, சீன யுவான், ரூபிள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் போன்ற பிற நாணயங்களில் நடைபெறுகிறது என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது. இதுதான் வெனிசுலாவின் குற்றமாகவும் இருந்தது. அது தனது கச்சா எண்ணெய்க்கான பரிவர்த்தனைகளை யுவான் மற்றும் பிற நாணயங்களில் ஏற்கத் தொடங்கியது. டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட ஆவேசமான பதிவுகள், எண்ணெய் வர்த்தகத்திலிருந்து டாலரைப் பிரிப்பது பற்றிய பேச்சு அவர்களை எந்த அளவுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. அவர் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பே, டிசம்பர் 2024-ல், அவர் ட்ரூத் சோஷியலில், “பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும்போது நாம் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற பேச்சு முடிவுக்கு வந்துவிட்டது” என்று எழுதினார்.

அமெரிக்காவால் கடுமையான  தடைகள் விதிக்கப்பட்ட ஒரு நாடான வெனிசுலா, இன்னமும் தன்னைத் தக்கவைத்துக்கொண்டு இயங்குகிறது என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தடை விதித்தால், பொதுவாக உலகமும் அதைப் பின்பற்றும். வெனிசுலா மக்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளின் தீவிரத்தைப் பாருங்கள்; அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் மற்ற நாடுகளுக்குப் பயணிக்க முடியாது, மேலும் அவர்களின் சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்குத் தடை இருந்தது, ஆனால், செவ்ரான் நிறுவனத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்த மற்ற நாடுகளும் அமெரிக்காவிலிருந்து 25% கூடுதல் வரியை எதிர்கொண்டன.

மேலும் படிக்க:

ஜனநாயகத்துக்காகப் போராடும் ஈரான் மக்கள்! மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் அமெரிக்கா!

 உலக சமாதானத்தின் முதன்மை எதிரி அமெரிக்கா

அதுமட்டுமின்றி, வெனிசுலாவில் உள்ள எண்ணெய் தொழிலைச் சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இயந்திரங்கள், தொழில்நுட்பம், ஏன் எண்ணெய் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கியமான நாஃப்தா இறக்குமதிக்கும் கூட தடை விதிக்கப்பட்டது. வெனிசுலாவுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் எண்ணெய் டேங்கர்கள் குறிவைக்கப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், வெனிசுலாவால் தனது எண்ணெய் தொழிலை எப்படி மேம்படுத்த முடியும்?

அந்த நாடு ஒருபோதும் அமைதியாக விடப்படவில்லை. அரசியல் சதிப்புரட்சிகள் அதை நிலையற்றதாக்கின, அதே நேரத்தில் கலப்பினப் போர்கள் (hybrid wars) வெனிசுலாவில் ஒரு நிரந்தர அம்சமாக இருந்தன. இவ்வளவுக்கும் பிறகு, வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -3% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் கூறுகின்றன. இது ஒருவரின் கைகளைக் கட்டிவிட்டு, பிறகு அவர் வேலை செய்யவில்லை என்று அவரைக் குறை கூறுவது போன்றது.

தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 1971 மற்றும் 2021-க்கு இடையில் 152 நாடுகள் மீது அமெரிக்கா விதித்த தடைகளின் தாக்கத்தை ஆராய்ந்தது. இந்த 50 ஆண்டுகளில், அமெரிக்கத் தடைகளின் நேரடி மற்றும் மறைமுக விளைவாக, இந்த நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600,000 இறப்புகள் நிகழ்ந்ததாக அது மதிப்பிட்டுள்ளது. இந்தத் தரவின் அளவு திகிலூட்டுவதாக உள்ளது. 1971 மற்றும் 2021-க்கு இடையில், அமெரிக்கத் தடைகள் 152 நாடுகளில் சுமார் 3 கோடி இறப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

தடைகளால் கலங்காத சீனா, வெனிசுலா மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஒரு வழியைக் கண்டறிந்தது. 33 லத்தீன் அமெரிக்க நாடுகளில், 24 நாடுகள் சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன. இந்த நாடுகளில் பலவற்றில் சீனா முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உருவாக்கி வருகிறது. 2000 மற்றும் 2023-க்கு இடையில், சீனா வெனிசுலாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. இந்த முதலீடு இரயில்வே மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளில் செய்யப்பட்டது. அதற்கு ஈடாக, வெனிசுலா சீனாவிற்கு எண்ணெய் வழங்குகிறது. கடந்த ஆண்டு, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 80% சீனாவிற்குச் சென்றது.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் வெனிசுலாவைப் பற்றியது மட்டுமல்ல, அது சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கின் மீதான தாக்குதல் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை டிரம்ப்பால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, பனாமா கால்வாயில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்களை விற்குமாறு ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்தார். அவை அமெரிக்க நிறுவனமான பிளாக்ராக்கிற்கு விற்கப்பட்டன.

இப்போது ஒரு இறையாண்மை கொண்ட நாடான கிரீன்லாந்திற்கு எதிராக எந்த காரணமும் இல்லாமல் விடுக்கப்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல், அமெரிக்காவின் புதிய ஏகாதிபத்தியப் பார்வைக்கு ஒரு சான்றாகவே உள்ளது. இந்த புதிய பார்வையில், அமெரிக்கா மற்ற நாடுகளின் இறையாண்மையை அங்கீகரிக்க மறுக்கிறது. ஒன்று, அவை அமெரிக்காவின் நீட்டிக்கப்பட்ட காலனிகளாகச் செயல்பட வேண்டும், அல்லது அதன் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும். வரிகள் விதிப்பது முதல் தடைகள் விதிப்பது அல்லது நேரடி இராணுவ நடவடிக்கை வரை, இதுவே அமெரிக்காவின் புதிய வெளியுறவுக் கொள்கையாகும்.

இந்த ஆட்டத்தில் ரஷ்யாவும் சீனாவும் பெரும்பாலும் எதிரிகளாக ஆனாலும், அவை ஒரு புகைத்திரையாகவே இருக்கின்றன; அதன் பின்னால் அமெரிக்கா தனது நலன்களைப் பின்தொடர்கிறது. அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இவை ஒரு நாட்டின் நியாயமான நலன்கள் கூட அல்ல, மாறாக ஒரு சில உயரடுக்கு நிறுவனங்களின் நலன்களே ஆகும். ஒருவேளை அதனால்தான், சிறந்த ஒப்பந்தங்களைச் செய்வதற்கு டிரம்ப் போன்ற ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் அவர்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கிறார் போலும்.

உன்னிப்பாகக் கவனித்தால், அமெரிக்க இராணுவம் அமெரிக்கத் தனியார் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிப்பதற்கும் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆன வேலையைச் செய்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் முதல் பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரை, அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஊக்குவிப்பாளர்கள் அதிகபட்ச லாபத்தை அறுவடை செய்ய விரும்புகிறார்கள்.

சர்ச்சைக்குரிய ‘அமைதி வாரியம்’ முன்முயற்சியானது, பல தசாப்த கால முயற்சியால் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் மீது ஒரு சில உயரடுக்கினரின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. நாடுகள் இந்த வாரியத்தில் நிரந்தர இடத்தைப் பெற 1 பில்லியன் டாலர் செலுத்தலாம் அல்லது 3 ஆண்டுகளுக்கு இலவசமாக அங்கு இருக்கலாம். டொனால்ட் டிரம்ப் வாழ்நாள் முழுவதும் அதன் தலைவராக இருப்பார். அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் இந்த வாரியத்தின் செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். ரஷ்யா கூட இந்த வாரியத்தில் உறுப்பினராக அழைக்கப்பட்டுள்ளது. இது உலகிற்கு என்ன செய்தியைச் சொல்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஐ.நா மற்றும் பிற சுதந்திரமான நிறுவனங்கள் இப்போது பொருத்தமற்றவையா? உலகின் பெருமுதலாளிகள் நேரடியாகத் தங்களை மோதல்களிலும், அதன் விளைவாக ஏற்படும் ‘ஒப்பந்தங்களிலும்’ திணித்துக்கொள்ளப் போகிறார்களா? இனப்படுகொலைகளின் மூலம் சுரண்டலை தீவிரப்படுத்துங்கள் என்றா? ஒழுக்கமும் மனிதநேயமும் காலாவதியாகிவிட்டன, முன்னேற்றம் மற்றும் புதுமைகளை மறந்துவிடுங்கள், இயற்கை மற்றும் பொது வளங்களைக் கைப்பற்றுங்கள், அடிமைத்தனமான நிலைமைகளில் மலிவான உழைப்பைக் கொண்டு அவற்றை நிரப்புங்கள் என்றா?

இந்த ஆண்டு, உலகம் தனது முதல் ‘டிரில்லியனரை’ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கோடீஸ்வரர்களும் பில்லியனர்களும் இந்த வாரம் டாவோஸில் கூடி, தங்களுக்குத் தொடர்ந்து பயனளித்து வரும் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். சரியான நேரத்தில் வெளியான ஆக்ஸ்பாம் அமைப்பின் ஒரு அறிக்கை, 2025-ல் பில்லியனர்களின் செல்வம் கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரியை விட மூன்று மடங்கு வேகத்தில் வளர்ந்து, 18.3 டிரில்லியன் டாலர் என்ற வரலாற்றிலேயே இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில், நான்கு பேரில் ஒருவருக்குத் தொடர்ந்து போதுமான உணவு கிடைப்பதில்லை, மற்றும் உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வறுமையில் வாழ்கின்றனர். இந்த அறிக்கை, தீவிரமான பொருளாதார ஏற்றத்தாழ்வு அரசியல் ஏற்றத்தாழ்வுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. இன்று, சாதாரண மக்களை விட பில்லியனர்கள் அரசியல் பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பு 4,000 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், அவர்கள் இந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்கள் செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் செல்வத்தை உருவாக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் பறிக்கின்றனர்.

டாவோஸில் கூடியுள்ள பணக்காரர்கள் தங்களுக்குப் பயனளிக்கும் அமைப்புகளை ஒருபோதும் கண்டிக்கப் போவதில்லை; மாறாக, மனிதகுல வரலாற்றில் இதுவே சிறந்த அமைப்பு என்று நமக்குக் கற்பிக்கும் மேலும் பல பொய்ப் பிரச்சாரங்களைத்தான் நாம் காணப்போகிறோம். இதன் விளைவாக, சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளான நேர்மையான போட்டி, தன்னார்வமிக்கப் பரிவர்தனை மற்றும் அரசாங்கத்தின் குறைந்தபட்ச தலையீடு ஆகியவை இந்தச் செயல்பாட்டில் நசுக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் இப்போது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளன. வளர்ந்து வரும் புதிய ஏகாதிபத்தியத்திற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா?

மொழியாக்கம்: தாமோதரன்

மூலம்: https://m.thewire.in/article/economy/worlds-elite-trump-greenland-venezuela-davos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here