இஸ்ரேலுடன் இணைந்து மரண வியாபாரியாக மாறிய அதானி!

2016ஆம் ஆண்டு மோடி தான்சானியாவிற்கு பயணம் மேற்கொண்டார். வழக்கம் போலவே அதானியின் நலனை மனதில் கொண்டு, தான்சானியாவின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

0
தேசங்கடந்த தரகு முதலாளி அதானி, காசாவில் நரவேட்டையாடும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வர்த்தக ஒப்பந்தம்

ந்தியாவின் பிரதமராக பாசிச மோடி பொறுப்பேற்றப் பிறகு, இஸ்ரேலுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இந்திய அரசு இத்தனைக் காலமும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் இருந்த பாரம்பரியத் தன்மை மீறப்பட்டு, அமெரிக்க அடியாளாக மத்திய கிழக்கில் செயல்படும் இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டியது மோடியின் பாஜக அரசு. இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்றப் ‘பெருமை’  மோடியையே சாரும்.

ஆயுத உற்பத்தியில் அதானி!

மோடி இஸ்ரேலுக்கு சென்று வந்த அடுத்த ஆண்டிலேயே (2018) இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிட் (Elbit Advanced Systems) நிறுவனத்துடன் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இணைந்து  ஹெர்ம்ஸ் 900 எனும் போருக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்களை(Drone) தயாரித்தது. இந்த வகை ட்ரோன்கள்தான் இஸ்ரேலியப் பாதுகாப்பு படைகளால் (IDF) கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காசா மீது குண்டு வீச அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்ததாக அதானி நிறுவனம் இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலைகள் (Israel Weapon Industries) எனும் நிறுவனத்துடன் இணைந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் PLR Systems என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளது. இதில் 51% பங்கைப் பெற்றுள்ள அதானி நிறுவனம் பல்வேறு வகையான நவீன இயந்திர துப்பாக்கி வகைகளை தயாரிக்கிறது.

மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிறிய வகை ஆயுதங்களை தயாரிக்கும் வகையில் மேற்கூறிய அதே IWI உடன் ஒப்பந்தம் செய்து குஜராத்தில் ARBEL எனும் ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையை அதானி நிறுவனம் நிறுவியுள்ளது. இதன் மூலம் இராணுவ ஆயுத தளவாட உற்பத்தியிலும் கால் பதிக்கும் அதானியின் “அடங்காத தாகம்” தணிந்துள்ளது. கூடுதலாக மோடி – அதானி எனும் குஜராத்தின் இரட்டையர்கள் குஜராத் மாநிலத்தை ஆயுத தொழிற்சாலையின் மையமாக முன்னேற்ற துடித்தனர். அவர்களின் கனவும் நனவாகியுள்ளது.

ஆயுதத் தளவாடங்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் போன்கள், கார்கள் மற்றும் ட்ரோன்களில் பயன்படும் நுண்ணிய சில்லுகள் எனப்படும் சிப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை செப்டம்பர் 2024 – ல் மகாராஷ்டிராவில் அதானி குழுமம் இஸ்ரேலின் டவர் செமி கண்டக்டர் எனும் நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ளது. இதற்காக அதானி குழுமம் 10 பில்லியன் டாலர்களை (சுமார் 84,000 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை செய்யும் மோடி!

ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளியான அதானியின் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க அனைத்து உதவிகளையும் செய்யும் மோடி, மறுபுறம் இஸ்ரேலுக்கு வெடி மருந்துகளை அனுப்புவதும் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. மே 2024 – ல் சென்னை துறைமுகத்தில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற கப்பலை ஸ்பெயின் கடற்கரையில் நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ஏராளமான வெடி மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் காசாவில் உள்ள நுசிராத் எனும் இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஐ.நா பாதுகாப்பு முகாம் மீது இஸ்ரேலிய ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் “மேட் இன் இந்தியா” என்று இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

இஸ்ரேலுடன் இணைந்து ஆயுதத் தளவாட உற்பத்தி மட்டுமா? அதானிதான் “துறைமுக ஸ்பெஷலிஸ்ட்” ஆச்சே. அதில் கை வைக்காமல் விடுவாரா என்ன? இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபாவின் நிர்வாகக் கட்டுப்பாட்டை சென்ற ஆண்டு அதானி குழுமம் கைப்பற்றியது. இந்த  நடவடிக்கையானது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மேற்கு ஆசியாவில் தனது இருப்பை வலுப்படுத்த முயன்ற அதானியின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

இஸ்ரேலின் ராணுவ தளவாட உற்பத்தியில் அதானியின் கூட்டுறவு ஏற்பட்ட நிகழ்வும், துறைமுகத்தை கைப்பற்றிய நிகழ்வும் சர்ச்சைகளை எழுப்பத் தவறவில்லை. இசுரேலின் சர்ச்சைக்குரிய இனவாத கொள்கைகளை மறைமுகமாக இந்தியா ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதானி எனும் தனியொரு முதலாளியின் நலனுக்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதுதான் கார்ப்பரேட் – காவி கூட்டுக் களவாணித்தனத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தான்சானியாவில் சீனாவுக்கு போட்டியாக களமிறங்கிய அதானி! 

தான்சானியா அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் சைனா மெர்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் (CMHI) மற்றும் ஓமன் நாட்டின் மாநிலப் பொது இருப்பு நிதி(SGRF) ஆகியவற்றோடு இணைந்து பாகமோயோ (Bagamoyo) துறைமுகத் திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டம் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான கண்டங்களை இணைக்கும் சீனாவின் புகழ் பெற்ற Belt and road initiative என்ற முன் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

மேலும் இது தான்சானியாவை கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக மாற்றுவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. அந்நாட்டின் ஜனாதிபதியாக ஜான் மகுபுலி 2015 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின் இந்தத் திட்டம் தான்சானியாவின் இறையாண்மையை பாதிக்கும் என்ற கவலையை அவர் வெளிப்படுத்தினார்.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கறார் பேர்வழி!

அவரது நிர்வாகம் சீனாவின் 99 ஆண்டு கால குத்தகை மற்றும் திட்டத்தின் உரிமைக் கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறியது. இந்த திட்டத்திலிருந்த சமனற்ற சில விதிமுறைகளை ஏற்க அவர் மறுத்துவிட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு நடந்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியுற்றதால் CMHI 2019 – ல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.


படிக்க: வங்கதேசத்தை வஞ்சித்த அதானி  மோடி கும்பல்!


இதற்கிடையில் 2016ஆம் ஆண்டு மோடி தான்சானியாவிற்கு பயணம் மேற்கொண்டார். வழக்கம் போலவே அதானியின் நலனை மனதில் கொண்டு, தான்சானியாவின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஜான் மகுபுலியிடம் மோடியின் பம்மாத்து எடுபடவில்லை.

இந்த அதிபரைப் பற்றி சுவாரசியமான பல தகவல்கள் உள்ளன. இவருக்கு “புல்டோசர் மனிதர்” என்ற அடைமொழி உண்டு. அவர் பாசிச பாஜகவைப் போல தமது அரசை விமர்சிக்கும், அதிலும் குறிப்பாக தமக்கு ஆகாத மதச் சிறுபான்மையினரின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளும் கொடூர செயலின் மூலமாக இழிபுகழைப் பெறவில்லை. மாறாக அமைச்சராக இருந்தபோது நாட்டில் தரமான சாலைகளை  அமைத்ததற்காக அந்தப் பெயரினைப் பெற்றார்.

இவர் அதிபரானப் பிறகு கார்ப்பரேட்  நிறுவனங்களின் வரியை உயர்த்தினார். மேலும் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை மேற்கொண்ட அவர், நாட்டில் விளிம்பு நிலை  மக்களின் நலனில் அதீத அக்கறை செலுத்தினார். சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனாலும் 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக 84 சதவீத வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.


படிக்க: சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் கௌதம் அதானியைக் காப்பாற்றும் பாசிச மோடி!


அந்த ஆண்டில்தான் உலகெங்கும் கொரோனா தொற்றும், அதையடுத்து பொது முடக்கமும் அரங்கேறியது. ஆனால் அவர் லாக்டவுன் எனும் பொது முடக்கத்தை ஏற்கவில்லை. ஆட்டிலிருந்தும், பப்பாளி பழத்திலிருந்தும் எடுக்கப்பட்ட சாம்பிள்களுக்கும் கோவிட் உறுதி என்ற முடிவைப் பார்த்து, கொரோனா தொற்றுக்கானப் பரிசோதனையைக் கேலி செய்த அவர், அந்தப் பரிசோதனையையே நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

அதேபோல கொரோனா தடுப்பூசிகள் குறித்தும் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.  2021 மார்ச் மாதம் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணத்துக்குப் பின்னால் மருந்து மாஃபியாக்களின் சதி இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. ஜான் மகுபுலிக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற சாமியா சுலுஹு ஹசன், வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில் அதானி போர்ட்ஸ்(Ports) நிறுவனம் தான்சானியாவில் முதலீட்டுக்கான திட்டங்களை அபுதாபி போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டது. அக்டோபர் 2023-ல் ஹசன் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை ‘மேம்படுத்தும்’ நோக்கில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பாகாமோயோ துறைமுகத்தைத் தவிர தான்சானியாவில் டார் எஸ் சலாம் (Dar es salaam) என்ற மற்றொரு பெரிய துறைமுகம் உள்ளது. மே 2024 – ல் அதானி இன்டர்நேஷனல் போர்ட்ஸ் என்ற நிறுவனம் இத் துறைமுகத்தின் ஒரு கொள்கலன் முனையத்தை இயக்கி நிர்வகிப்பதற்கு 30 ஆண்டுகால ஒப்பந்தத்தைப் பெற்றது.

அக்டோபர் 3, 2024 அன்று வெளிவந்த ப்ளூம்பெர்க்கின் அறிக்கை, தான்சானியா அரசாங்கம் உயர் மின்னழுத்த பாதைகளை அமைப்பதற்கான 900 மில்லியன் டாலர் பொது- தனியார் கூட்டு திட்டத்திற்காக (PPP) அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தது. ஜான் மகுபுலியை ஆதரித்த அந்நாட்டு மக்கள் இதுபோன்ற கூட்டுக் கொள்ளையை அனுமதிக்க மாட்டார்கள்.  விரைவில் அதானி குழுமத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுக்கும் என நம்புவோம்.

தொடரும்…

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here