உலகம் முழுவதும் முதலாளித்துவ ஜனநாயகம் தோல்வியடைந்து, பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற சூழலில், அதற்கு எதிராக போராடுகின்ற கம்யூனிச இயக்கங்களில் பல்வேறு விதமான போக்குகள் நிலவுகிறது என்பது உண்மையாகவே சமூகத்தை நேசிக்கின்ற பாட்டாளி வர்க்கத்திற்கு சிறிது தயக்கத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான்.
ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்களான காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரும் இணைந்து 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே உலகில் நிலவுகின்ற பல்வேறு விதமான சோசலிச போக்குகளை அம்பலப்படுத்தினார்கள். தோழர் ஏங்கெல்ஸ் ’கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற தனது நூலில் பல விதமான சோசலிசத்தின் கற்பனைத் தன்மைகளையும், பொருளுற்பத்தி முறைக்கு கட்டுப்படாத கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தில் ஒற்றுமை, ஐக்கியம் மற்றும் சோசலிசத்தை உருவாக்கு கின்ற முயற்சிகளை அம்பலப்படுத்தி எழுதினார்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடப்படும் சோசலிசத்தின் மூன்று முக்கிய வகை பிரிவில், முதலாவது வகையான பிரபத்துவ சோசலிசம் எவ்வாறு இருந்தது; இரண்டாவது வகையான ’மெய்யான சோசலிசம்’ எவ்வாறு இருந்தது என்பதையும், அறிவியல் பூர்வமான விஞ்ஞான சோசலிசம் எவ்வாறு இருந்தது என்பதையும் புரிந்து கொண்டால்தான் கம்யூனிஸ்டுகள் எந்த நாட்டில் செயல்பட்டாலும், அந்த நாட்டின் வரலாற்று பொருள் முதல்வாத பார்வையில் சமூக பொருளாதார உற்பத்தி முறையிலான கட்டுமானங்களை புரிந்து கொள்ள முடியும் என்பது தான் இன்றைய பாட்டாளி வர்க்கத்தின் உலக கண்ணோட்டமாக இருக்க முடியும்.
1990 களில் ரசியாவில் ஏற்பட்ட அதிகாரப்பூர்வமான சோசலிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையையும், புரட்சியின் மீது தர்க்க ரீதியான பல கேள்விகளையும் எழுப்புகின்ற ’குட்டி முதலாளித்துவ-மார்க்கிய அறிஞர்கள்’ புறநிலையில் நடக்கின்ற மாற்றங்களை பற்றி பிரமிப்பு அடைகின்றனர்; கற்பனைக்கு எட்டாத ஜெட் வேகத்தில் உற்பத்தி முறைகள் மாறுவதாக பிதற்றுகின்றனர்.
இந்த அபத்த போக்குகளை எடுத்துக் கூறினால், மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்கி எடுத்துச் சொன்னால் அதன் மீது மரபு வழி மார்க்சியம் என்று முத்திரை குத்தி, தாங்கள் ஏதோ நவீன மார்க்சியம் ஒன்றை உருவாக்கிவிட்டது போல எகிறிக் குதிக்கின்றனர்.
படிக்க: மே 5 : அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவு கட்ட காரல் மார்க்சின் பிறந்த நாளில் உறுதியேற்போம்!
உலக வரலாற்றை அதன் இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், மார்க்சிய ஆசான்கள் எழுதிய நூல்களில் இருந்தும் தேடுவதை காட்டிலும் மார்க் ஜூகன் பெர்க் உருவாக்கிய முகநூல் பக்கங்களிலிருந்தும், வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் உண்மைகளை தேடுவதால் தற்போதைய இளைய தலைமுறையினர் சித்தாந்த குழப்பத்திற்கும், அவநம்பிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது உண்மைதான்.
பல நூற்றாண்டுகளாக உலகிலுள்ள மக்களை பல்வேறு நாடுகளின் அரசர்கள் என்ற போர்வையில் ஆண்டு வந்த மன்னராட்சி அதாவது சமூகத்தில் மேன்மக்கள் என்று அழைத்துக் கொள்ளப்படும் பிரபுக்களின் ஆட்சி முடிவுக்கு வந்த போது, நீண்ட நாள் அதிகாரத்திலிருந்து பிரபுக்கள் தனது அதிகாரத்தை இழப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
”பிரபு குலத்தவர் தன் மீது அனுதாபம் உண்டாகும்படி செய்யும் பொருட்டு வெளிப்பார்வைக்கு தமது சொந்த நலன்களை மறைத்து, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே கருதுவோராய், முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான தமது குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பிரபுத்துவ சோஷலிசம் பற்றி முன்வைக்கின்றனர்.
”கிறிஸ்தவ துறவு மனப்பான்மைக்கு சோசலிச சாயமிட்டு காட்டுவதை விட எளியது எதுவும் இல்லை, தனிச் சொத்தையும், திருமணத்தையும், அரசையும் எதிர்த்து கிறிஸ்தவம் கண்டனம் முழக்கமிடவில்லையா? இவற்றுக்கு பதிலாக அது பரோபகாரத்தையும், வறுமையையும், பிரம்மச்சரியத்தையும், ஊன் ஒடுக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும் புனித மாதாவாகிய சமய சபையையும் போற்றி உபன்யாசம் புரியவில்லையா? பிரபுத்துவ கோமானுடைய மனப் புகைச்சலைப் புனிதம் பெற செய்வதற்காக சமய குரு தெளித்திடும் புனித தீர்த்தமே கிறிஸ்தவ சோசலிசம் என்று அதன் உண்மைத் தன்மையை தோலுரிக்கிறது.
”முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்ப் பாட்டாளி வர்க்கத்தை ஆதரித்த எழுத்தாளர்கள், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தமது விமர்சனத்தில் விவசாயிகளும் குட்டி முதலாளித்துவ பகுதியோருமானவர்களது பார்வையைப் பயன்படுத்த நேர்வதும், இந்த இடைத்தட்டு வர்க்கங்களது நோக்கு நிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காக வாதாட முற்படுவதும் இயற்கையே. இவ்வாறு எழுந்தது தான் குட்டி முதலாளித்துவ சோசலிசம்”. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன் வைக்கப்பட்ட இந்த பிரிவினரை இன்றளவும் நாம் பார்க்கிறோம்.
”எதேச்சதிகார அரசாங்கங்களுக்கும், அவற்றின் பாதிரிமார்களுக்கும், பேராசிரியர்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தம்மை அச்சுறுத்திய முதலாளி வர்க்கத்திடம் காட்டி மிரட்டுவதற்கு ஏற்ற கிளியூட்டும் பொம்மையாய்” இந்த ஜெர்மன் சோசலிசம் பயன்பட்டது. இதுவே ’மெய்யான சோசலிசம்’ என்று கிண்டலடித்தனர்.
”முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் பகுதியை சேர்ந்தவர்களே பொருளியலாளர்களும், கொடை வள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித்துறையாளரும், ஜீவகாருண்ய சங்கத்தாரும், மது குறைப்பு வீரர்களும், எல்லா விதமான துக்கடா சீர்திருத்தக்காரர்களும் இந்த முதலாளித்துவ சோசலிசத்தின் முழு நிறை தத்துவ அமைப்புகளாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.” இது தான் முதலாளித்துவ சோசலிசத்தின் முக்கிய அம்சமாகும்.
இன்று கம்யூனிசத்திற்கு எதிராக கூச்சலிடும் ஆகப்பெரும்பான்மையினர் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் முதலாளித்துவத்தின் யோக்கியதை என்ன என்பதை பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே ஆசான்கள் தோலுரித்துக் காட்டி விட்டனர். ”தடையில்லா வாணிபம் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக, காப்பு, சுங்க வரிகள் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக, சிறை சீர்திருத்தம் தொழிலாளி வர்க்க நலனுக்காக, இதுதான் முதலாளித்துவ சோசலிசத்தின் இறுதி நிலையை குறிக்கும் சொல், விளையாட்டாய் அமையாத ஒரே சொல்” என்று தங்களது ஒவொவ்ர்ரு நடவடிக்கையும் பாட்டாளிகளின் நலந்தான் என ஜம்பமடிக்கின்றனர்.
இந்த பலரக சோசலிசத்திற்கு மத்தியில், ”நகரத்துக்கும் கிராமத்துக்கும் உள்ள பாகுபாட்டையும், குடும்ப அமைப்பையும், தனியார்களின் நலனுக்காக தொழில்கள் நடத்தப்படுவதையும், கூலி உழைப்பு முறையையும் ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவை பிரகடனம் செய்தல், அரசின் செயற்பாடுகளை பொருளுற்பத்தியை மட்டும் மேற்பார்வையிடுதலாய் மட்டும் மாற்றி விடுதல் ஆகிய இத்தகைய திட்டங்கள் யாவும் வர்க்க பகைமைகள் மறைந்து போவதை மட்டும் குறிப்பெணவாய் இருக்கின்றன’ என்பதை முன் வைக்கின்றது விஞ்ஞான சோசலிசம்
பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து மக்களிடையே நிலவி வந்த பல்வேறு விதமான உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகளை பாதுகாக்கின்ற கருத்துகள், நிறுவனங்கள், கற்பனையான வகையில் ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்கு பலவிதமான கற்பனாவாத சோசலிச கருத்துக்களை முன்வைத்த காலத்தில் விஞ்ஞான சோசலிசத்தை முன் வைத்தவர்கள் தான் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்களான காரல் மார்க்சும், பிரடரிக் ஏங்கெல்சும்.
இன்று தோழர் ஏங்கெல்ஸ் நினைவு தினத்தில் வர்க்க பகைமைகள் தீர்க்கப்படும் வரை கம்யூனிசமே நமக்கு வழிகாட்டும் சித்தாந்தம் என்பதை ஓங்கி ஒலிப்போம்.
பொதுவாக கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் என்று கற்பனையாக நாம் கருதிக் கொள்வதைக் காட்டிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி புரட்சியை முன்னெடுத்துச் செல்கின்ற கம்யூனிஸ்டுகள் மட்டுமே முன்னேறிச் செல்வார்கள் என்பதை பல ரக கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சித்தாந்த போராட்டத்தின் மூலம் உண்மையான ஐக்கியத்தை உருவாக்குவோம்.
முகம்மது அலி.