பத்திரிக்கைச் செய்தி
நாள் 19-5-2022
சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் விதித்த தடையை அகற்றி தமிழக அரசு உத்திரவு!
தமிழ் வழிபாட்டு உரிமைக்காக சிதம்பரத்தில் மக்கள் அதிகாரம் மட்டுமல்ல பல்வேறு இயக்கங்களின் மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!.
இன்று 19-5-2022 அன்று மாலை 04:00 மணிக்கு அரசாணைப்படி பக்தர்களுடன் சிற்றம்பல மேடையில் வழிபட செல்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய தமிழக அரசு , சிதம்பரம் கோவிலை நிரந்தரமாக தீட்சிதர்களிடமிருந்து மீட்டு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.
கோவில் உட்புறம் தீட்சிதர்கள் எழுப்பி வரும் சட்டவிரோத கட்டுமானங்களை உடனே நிறுத்த வேண்டும். கோவிலை வைத்து பெரும் பணக்காரர்களிடம் கணக்கின்றி வசூலித்த பல கோடி நன்கொடை வரவு செலவு பற்றி தணிக்கை செய்வதுடன், நடராசர் கோவிலில் மீண்டும் உண்டியல் வைத்து உரிய வகையில் வருமானத்தை பெறுவது, அர்ச்சனை சீட்டு முறை கொண்டு வந்து அனைத்து பக்தர்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சிதம்பரம் நடராசர் கோவில் அரசு கோவில். அதாவது பொது மக்கள் சொத்து, தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல. அதை பாதுகாப்பது அனைவரின் கடமை ஆகும். எனவே பொது மக்கள் சிதம்பரம் கோவில் தொடர்பான தீட்சிதர்களின் நிதி முறைகேடுகள், கோவில் சொத்து விற்பனை, நிர்வாக முறைகேடுகள், சில தீட்சிதர்கள் லட்சாதிபதிகளாகவும், சில தீட்சிதர்கள் வறுமையில் இருப்பது தொடர்பாகவும், என அனைத்து விபரங்களையும், தமிழக அரசு அமைத்த விசாரணை குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம் உங்களுக்கு துணையாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.