ஓயாத மோடியின் வாய்சவடால்! சாதித்தது என்ன?


மது “56 இன்ச்” மோடி 75 வது சுதந்திர தினத்தில் உணர்ச்சிகரமாக  பேசி பொளந்து  கட்டியிருக்கிறார். அவரது பேச்சின் சாரத்தை சுருக்கமாக கூறினால்  “அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டில் பாலாறும் தேனாறும்  ஓடப் போகிறது” என்கிறார்.

ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளில் மோடி பேசும்போது பல வாக்குறுதிகளை ஆறுகளாக ஓட விட்டிருந்தார். அந்த வாக்குறுதிகளின் நிலை என்ன என்பதை  அலசினால் தற்போதைய சொற்களின் மதிப்பை புரிந்துகொள்ள முடியும்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப் பாக்கிய கதை

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சத்தியம் செய்தார் மோடி. சத்தியம் என்ன ஆனது? அரசாங்கத்தின் தரவுகள்  இந்திய விவசாயிகள் நாள் ஒன்றுக்கு ரூ.27 சம்பாதிப்பதாக தெரிவிக்கின்றன. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கடந்த ஆண்டுகளில் 2.8% உள்ளது. 10  சதவீதத்திற்கும் மேலாக இந்திய பொருளாதாரம் வளர்ந்தால் தான் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்பதுதான் எதார்த்தம்.

இது எப்போது சாத்தியமாகும் என்பது அந்த அயோத்தி  ராமனுக்குத்தான் வெளிச்சம்.

வீடற்றவர்களுக்கு வீடு கட்டிய கதை!

2018 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‘ 2022 ஆம் ஆண்டுக்குள் இல்லாத அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்து விடுவோம்’  என்று வாய்ச்சவடால் அடித்தார். அதை நிறைவேற்றினாரா என்றால் இல்லை.

 

வீடு கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை, அதாவது 50 சதவீதம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்று பிரதமர் ஆவாஸ் யோஜனா (நகர்புற) டேஷ்போர்டு கூறுகிறது. எப்போது கட்டிமுடிப்பார்களாம் என்று கேட்டீர்களானால் …  நீங்கள் தான் ஆன்ட்டி இந்தியன்,  அர்பன் நக்சல். உங்கள் வீடுகளை இடிக்க புல்டோசர் வரும்.

மின்சாரம்,தண்ணீர், கழிப்பறை வழங்கிய கதை

‘2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மின்சாரம் தண்ணீர் கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்’ என்று 2014 ஆம் ஆண்டில் மோடி உறுதியளித்தார்.

தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பூர்வீக கிராமத்துக்கு, ஜனாதிபதி தேர்தலில் அவர் வேட்புமனு தாக்கல்செய்யும் நாள் வரையில்கூட மின்சாரம் வரவில்லை (தற்போதாவது வந்துள்ளதா என்பது தெரியவில்லை) என்பதிலிருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் எந்த அளவிற்கு மின்சாரம் கிடைக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மின்சாரம் தான் கொடுக்கவில்லை தண்ணீரையாவது அனைவருக்கும் கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை.

80 சதவீத இந்தியர்கள் ‘விஷம்’ கலந்த நீரைத்தான் குடிப்பதாகவும்  சுமார் 48% கிராமப்புர வீடுகளுக்கு மட்டுமே குழாய்களில் நீர் வழங்கப்படுவதாகவும் ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகமே தெரிவித்துள்ளது.

தண்ணீரைக் கூட நாட்டு மக்களுக்கு தர முடியாத மோடி அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருப்பார் என்று யாரும் நம்ப மாட்டார்கள் என்பது தெரிந்ததுதான்.

தெற்காசிய தொழிலாளர் வலை பின்னல் (South Asian labour network) என்ற அமைப்பு 2021 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின் மூலம் 45 சதவீத இந்தியர்கள் திறந்தவெளிகள் தான் மலம் கழித்து கொண்டு இருப்பதாக தெரிய வருகிறது.

12 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிவறைகளை கட்டாமலேயே கட்டியுள்ளதாக கணக்கு எழுதி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தியர்களுக்கு ஊட்டச்சத்து ஊட்டிய கதை!

விலை உயர்ந்த காளானை உண்டு ஊட்டச்சத்துடன் வலம் வருபவர் மோடி . ஒரு நாள் உணவிற்காக மோடி மோடி செய்யும் செலவு பல லட்சம் என்று குற்றம் சட்டப்படும் நிலையில் அதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பவர் தான் மோடி. அப்படிப்பட்ட மோடி

‘2022 ஆம் ஆண்டிற்குள்  ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’  என்று கூறிக்கொண்டு 2018ல் “பிரதமர் போசன் அபியான்” திட்டத்தை   துவைக்கினார்.  2019-21 காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு -5ன்  (National Family Health Survey-5) மூலம் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக  பெண்கள் மத்தியில் ரத்த சோகை பாதிப்பு 7.5% அதிகரித்துள்ளது. இதைவிட கொடுமை,

கைக்குழந்தைகள் மத்தியில் ரத்த சோகை பாதிப்பு 14.5% அதிகரித்துள்ளது.

அடுத்து, “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம்  உற்பத்தி, வேலைவாய்ப்பு வளர்ந்து இந்தியர்களின் வாழ்வு செழிக்கும் கதையை பார்ப்போமா?

“அய்யய்யோ…. இப்பவே கண்ண கட்டுதே,  பார்த்த வரைக்கும் போதும்பா” என்கிறீர்களா?

makeinIndia

பிறகு எந்த தைரியத்தில்  “இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும்” என்று மோடி தனது சுதந்திர தின உரையில் முழங்கியுள்ளார்?

மோடி யின் பேச்சைக் கேட்கும் பெரும்பான்மை மக்கள் சரி தவறை பிரித்தறியத் தெரியாதவர்கள். அப்படி பிரித்தறிந்திடத் தெரிந்தவர்களில் பெரும்பான்மையினர் மோடி கூறும் பொய்யை பிறருக்கு எடுத்துக்கூறும் தன்மை இல்லாதவர்கள் என்ற தைரியத்தில் தான் மோடி பொய் கொண்டிருக்கிறார்.

பாசிஸ்டுகளின் பலம் மக்களின் அறியாமையில் இருக்கிறது. பாசிஸ்டுகளின் பலம்  உண்மை விபரம் அறிந்த மக்களின் மௌனம்.

மௌனத்தை கலைப்போம்!

பாசிச  மோடியின் முகத்திரையை கிழிப்போம்!!

  • பாலன்

செய்தி ஆதாரம்: https://m.thewire.in/article/government/india-75-its-time-to-take-stock-of-promises-that-modi-said-would-be-achieved-by-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here