தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்.

(TNGDA)

பெறுநர்,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
கோட்டை,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் –
வேலூர் மாவட்டம் , பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பணியிட மாற்றம் அறிவிப்பு.

வேலூர் சுகாதார மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் நடத்திய ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலரையும் மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தனது வருத்தத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.
எந்தவித விசாரணை இன்றி கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதாலும், Anti Snake Venom இல்லாததாலும், எக்ஸ்ரே மெஷின் உரிய கட்டிடத்தில் நிறுவபடாதலாலும், மருத்துவர்களை இடமாற்றம் செய்திருப்பது ஒரு தவறான நடவடிக்கை ஆகும்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கி வரும் தமிழக அரசு, சீராக உரிய நிர்வாகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அண்மை காலமாக சுகாதாரத்துறையில் நடந்து வரும் நிர்வாக குளறுபடிகள், எந்தவித வரைமுறையுமின்றி துக்ளக் தர்பார் போல நடைபெற்று வருகிறது.

இடமாற்ற சம்பவத்தில் முக்கிய உண்மைகளை கீழே கொடுத்து இருக்கிறோம்.

1. பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாகும். அங்கு 5 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரண்டு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது இருப்பினும் மூன்று மருத்துவர்கள் மட்டுமே வைத்து அங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

2- பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் 50 வருடங்களுக்கு மேலான கட்டிடங்கள் ஆகும். அந்தக் கட்டிடங்களை புனரமைப்பதற்காகவும் புது கட்டிடங்கள் வேண்டியும் பலமுறை வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குனருக்கும் பொதுப்பணி துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. தற்பொழுது கூட அங்கு பொதுப்பணித்துறை மூலமாக புனரமைப்பு பணி நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதற்காக மருத்துவ அலுவலர்களை இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

3- எக்ஸ்ரே உபகரணம் உபயோகத்தில் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே உபகரணம் இருந்தாலும் அதனை நிறுவுவதற்கு ஏதுவான கட்டிடம் இல்லாததால் தான் அதனை உபயோகத்திற்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் எக்ஸ்ரே உபகரணம் நிறுவுவதற்கு முறையான கட்டிடம் வேண்டி வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குனருக்கும் பொதுப்பணித்தறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

4- ANTI SNAKE VENOM மருந்து இல்லை என்று குற்றம் சம்பந்தப்பட்டிருக்கிறது. தற்பொழுது TNMSC யில் ANTI SNAKE VENOM இருப்பு இல்லை என்பதே உண்மை . Anti snake venom மருந்து செலுத்துவதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உகந்த இடம் இல்லை என்பது தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் கருத்து. ஏனெனில் அம்மருந்து மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை சமாளிப்பதற்கு போதிய வசதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை.

பாம்பு கடி விஷத்தில் மூன்று வகை உண்டு.
1. ஒன்று விஷம் இல்லாதது ( 50 சதவீத பாம்பு கடிகள் விஷமில்லாதவை). 2. இரண்டாவது Haemotoxic எனக் கூறப்படும் ரத்தத்தை உறைய விடாமல் செய்யும் விஷ தன்மை கொண்டது. இவை சுமார் 40 சதவிகிதம். 3. மூன்றாவது Neurotoxic எனக் கூறப்படும் நரம்புகளை செயலிழக்க வைக்க கூடிய விஷத்தன்மை கொண்டவை. இவை சுமார் 10%. இவற்றில் மிக ஆபத்தான ஒரு மணி நேரத்திற்குள் Anti snake venom செலுத்தப்பட வேண்டிய Neurotoxic வகைகளுக்கு மட்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படலாம். Haemotoxic எனும் ரத்தத்தை உறையவிடாமல் செய்யும் விஷக்கடிக்கு ஆறு மணி நேரத்திற்குள் Anti snake venom செலுத்தினால் போதுமானது. அவ்வாறான விஷக்கடிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கோ, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கோ பரிந்துரைப்பதே சரியான முறையாகும்.

4- பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் இருக்கும் மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு சமூக விரோதிகளால் தொடர்ச்சியாக தொந்தரவு இருந்து வருகிறது. இதற்காக மருத்துவ அலுவலரால் காவல்துறையில் பாதுகாப்பு வேண்டி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கும் கிராமத்திலேயே தங்கி 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு நிர்வாகமே கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நிகழ்வுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை மக்கள் முன் பலிகடாவாக ஆக்கி தங்கள் தவறுகளை மறைக்க முயல்கிறது.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பின்வரும் கேள்விகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1- பாழடைந்த பழைய கட்டிடங்களை புதுப்பிப்பது யாருடைய கடமை?

துறை / உயர் அலுவலர்கள்/ மாவட்ட நிர்வாகம்/ அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகள்/.

பலமுறை கடிதம் எழுதிய பின்னும் மருத்துவ அலுவலர்களை எவ்வாறு பொறுப்பாக்கலாம்?.

2- எக்ஸ்ரே கருவி நிறுவப்படவில்லை

எக்ஸ்ரே கருவி கதிர்வீச்சு விதிகளின்படி உள்ள முறையான கட்டிடத்தில் மட்டுமே நிறுவப்பட வேண்டும்.

அவ்வாறு நிறுவப்பட்டால் மட்டுமே Xray உபகரணம் உபயோகிக்க அனுமதி பெற முடியும். இதற்காக கட்டிடம் வேண்டி பலமுறை கடிதம் எழுதிய மருத்துவ அலுவலர் எவ்வாறு பொறுப்பாவார்?.

3- Anti snake venom ஸ்டாக் இல்லை யார் பொறுப்பு?

கடந்த சில நாட்களாக Anti snake venom TNMSC யில் ஸ்டாக் இல்லாத நிலையில் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்டாக் வைக்க இயலவில்லை. Anti snake venom சென்னையில் இருந்து தான் TNMSC க்கு வழங்கப்பட வேண்டும்.

4- 24 மணி நாலு மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு வட்டாரத்திற்கு ஒன்று என இயங்கி வருகிறது. இந்நிலையில் ஒரே வட்டாரத்தில் இரண்டு மேம்படுத்தப்பட்ட (24 மணி நேர) ஆரம்ப சுகாதார நிலையங்கள் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் வற்புறுத்தலால் இயங்கி வருகின்றன. ஒரே வட்டாரத்தில் இரண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பின் அவற்றில் ஆள் பற்றாக்குறை ஏற்படுவது இயற்கை. இது யாருடைய தவறு?.

மேற்கூறிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பணி பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மாறாக அரசு பணியாளர்களை காட்டிக் கொடுப்பது என்ற நிலை தொடருமாயின் அது அரசுக்கே விபரீதமாய் முடியும்.

இந்த உண்மைகளை மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக விசாரித்து அறிந்து அறிவித்த பணி மாற்ற உத்தரவுகளை உடனடியாக கைவிட வேண்டும்.

பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 4 அன்று நடைபெற்ற நிகழ்வுகளை, மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று, அரசு மருத்துவஅலுவலர் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதனையும், அவர்களை மூத்த அமைச்சர் கண்ணியம் குறைவாக நடத்துவது மொத்த அரசு பணியாளர்களையுமே demoralise செய்து ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை பாதிக்கும் என்றும் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் மீது முழு நம்பிக்கையுடன்

தலைவர்,
செயலாளர்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்.

நகல்

1. மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சர் அவர்கள், தமிழக அரசு, சென்னை

2. முதன்மை செயலர், மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை, தமிழக அரசு, சென்னை

3. இயக்குனர் அவர்கள்,

பொது சுகாதாரத்துறை, சென்னை

முகநூல் பகிர்வு

  • டாக்டர் அனுரத்னா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here