கொரோனா தடுப்பூசியின் பின்னே ஒளிந்திருக்கும் உண்மைகள்!

கொரோனா வைரஸின் புது வடிவான கோவிட் -19 தோன்றி இரண்டாண்டுகள் கடந்து விட்டது. இதற்கான தடுப்பூசியை ஓராண்டுக்கு மேலாக மக்களுக்கு செலுத்திக் கொண்டு வருகிறார்கள்.

தடுப்பூசி எப்படி நோயை தடுக்கிறது?

ஒரு நோயை உருவாக்கும் கிருமியை அழிக்கக் கூடிய மருந்தை தடுப்பூசிகளில் பயன்படுத்துவதில்லை. மாறாக அந்த நோயை உருவாக்கும் கிருமியையே வீரியமிழக்கச் செய்து உடலுக்குள் செலுத்துகிறார்கள். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் இதனை அழிக்கும் வல்லமை பொருந்திய எதிர் உயிரியை ( Anti body) உற்பத்தி செய்து அதை நிர்மூலமாக்குகிறது. பிறகு உண்மையில் அக்கிருமி உடலில் நுழைந்தாலும் ஏற்கனவே உள்ள எதிர் உயிரியைக் கொண்டு எளிதில் காலி செய்து விடுகிறது. இப்போது புழக்கத்தில் உள்ள தட்டம்மை, போலியோ, மூளைக் காய்ச்சல் போன்ற பல்வேறு தடுப்பூசிகள் 5 முதல் 10 ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப் பட்டன. இருப்பினும் இத்தடுப்பூசிகளில் சேர்க்கப்படும் பாதரசம் உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்களால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்க முடிவதில்லை.

கொரோனா தடுப்பூசிகளில் உள்ள கூடுதல் சிக்கல்கள்!

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக இப்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பவை பரிசோதனை தடுப்பூசிகள்(Experimental Vaccines)தான். எலிகள் போன்ற உயிரினங்களில் சோதனை நடத்த அவகாசம் இல்லை என்பதற்காக நேரடியாக மக்களின் மீதே சோதனை நடத்தப்படுகிறது. ஒரு தடுப்பூசி, வெகுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தி, பெரிய அளவிலான பக்க விளைவுகள் இல்லை என உறுதி செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த கொரோனா தடுப்பூசிகள், அவசர கால அனுமதி அளிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப் பட்டு வருகின்றன.

இதுகுறித்து நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டின் வைரஸ் ஆய்வாளர் டாக்டர். லூக் மாண்டேக்னிர்(Dr.Luc montagnier) கூறுகையில், “பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசியை பெருமளவில் மக்களுக்கு போடுவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவ தவறும் ஆகும். தடுப்பூசி போட்ட அவர்களின் உடலில் உயிர் வாழ தன்னை மாற்றிக் கொண்டு அது தீவிர வைரஸாக மாறுகிறது” என்றார். பொதுவாக பாக்டீரியாக்கள் உருமாறும் தன்மையற்றவை. ஆனால் வைரஸ் இயல்பாகவே உருமாறும் தன்மையுடையது என்பதால் தடுப்பூசிகளுக்கு எதிராக மேலும் வீரியமான வைரஸாக மாறும் என்பதே உண்மை.

Dr.Luc montagnier

இந்த கொரோனா தடுப்பூசியை ஆராய்ந்த அமெரிக்க நுண் உயிரியல் ஆய்வாளர் Dr. ராபர்ட் ஓ யங் ( Robert O young ) என்பவர், அதிலுள்ள நானோ துகள்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி நினைவாற்றலை சீர்குலைக்கும் என்றும், கிராபைன் ஆக்சைடு (Graphene oxide) துகள்கள் இரத்த உறைதலை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை எனவும் எச்சரித்தார்.

அடுத்து, இதுவரை புழக்கத்தில் உள்ளவை DNA வகை தடுப்பூசிகள். ஆனால் கொரோனா ஊசிகள் RNA வகையை சார்ந்தவை. இவை மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை என அதை கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானியான Dr. ராபர்ட் மலோன் ( Robert Malone) கூறுகிறார். மேலும், இது மூளை, நரம்பு மண்டலம், இதயம், இரத்தக் குழாய்கள், இனப்பெருக்க உறுப்புகளை பாதிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையையே மாற்றி அமைக்க கூடும்.மேலும் இது குழந்தைகளின் முக்கிய உறுப்புகளை நிரந்தரமாக சிதைத்து, மீட்கவே முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.

தடுப்பூசியின் பக்க மற்றும் பின் விளைவுகளுக்கு பொறுப்பேற்பது யார்?

அவசரகதியில் தயாரிக்கப்பட்டு, முழுமையான சோதனைகள் முடியும் முன்பே உடல்நிலைகளை கருத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் குத்துகிற நிலையில், அறிஞர்கள் பலரும் எச்சரித்தவாறே தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவேக்கன் இந்தியா இயக்கம் (Awaken India Movement) எனும் அமைப்பானது, தடுப்பூசி செலுத்தத் துவங்கிய நாளிலிருந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியான தடுப்பூசி மரணங்களை பதிவு செய்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 12,615 மரணங்கள் இவர்களது கவனத்துக்கு வந்துள்ளன. 15 – 18 வயது மாணவர்களில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இப்படி பதிவு செய்யப்படாத மரணங்கள் எத்தனையோ? இது தவிர, பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி துன்பப்படுபவர்கள், செய்வதறியாது தவித்து வருகின்றனர். இத்தகைய பக்க மற்றும் பின்விளைவுகளுக்கு தடுப்பூசி கம்பனிகளோ, அரசோ, காப்பீட்டு நிறுவனங்களோ பொறுப்பேற்க மறுக்கின்றனர். கேட்டால் இது விரும்பி போட்டுக் கொள்ளக் கூடியதுதான், எனவே இழப்பீடு கோர முடியாது என்கின்றனர். ஆனால் மறைமுகமாக அனைத்து வழிகளிலும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

தடுப்பூசியின் பக்க விளைவுகள் AEFI (Adverse Events Following Immunisation) எனும் வழிமுறை மூலம் பல்வேறு வளர்ந்த நாடுகளில் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப் படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதெல்லாம் நடப்பதில்லை. மருத்துவர்களுக்கே இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் பொதுமக்களுக்கு எப்படி தெரியும்? வளர்ந்த நாடுகளில் AEFI மூலமாக, இதய வீக்கம் (Myocarditis), இரத்தக் கசிவு (thrombocytopenia), இரத்தம் உறைதல் (Intravascular coagulation) நரம்பு சிதைவு (Gullian- Barre Syndrome) உள்ளிட்ட பல பாதக விளைவுகளால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட்டு மரணம் உள்ளிட்ட ஏராளமான உடல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தடுப்பூசிகள் நோயை உண்மையில் தடுக்கின்றதா?

இத்தடுப்பூசியிலுள்ள அடுத்த பிரச்சினை இது தொற்று பாதிப்பை தடுக்காது என்பதுதான்.
இது குறித்து Dr. கீர்ட் வாண்டன் போச் ( Geert Vandon Bosche) – இவர் பில்கேட்சுடன் Global Alliance for Vaccine & Immunisation எனும் அமைப்பில் இணைந்து பணியாற்றிய தடுப்பூசி மற்றும் வைரஸ் ஆய்வாளர் – கூறுகையில்
” நோய் பரவலை தடுக்காத ஊசிகளை பயன்படுத்தவே கூடாது. அப்படி பயன்படுத்தினால் இதை முடிவுக்கு கொண்டுவரவே முடியாது. சாதக, பாதக கணக்கின் அடிப்படையில் பார்த்தால் சாதகங்களை விட பாதகங்களை அதிகமாகும் வாய்ப்புள்ளது. இது வரலாற்றில் மாபெரும் குற்றமாகும் இதனால் மந்தை எதிர்ப்பாற்றல் உருவாகாது. எந்த சூழலிலும் இதை குழந்தைகளுக்கு அனுமதித்து விடாதீர்கள்” என்கிறார். தடுப்பூசி தயாரித்துள்ள கார்ப்பரேட் கம்பனிகளும், உலக சுகாதார அமைப்பும் ( WHO) சொல்கிறபடி, அடுத்தடுத்து ஊசிகளும், பிறகு பூஸ்டர் டோஸ்களும் ஆண்டு தோறும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி பூஸ்டர்கள் போட்டும் தொற்றையோ, உயிரிழப்பையோ தடுக்க முடியவில்லை என்பதையே நடைமுறை நிரூபிக்கிறது. கிட்டத்தட்ட 100 சதம் தடுப்பூசி சாதனை படைத்த கேரளாவில் பிப்ரவரி 1 ம் தேதி மட்டும் 51,887 தொற்று உறுதியானது, 1205 பேர் மரணமடைந்துள்ளனர்.

இரட்டை வேடம் போடும் அரசுகள்!

இந்திய ஒன்றிய அரசு தடுப்பூசி கட்டாயம் இல்லை எனவும், தடுப்பூசி சான்றிதழை பொதுவெளியில் கேட்க மாட்டோம் எனவும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது. ஏனெனில் கட்டாயப்படுத்துவது அரசியல் சாசனப்பிரிவு 21- க்கு எதிரானது. எனவே சட்டப்படி திணிக்க முடியாது என்பதால் மறைமுகமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாநிலங்களை வலியுறுத்துகிறது. அதற்கேற்ப தமிழகம், மகாராஷ்டிரா, அசாம் போன்ற சில மாநிலங்கள் இதற்கான அரசாணையை பிறப்பித்தால் மாட்டிக் கொள்வோம் எனத் தெரிந்து சுற்றறிக்கைகள் மூலம் இதை சாதிக்கின்றன. போதிய ஆய்வுகளின்றி அவசர கதியில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் தயங்கிய நிலையில்தான் அரசுகள் மிரட்டல் எனும் அஸ்திரத்தை கையில் எடுத்தன.

தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வர வேண்டும் என்றாலும், ரேஷனில் பொருட்கள் வாங்கவும், பள்ளி – கல்லூரி உட்பட அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருந்தால்தான் வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டல் விடுத்து, நிர்பந்தித்து இந்த ஊசியை போட்டுக் கொள்ள வைத்தனர். சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கவும் கட்டாயம் என்றனர். அதேபோல 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில பெற்றோர்களின், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, பொதுத்தேர்வு எழுத முடியாது என மிரட்டி பணிய வைத்து இந்த ஊசியை செலுத்துகின்றனர்.

தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது ஏன்?

உரிய வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றாமல், அதாவது தடுப்பூசி செலுத்தப்படும் நபரிடம் இந்த தடுப்பூசியால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும், அப்படி ஏதேனும் பாதக விளைவுகள் ஏற்பட்டால் எந்தவித இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது என்பதையும் எடுத்துரைத்து உரிய ஒப்புதல் படிவத்தில் (Informed consent) கையொப்பம் வாங்கிய பிறகே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஊசி போட்ட பிறகு அரைமணி நேரமாவது காத்திருக்க செய்து, ஏதும் பிரச்சினையில்லை என்றால் அனுப்பும்போது, பிறகு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் யாரை அணுகவேண்டும் என தெரிவிக்க வேண்டும். ஆனால் இதில் எதையுமே பின்பற்றாமல் தடுப்பூசி முகாம் என்ற பெயரில் தெருக்களில் அமர்ந்துகொண்டு, போகிற, வருகிறவர்களுக்கு எல்லாம் சகட்டுமேனிக்கு குத்துகிறார்கள். சென்னை பெரு நகரத்தில் ” வேக்சினை போடுங்க மக்கா வேக்சினைப் போடுங்க” என்று ஓயாத பிரச்சாரம் வேறு. விரும்பியவர்களுக்கு செலுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை வைத்தியம் மற்றும் அக்குபங்சர் போன்ற மரபுவழி மாற்று மருத்துவங்களை பின்பற்றுபவர்களையும், தடுப்பூசியின் பக்க விளைவுகளுக்கு அஞ்சுபவர் களையும் எதற்காக கட்டாயப்படுத்துகின்றனர் எனும் கேள்வி எழுவதில் நியாயம் இருக்கிறதுதானே? விளைவுகளுக்கு பொறுப்பேற்கவும் மாட்டோம். ஆனாலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதில் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதாக அப்பட்டமாகத் தெரிகிறது.

டெங்கு காய்ச்சல் பரவியபோது நிலவேம்பு குடிநீரும், பப்பாளி சாறும்தானே பெருமளவில் கைகொடுத்தது. கொரோனா பரவலின்போது கூட கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் ஏராளமானவர்களை மீட்டதைக் கண்கூடாக பார்த்தோம். ஆந்திராவில் ஆனந்தையாவின் சிகிச்சையும், இதுபோல பல மாநிலங்களில் ஆயுர்வேதமும் ஹோமியோபதியும் பயன்பாட்டில் இருந்தன. அப்படி இருக்கையில் அனைவருக்கும் தடுப்பூசி என்று திணிப்பது சர்வாதிகாரம் இல்லையா?

கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள்!

ஆரம்பத்தில் இந்த பரிசோதனை தடுப்பூசியை செலுத்தும்போது எங்குமே எதிர்ப்பு எழவில்லை. ஏனெனில் விரும்பியவர்கள் போட்டுக்கொண்டனர். ஆனால் அதை கட்டாயப்படுத்திய போதுதான், உலகெங்கும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரான்ஸ், ஹாலந்து, இங்கிலாந்து, பொலிவியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டாய தடுப்பூசிக்கும் பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கும் எதிராக பெருந்திரளாக மக்கள் போராடினர். பொலிவியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை தீக்கிரையாக்கி வன்முறையாக போராட்டம் மாறியது. இப்போது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் கட்டுப்பாடு அகற்றப் பட்டுள்ளது. கனடாவில் 80% லாரி/டிரக் ஓட்டுனர்கள் தடுப்பூசி செலுத்திய போதிலும் அங்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதும் பல்லாயிரம் கனரக வாகனங்கள் தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டன. இரண்டு வார தொடர் போராட்டத்தால் பொருளாதாரம் குலைந்து போனதால், கட்டாய அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என எதிர்பார்த்த நிலையில், அவசர நிலையை பிரகடனப்படுத்தி போராடியவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியும், கைது செய்யும் ஒடுக்குமுறையை ஏவினார் கனடா அதிபர். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் கட்டாயத் திணிப்புக்கு எதிராக ஆங்காங்கு சிறிய அளவில் போராட்டங்களை பார்க்க முடிகிறது.

பயத்தை விதைக்கிறார்கள் – பணத்தை அறுவடை செய்ய!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா குறித்த செய்திகளே ஊடகங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன. மீண்டும் மீண்டும் பீதியூட்டும் வகையில் செய்திகளை காண்பித்து, மக்களின் மீது ஒரு உளவியல் தாக்குதலை தொடுக்கின்றனர். பய உணர்ச்சி என்பது உடலை பலவீனமாக்கும், மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். கொரோனா கணக்கில் இறந்தவர்களில் பாதிப்பேர் பயத்தினாலும் தவறான சிகிச்சையின் பக்க விளைவுகளாலும்தான் இறந்துள்ளனர். தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற மெகா திட்டத்தின்படி கார்ப்பரேட் மருந்து மாபியாக்கள் அடிக்கும் பல லட்சம் கோடி கொள்ளையின் பங்குதாரர்களாக மாறி ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் வளைந்து கொடுக்கின்றன. தடுப்பூசிக்கு எதிராக அறிவியல்பூர்வமாக ஆதாரங்களோடு பேசும் அறிஞர்களின் கருத்துகள் வெகுஜன ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் டிவிட்டர், யூடியுப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கூட முடக்கப் படுகின்றன. மக்களுக்கு உண்மை தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ள அரசா இது?

உழைக்கும் மக்களை அனைத்து விசயங்களிலும் தவிக்கவிடும் ஆட்சியாளர்கள், தடுப்பூசி விசயத்தில் மட்டும் அதீத அக்கறை காட்டுவதன் மர்மம் என்ன? உண்மையில் மக்கள் நல அரசாக இருந்தால் சுத்தமான குடிநீர், மாசில்லாத காற்று, மரபணு மாற்றம் இல்லாத உணவுப் பொருட்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாத இயற்கை விவசாய ஊக்குவிப்பு, சுற்றுப்புற சுகாதாரம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உள்ள உணவை உத்தரவாதம் செய்தல் போன்றவற்றின் மூலம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து ஒரே நாடு, ஒரே மதம்,ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு எனும் வரிசையில் அடுத்து ஒரே மருத்துவமும் இடம்பிடிக்கிறதா? எனும் ஐயம் எழுகிறது. மேலும் மனிதர்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, பல லட்சம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று வரும் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை சீர்குலைத்து, மருந்து மாபியாக்களை நம்பியே உயிர்வாழும் அடிமைகளாக மனிதர்களை மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. மண்ணை மலடாக்கிய அவர்கள், ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது மனிதனை கடிக்க துணிந்து விட்டார்கள். இவர்களை எப்படி எதிர்கொள்வது?

நியூசிலாந்தின் நோயியல் வல்லுனர் Dr. எலினா பிஷப் (Elina Bishop) , ” அதிக பாதிப்புகளை வரும் காலங்களில் ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்த தடுப்பூசிகளை ஒருவரின் முழு ஒப்புதல் இல்லாமல் போடுவதும், இதை விளம்பரப்படுத்தி பரப்புவதும் ஹிட்லரின் நாசிப் படைகள் செய்தது போன்றதாகும். இது மனித குலத்திற்கு எதிரான குற்றம். நியூரம்பெர்க் மருத்துவ சட்டப்படி இதை பரப்புவோர், திணிப்போர் தண்டனை அளிக்கப்பட வேண்டியவர்கள்” என சரியான தீர்வினை முன்வைக்கிறார்.

ஆக்கம் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here