உரைவீச்சு : “செங்கோலுக்கு “நதிமூலம் உண்டோ ?!


1.

கொடுங்கோல் ரத்தச் சுவடுகளை மறைக்க
பார்ப்பன வரலாற்றை மறைக்க —
கார்ப்பொரேட் – காவிப் பாசிசத்தை
தீவிரமாக ( தந்திரமாக ) அறிவிக்கத்
தொடங்குகிறது ஆளும் மோடிகும்பல்,
இப்போது அரட்டை மடத்துக்குப்
புதிய கட்டிடம்,
பிரிட்டிஷானுக்கு ஆர்எஸ்எஸ் சவர்க்காரம் ( சோப் )
போட்டவன் பிறந்த நாளில் !
இது மற்றுமொரு முன்னோட்டம் !

கொடுங்கோலை மறைக்க, உள்ளே
ஒரு செங்கோல் —
அதைச்சுற்றி நாரதன் பிறப்பித்த வருசங்கள் போலே
ஒன்றா இரண்டா அறுபது
புராணப் புளுகுப் புரட்டுக்கள்
அடுக்கடுக்காய் மேலே !

அந்தச் செங்கோல்
சபாநாயகர் பக்கம் கண்ணாடிக் கூட்டில்
அதும்பாட்டுக்குச் சும்மா கிடக்குமாம்!
மேடம் முர்முவை கட்டிடம் திறக்கக் கூப்பிடவில்லை —
அது ஒரு மோடி அரசியல் மருந்து
( ” மோடி என்றால் மேட்டிமை, வஞ்சகம் ”
என்கிறது கழகத் தமிழ் அகராதி ) ;
மோடிக்கும்பலின் விருப்பம் என்னவோ
அப்படியே ஆகுமாம் ( பிரதமமாளிகை )விருந்து ;
” முர்முவைவிட நான் அரசியலில் வல்லவள்.
என் குடும்பப் பின்னணி என்ன தெரியுமா ? ” என்றுகுடுமிவிரைக்க
வந்துநின்றது நிம்மி மோடியைச் சொரிந்து !

2.

கதைகள் கதைப்போமா,
செங்கோலின் மர்மக் கதைகள்.
சோழனின் செங்கோல் என்று ஒரு பொய்.
சோழர், எத்தனையோ? எது உண்மை ?
( சிதம்பரம் குளத்தங்கரையில்
பொன் — பெண் கொடுத்துப்
பட்டம் கட்டுனவனெல்லாம் சோழனாம்! ) ;

ஆதீனம் செங்கோலை அனுப்பினார் நேருவுக்கு
ஆட்சி , அதிகார மாற்ற அடையாளத்துக்காக — இப்படி யார்யாரோ ஆராருக்கோ
அனுப்பியதாகப் பொய்கள் ;

( மவுண்ட் ) பாட்டனிடம் கொடுத்து
கையில் வாங்கி ( எச்சில் தூவி )
‘ தூய்மை ‘ செய்து அவாள்
நேருவிடம் கொண்டு சேர்த்தார்கள்
என்று மற்றொரு பொய் ;

நாதசுர விற்பன்னர் ராசரத்தினம் பிள்ளை
கூடவே போனார்,
ஆனந்தபவனம் போகிற வழியில்
அங்கங்கே ” மண்டகப்படி ” போல
ஸ்வரங்களை டெல்லித் தெருக்களில் உதறி
வெளுத்துக் கட்டினார் என்றும் கூடக்
கூசாமல் சொன்ன பொய்யும் உண்டு.

இப்போது ” இந்தியா டுடே ” என்ற ஏட்டில்,
பரதம் என்ற சொல்லின்
நிரந்தர விசுவாசியான மேட்டுக்குடி
பத்மா சுப்ரமணியம் சொல்வது
மற்றொரு அகண்ட பொய்!
முதலில் காஞ்சிப் பெரிய பெரியவா மூலம்
துக்ளக் சோவுக்கு சேதி வந்து
அவர் அதை வெளியிட,
அந்தக் கட்டுரையை பத்மா சுப்ரமண்யம்
படித்ததாக இப்போது அவர் பேட்டியில் ஆச்சரியத்தோடு வெளியிட்டுள்ளார்.
யாரும் இதைச் சோதிக்க முடியாது, காரணம் —
” பெரிய பெரியவா ”
இப்போது உயிரோடு இல்லை.
” பரதமுனி காஷ்மீரில் இருந்தார் “–
என்றொரு பொய்யைக்
கமுக்கமாய் விற்று,
தமிழர் ஆட்டக் கலையையே
பின்னுக்குத் தள்ளிய
பத்மா சுப்ரமணியம் இப்போது
செங்கோல் பற்றிச் சொல்லியிருப்பது
மற்றொரு அகண்ட பாரதம் போல
கம்பளத்தில் வடிகட்டிய பொய்.

“பாரதத்தின் பெருமையாக” நாடாளு மன்றத்தில் ‘செங்கோல்’ வைக்கப்படுவது பரத நாட்டியக்காரர் பத்மா சுப்ரமணியத்துக்கு மகிழ்ச்சியாம்!

நடந்தது என்ன, கேளுங்கள் :
முதலில் சொன்ன ஆள்
காரியக் கிறுக்கன் ‘ துக்ளக் ‘ சோ ;
அவருக்கு அருளியது ” பெரிய பெரியவா “,
அப்படி வந்ததே அந்தச் சோழன் கதை !

காலங்கள் கடந்தாலும்
எத்தனை சூப்பர் ஸர்ஃப் போட்டாலும்
அக்கிரகாரக் காவித்துணியின்
மணம் எல்லாம் மந்திரம் ;
மந்திரம் எல்லாம் நறுமணம்
அது மாறாத தந்திரம்!

பழையன கழித்து,
கார்ப்பொரேட் — காவிக்
கொடுங்கோலை முறித்துச் சாய்க்க
இனி,
உழைப்போரே விதிகள் செய்வோம் !

  • புதிய திருமூலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here