அந்தத் திட்டத்தை பாராட்டிப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது!
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை கொண்டு வருவதை தாமதப்படுத்தாதே!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தொடக்க விழா கடந்த டிசம்பரில் நடந்துள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை.
தனியார் பள்ளிகள் சங்கம் ஆனது 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அதை மேம்படுத்த தேவையான உதவிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மூலம் செய்யப் போவதாக தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது. இந்தத் தீர்மானத்தை தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றுள்ளார்.
மேலும், அதே கூட்டத்தில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகளின் பங்கு குறித்து பாராட்டியும் பேசியுள்ளார். ஆனால், அந்த தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதையும், அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களை கொத்தடிமை போல் நடத்துவதையும் அமைச்சர் கண்டித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் தனியார் பள்ளிகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனுக்கான காலை உணவுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதை தமிழகம் அறியும். ஒன்றிய மோடி அரசு திணித்து வரும் மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருப்பதையும் தமிழக மக்கள் அறிவர். சமீபத்தில் கூட எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கூடாது என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்பதும் வரவேற்கத்தக்கதே.
அதே சமயம், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ல் உள்ள பல்வேறு அம்சங்களை அமல்படுத்தும்விதமாக எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களாக கொண்டு வந்துள்ளது கண்டிக்கத்தக்கது. தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்றிருக்கும் அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் திட்டமும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே. மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை பள்ளிகளை அரசு நடத்தாமல் சமூக பங்களிப்புடன் நடத்துவது என்பதை பரிந்துரைக்கிறது. தமிழ்நாடு அரசு அதனை இந்த வழியில் அமல்படுத்த திட்டமிடுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. கல்வி வழங்கும் கடமையிலிருந்து அரசு விலகிக் கொள்ளும் மோசமான நடவடிக்கை இது. அமைச்சரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளான பின் அது அரசுப் பள்ளியைத் தத்துக்கொடுக்கும் திட்டமெல்லாம் இல்லை. தனியார் பள்ளிகள் சேர்ந்து உதவிதான் செய்யப்போகின்றன என சமாளிக்கிறார் அமைச்சர். அதையே விளக்கி தனியார் பள்ளிகள் சங்கமும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட சமாளிக்கும் பதில்கள் தீர்வைத் தராது.
படிக்க: மக்கள் கல்விக் கூட்டியக்கம் அறிக்கை: தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையைத் தாமதமின்றி வெளியிடுக!
கல்வியை எதிர்கால தலைமுறையை பண்படுத்தும், அறிவியல் பூர்வமானவர்களாக மாற்றும் சேவையாக, அரசின் கடமையாக பார்க்க வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு தொழில் துறையை விட சேவைத் துறையில் தான் கொழுத்த லாபம் கொட்டுகிறது. அதேபோல் கல்வித்துறையானது நஷ்டமே வராமல் லாபத்தை மட்டும் குவிக்கும் தொழிலாகவே தெரிகிறது.
தொழில் என்றால் அதில் தொழில் போட்டியும் அடங்கும். போட்டியாளரை ஒழிப்பதன் மூலமே தனக்கான சாம்ராஜ்யத்தை கட்டமைக்கவும் முடியும். கல்வி வள்ளல்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு போட்டியாக இருப்பது இலவச கல்வி தரும் அரசு பள்ளிகள் தான்.
எனவே அரசுப் பள்ளிகளை அதன் போட்டியாளர்களுக்கே தத்துக்கொடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு ஏற்றக்கொண்ட மாநில கல்விக் கொள்கையை உடனடியாக மக்கள் முன் வைத்து கருத்து கேட்டு அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள அனைவரும் கல்வி தனியார்மயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம். கல்வி நமது அடிப்படை உரிமை என்பதை நிலைநாட்டுவோம்.
இவண்
ச. அன்பு
மாநில பொதுச் செயலாளர்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.