ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

செய்தி வெளியீடு

284வது நாள், 6 செப்டம்பர் 2021.

••• முசாபர்நகரின் வரலாற்று சிறப்புமிக்க விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, விவசாய இயக்கத்தின் வலிமை, நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது – விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தொடர விவசாயிகள் சபதம் செய்துள்ளனர் !

••• விவசாயிகளின் மண்டைகளை உடைக்கவும், வன்முறைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகள் வழங்கிய காலக்கெடுவின் கடைசி நாளைத் தொடர்ந்து, விவசாயிகள் நாளை கர்னலில் மகாபஞ்சாயத்து நடத்துவார்கள் – போராட்டத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கர்னலில் 144 தடை விதித்துள்ளது – மகாபஞ்சாயத்துக்கு முன் கர்னாலில் இணையம் முடக்கம் !

••• பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்கிறது !

••• விவசாயிகள் மகாபஞ்சாயத்து செப்டம்பர் 28ஆம் தேதி சட்டீஸ்கரில் நடைபெற உள்ளது !

எஸ்.கே.எம் ஏற்பாடு செய்த முசாபர்நகர் விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் எதிரொலி நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உணரப்பட்டது. பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராம் இக்பால் சிங் உள்ளிட்டோர் கூட விவசாயிகள் இயக்கத்தின் வலிமையை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த மகாபஞ்சாயத்திலிருந்து, விவசாயிகள் இப்போது விவசாயிகளுக்கு எதிரான, தொழிலாளர் விரோத மோடி அரசுக்கு வெளிப்படையாக சவால் விடுக்கின்றனர். எஸ.கே.எம்.ஆல் தொடங்கப்பட்ட மிஷன் உத்தரபிரதேசம்/உத்தரகண்ட், இரண்டு மாநிலங்களிலும் விவசாயிகள் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும். மேலும் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை தண்டித்து, தோற்கடிக்கும். நாடு முழுவதும் இந்த இயக்கத்தின் சுடரை எடுத்துச் செல்வதாகவும், விவசாயிகள் தங்கள் உரிமையைப் பெறும் வரை இந்த இயக்கத்தைத் தொடர்வதாகவும் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமைதியாக போராடிய விவசாயிகளுக்கு எதிரான அரியானா மாநில அரசின் வன்முறையில், ஒரு விவசாயி ஷாஹீத் சுஷில் காஜல் இறந்தார் மற்றும் எண்ணற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதில் விவசாயிகளின் மண்டைகளை உடைக்கும்படி கட்டளையிட்டு பிடிபட்ட எஸ்டிஎம் ஆயுஷ் சின்ஹா பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர் ​​மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்; பிற அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; மேலும் ஷஹீத் காஜலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், மாநில வன்முறையில் காயமடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை வைத்து, அரியானா அரசுக்கு விவசாயிகள் கொடுத்த இறுதி எச்சரிக்கைக்கான காலக்கெடு இன்றோடு, அதாவது செப்டம்பர் 6ஆம் தேதியோடு முடிவடைகிறது. எனவே மினி செயலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

கட்டார் அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அதற்கு பதிலாக துணை மாஜிஸ்டிரேட்டின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததால், விவசாயிகள் போராட்டத்திற்கான திட்டங்களைத் தொடர முடிவு செய்துள்ளனர். அந்தச் சூழலில், நாளை கர்னலில் மகாபஞ்சாயத்து நடைபெறவுள்ளது. விவசாயிகள் தானிய சந்தையில் கூடி, பின்னர் மினி செயலகத்திற்குச் செல்கின்றனர். வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலில், கர்னால் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் 144 தடையை விதித்து, இணைய சேவையையும் நிறுத்தியுள்ளது, மேலும் போராடும் விவசாயிகள் மீது ஐபிசி 188 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வதாக அச்சுறுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களாக இந்த அரசின்
கொடுங்கோன்மையினால் புடம் போட்டு துணிச்சலை மேலும் பலப்படுத்திக்கொண்ட விவசாயிகளின் உறுதியை, இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் உடைத்து விடாது என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது.

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரின் “கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த மண்டி மூடப்பட்டுள்ளது” என்ற கேள்விக்குப் பதிலளித்த எஸ்.கே.எம், கடந்த ஒரு வருடத்தில், வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள மண்டிகள் தங்கள் வருவாயில் பெரும் வீழ்ச்சியைக் கண்டதாக அமைச்சருக்கு நினைவூட்டியுள்ளது. மத்திய பிரதேசத்தில், விவசாய சந்தை வாரியம் 66% வருவாய் இழப்பைச் சந்தித்தது; மேலும் மண்டி இடத்தை வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளது. புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு மண்டிகள் வருவாயை இழந்து விட்டதாகவும், புதிய ஏபிஎம்சி மண்டிகளைக் கட்டுவதை அரசு நிறுத்திவிட்டதாகவும் உபி அமைச்சர் ஸ்ரீராம் சவுகான், உபி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஒன்றிய விவசாய அமைச்சர், அமேசான் நிறுவனம் இந்தியாவின் விவசாய சில்லறை வியாபார கடையைத் திறப்பதில் மும்முரமாக உள்ளார். பயிர்கள் மற்றும் காப்பீட்டிற்குப் பிறகு, அரசாங்கம் உரங்கள் மற்றும் விதைகளைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துள்ளது. இஃப்கோ 45 கிலோ யூரியாவை ரூ266.50 க்கு விற்கிறது; அதே யூரியாவை அமேசானில் ஒரு கிலோ ரூ.199க்கு விற்கப்படுகிறது; பிளிப்கார்ட்டில், 450 கிராம் யூரியாவின் விலை ரூ.130 என எழுதப்பட்டுள்ளது. இது விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரால் தொடங்கப்பட்ட உரங்களின் திறந்த கருப்பு சந்தைப்படுத்தல் என்று எஸ்.கே.எம். கூறியுள்ளது.

பாஜக தலைவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்கின்றன. பஞ்சாப் மாநிலம் சங்ரூரில், பா.ஜ.க.வின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த, பா.ஜ.க. மாவட்ட தலைவர் வீட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பாட்டிண்டாவில், பா.ஜ.க.வின் மாவட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஹோட்டலை பஞ்சாப் விவசாயிகள் முற்றுகையிட்டனர். அரியானா மாநில ஜரோடி கிராமத்திற்கு அருகில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற ஜேஜேபி தலைவர்களின் கூட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டங்களை நடத்தினர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அனைத்து நிகழ்ச்சிகளையும் எதிர்ப்பதற்கான தனது நிலைப்பாட்டை எஸ்.கே.எம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாப் பாஜக தலைவர் ஹர்ஜித் சிங் க்ரெவால், ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் தவறாகவும், கடுமையாகவும் நடந்து கொண்டதை எஸ்.கே.எம். கண்டித்துள்ளது. திரு க்ரெவால் ஊடகங்களில் விவசாயிகளுக்கு எதிராக மிக மோசமாக பேசி வருகிறார். இத்தகைய செயல்கள் பாஜக தலைவர்களின் பெண்களுக்கு எதிரான மற்றும் விவசாயிகளுக்கு எதிரான பண்புகளை அம்பலப்படுத்துகின்றன. இதற்கிடையில், ராகேஷ் திக்காயின் உரையின் ஒரு சிறிய பகுதி வகுப்புவாத நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. கோடி(அரசு ஏவல்) மீடியா மற்றும் பாஜக ஐடி செல் செயலின் இந்த செயலை எஸ்.கே.எம் கண்டிக்கிறது. முழு உரையில், ராகேஷ் திக்கைட் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அழைப்பு விடுப்போம் என்று சொல்வதைக் கேட்க முடியும்.
ஊடகங்கள் நேர்மையாக செய்திகளை அறிவிக்க வேண்டும் என்று எஸ்.கே.எம் வேண்டுகோள் கொடுத்துள்ளது.

முசாபர்நகர் விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்தின் வெற்றிக்குப் பிறகு, விவசாயிகள் இயக்கம் புது உற்சாகத்துடன் உள்ளது. சத்தீஸ்கரில் விவசாயி-தொழிலாளி மகா சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விவசாயிகள் மகாபஞ்சாயத்து உட்பட, இதுபோன்ற பல நிகழ்வுகள் வரவிருக்கும் நாட்களில் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கிடையில், விவசாயிகளுக்கு எதிரான சின்ன சின்ன வழக்குகளைத் திரும்பப் பெற விவசாய சங்கங்கள் பஞ்சாப் அரசுக்கு வழங்கிய காலக்கெடு செப்டம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு விவசாயிகள் பஞ்சாப் அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்குவார்கள்.

அறிக்கையை வழங்கியவர்கள் :

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here