அக்டோபர் 9 ஆம் தேதி அன்று இறந்த இந்தியாவின் தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான திருவாளர் ரத்தன் டாடா, இந்தியாவின் முக்கியமான தொழில் குடும்பமான டாடா குடும்பத்தில் பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவின் (தற்போது மும்பை, இந்தியா) பாம்பேயில் பிறந்தார். அவருக்கு இறக்கும் போது வயது 86.
நேற்றும் இன்றும் முகநூல் பக்கங்களிலும், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் ரத்தன் டாடாவின் புகழ் வியந்தோதப்படுகிறது.
இந்தியாவின் சொத்துக்களை யார் சூறையாடினாரோ, இந்தியாவின் தொழில் வளங்களை பல்வேறு ரகசிய சதித் திட்டங்களின் மூலம் தனதாக்கிக் கொண்டாரோ, அவரது மறைவு குறித்து சமூக ஊடகங்களில் உள்ள இளம் தலைமுறை முதல் முதியவர்கள் வரை ஒப்பாரி வைக்கின்றனர்.
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு காலம் பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஆங்கிலேய காலனியவாதிகளின் அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் பலியாகி அடிமைகளாக வாழ்ந்த போது இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில குடும்பங்கள் பிரிட்டன் மகாராணியுடன், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியுடன் கூட்டு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு தன்னை வளப்படுத்திக் கொண்ட இழிவான நபர்களின் வாரிசு தான் டாட்டா.
பரோபகாரி ரத்தன் டாடா: சுரண்டலில் அம்பானி, அதானிக்கு முன்னோடி! பாகம் 1
1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போய்விட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தனித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம், போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது.
1907-ஆம் ஆண்டு இரும்புக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்காக நோவாமுடி பகுதியை டாடாக்கள் கையகப்படுத்தியபோது, உள்ளூர்ப் பழங்குடி மக்கள் இரும்புச் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தனர். அவர்களை அடக்கித் தம் வழிக்குக் கொண்டு வருவதற்காக குசும்காஜ் (கோசம்) என்ற அரக்கு மரங்களை டாடாக்கள் வெட்டிச் சாத்தார்கள். இந்த மரங்களில் கூடு கட்டும் அரக்குப் புழுக்களிடமிருந்து அரக்கு சேகரிப்பதை பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு, இம்மரங்களைத்தான் நம்பி இருந்தனர். நம்பிக்கை இழந்ததனாலும், வாழ்க்கைத் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் போனதாலும் பழங்குடி மக்கள் மேலும் மேலும் அதிகமாக டாடாக்களுக்காக இரும்புக் கனிமங்களைத் தோண்டத் தொடங்கினர்.
இந்தியாவை 1947 முதல் 2014 வரை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக நின்று நிதி உதவியளித்து வந்த கொடை வள்ளல்களில் ஒருவரான டாடா எப்போதும் தொழிலாளி வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் எதிராகவே வாழ்ந்து மறைந்தார். இதனாலேயே ’டாட்டா பிர்லா கூட்டாளி, பாட்டாளிக்கு பகையாளி’ என்ற புகழ்பெற்ற முழக்கம் நாடு முழுவதும் செங்கொடி இயக்கத்தினரால் உயர்த்திப் பிடிக்கப்பட்டது.
பரோபகாரி ரத்தன் டாடா: சுரண்டலில் அம்பானி, அதானிக்கு முன்னோடி! பாகம் 2
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்துவதற்கு முன்பு வரை இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வர பணக்கார முதலாளிகளில் ஒருவராகவும், இந்தியாவின் பங்கு சந்தை முதல் அரசியல் அதிகாரம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற நபர்களில் ஒருவராகவும் திகழ்ந்த டாடாவின் ஆதிக்கம் படிப்படியாக பின்னடைவை சந்தித்தது.
உலகமயத்தின் காரணமாக சந்தையில் போட்டியிட முடியாது என்பதை முன்னறிந்த டாடா ’எங்களுக்கு சமமான ஆடுகளத்தை கொடுங்கள்’ என்று ஓலமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 உலக அளவில் ஏகாதிபத்திய முதலாளித்துவம் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிய காலகட்டத்தில் இந்தியாவில் தரகு முதலாளியாக இருந்த டாடா தனது நிதி மூலதனத்தை பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளுக்கும், காலனிய நாடுகளுக்கும் பரப்ப துவங்கினார் என்பதன் விளைவுதான் முதன் முதலில் இந்திய தொழில் நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் முதலீடு செய்து தொழிலை கைப்பற்றியது என்று இன்றுவரை புகழ்ந்து பேசப்படுகிறது. ஆனால் அவர் கை காசு போட்டு இதனை வாங்கவில்லை என்பதை 2007, 2010 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழ்களில் அம்பலப்படுத்தி எழுதியுள்ளோம்.
டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2024-ஆம் ஆண்டு கணக்குப்படி 365 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. மருத்துவ உதவி முதல் கல்வி உதவி வரை அனைத்துக்கும் வாரிக் கொடுத்த ’கொடை வள்ளல்’ என புகழ்ச்சியும் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.
நாட்டை சூறையாடிய கொடூரமான தரகு முதலாளிகளில் ஒருவராகவும், பின்னர் தேசங் கடந்த தரகு முதலாளியாக பரிணாம வளர்ச்சி அடைந்த டாடாவின் மறைவிற்கு பாட்டாளி வர்க்கம் கண்ணீர் சிந்த தேவையில்லை. அது மட்டுமல்ல, குட்டி முதலாளித்துவ அற்பவாதிகள் ’நாய் செத்தாலும் இரங்கல் தெரிவிப்பது, நாட்டை கொள்ளையடித்தவன் செத்தாலும் இரங்கல் தெரிவிப்பது’ என்ற இழிவான பண்பாட்டை பரப்புவதை கண்டு, அதனை ஊடறுத்து எதிர்த்து பேசுவதற்கு பதிலாக வருகின்ற செய்திகளை அப்படியே பார்வேர்ட் செய்வது அவமானகரமானது என்பதை உணர்வோம்.
நாட்டை சூறையாடி பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ள டாட்டாவின் சொத்தை அனுபவிப்பதற்கு ரத்த உறவு என்ற முறையில் வாரிசுகள் இல்லை என்று கவலைப்படுகிறார்கள் முதலாளித்துவ ஊடக மாமாக்கள். இதுபோன்ற தருணங்களில் தான் லிவ் மிண்ட் துவங்கி பிசினஸ் லைன் உள்ளிட்ட பத்திரிகை வரை அனைவரின் வர்க்க சார்பு அம்பலமாகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
நாட்டை சூறையாடிய டாடாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான உழைப்பாளர்களின் குடும்பத்தில் வறுமையை போக்குவதற்கு பயன்படுத்துவோம் என்று முழங்குவோம்.
- பார்த்தசாரதி.
என்றும் தோழர்கள் வழியில் பயனிப்போம்.