“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
என்ற வாய்மை அதிகாரத்தில் வரும் திருக்குறளை கேடாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருக்குறளை இப்படியும் பயன்படுத்த முடியும் என்பதை ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிச சித்தாந்தவாதிகள் நமக்கு துணிச்சலுடன் அறிவிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகால ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியில் உண்மை மற்றும் வரலாறு குழி தோண்டி புதைக்கப்பட்டு அண்ட புளுகுகளும் அன்றாடப் பொய்களும் அரசியலாக வலம் வரத் தொடங்கியுள்ளது.
ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி தனது பாசிச, நாஜிச அரசாட்சியின் கீழ் பல்வேறு பித்தலாட்டங்களை முன்வைத்து மக்களை தனது கவர்ச்சி பேச்சின் மூலம் மயக்கியதைப் போல இந்திய பாசிஸ்டுகளும் மக்களை தனது கவர்ச்சி பேச்சினால் மயக்கி வருகின்றனர்.
அத்தகைய வழிமுறைகளில் ஒன்று தான் எவ்வித கூச்ச நாட்சமும் இன்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது, “தான் புளுகுவது அசிங்கம் என்று நினைப்பதில்லை. மாறாக அவசியம்” என்று பல குரல்களில் ஊளையிடுகின்றனர் பாசிச ஓநாய்கள்.
ஸ்ரீரங்கம் கோவில் பற்றி கதாகாலட்சேபத்தில் இறங்கிய அரை முட்டாளும், முழுசங்கியமான ரங்கராஜ் பாண்டே இஸ்லாமியர்களின் படையெடுப்பிலிருந்து ஸ்ரீரங்கத்தை பாதுகாப்பதற்கு பன்னிரண்டாயிரம் பேர் தனது தலையை வெட்டிக் கொண்டு பலி கொடுத்தனர் என்றும் அவ்வாறு பலி கொடுத்த போது ஓடிய ரத்த ஆறு காவிரியில் கலந்தது என்றும் வரலாற்று உண்மைக்கு புறம்பாக அப்பட்டமான பித்தலாட்டம் ஒன்றை கட்டவிழ்த்து விட்டு உள்ளார்.
தனது வயிற்றுப் பிழைப்புக்காக ஆர்எஸ்எஸ் பாஜக என்ற பயங்கரவாத கூட்டம் நாட்டை ஆள்வதற்கு பொருத்தமாக மதக்கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது இஸ்லாமியர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரை எதிரிகளாக சித்தரித்து பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது என்ற தனது கேடுகெட்ட அரசியலுக்கு தேவைப்படுகின்றது என்பதால் பொய்யுரைக்கலாம் என்பது தான் பாண்டேக்களின் நடைமுறையாக மாறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் சக்தி பற்றி இந்திய ஒன்றிய அரசாங்கம் இது போன்ற பொய் பித்தலாட்டங்களை தொடர்ந்து அவிழ்த்து விட்டு வருகிறது. அவர்களைப் பொறுத்தவரை கார்ப்பரேட் மூலதனம் தங்கு தடை இன்றி இந்தியாவிற்குள் பாய்வதற்கு வாங்கும் சக்தி கொண்ட இந்தியா உள்ளதாக கதையளப்பதும், தொழில் அமைதி நிலவுகிறது என்ற பித்தலாட்டத்தை அவிழ்த்து விடுவதற்கும் பொருத்தமாக பொய்யுரைப்பது தேவைப்படுகிறது.
படிக்க: படிப்பறிவுள்ளவர்களையே கூமுட்டைகளாக்கும் ரெங்கராஜ் பாண்டேயின் பொய்மைப் பேச்சு!
இந்தப் பொய்கள் அவர்களுக்கு நன்மை பயக்கின்றது. நாட்டு மக்களுக்கோ கொடும் துன்பத்தை உருவாக்குகிறது..
ஐநா வளர்ச்சி திட்டத்தின் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ள மனித வளர்ச்சி குறியீட்டு அறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அதன்படி, இந்தியா தர வரிசை பட்டியலில் 193 நாடுகளில் 134-வது இடத்தில் இருப்பதை இந்தியாவின் மனித வளத்தின் மதிப்பீட்டை ஆய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்த அறிக்கையின்படி, 140 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் மனித வளர்ச்சி குறியீட்டில் எந்த அளவுக்கு உலக நாடுகளின் வரிசையில் பின்தங்கியுள்ளோம் என்பதை பார்க்கிற போது, பிரதமர் மோடியின் பேச்சுக்கும், செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர முடிகிறது என்று தமிழக காங்கிரசின் தலைவர் செல்வப் பெருந்தகை அம்பலப்படுத்துகிறார். ஆனாலும் தனது பத்தாண்டு கால ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக கூசாமல் பொய் புளுகி வருகிறார் பாசிச மோடி.
படிக்க: பொய்யின் மூலம் சமூக பதற்றத்தை உருவாக்கும் சங்கிகள்!
தான் ஆட்சிக்கு வந்த நாள் முதல் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை கொண்டு செல்லப் போவதாக பாசிச மோடி மேடைதோறும் முழங்கி வருகிறார் 2014 ஆம் ஆண்டு தேர்தலிலும் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் மட்டுமின்றி 2024 தேர்தலிலும் அவர்கள் முன்வைத்த முக்கியமான முழக்கம் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்வது என்பதுதான்.
ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் தேக்க நிலையில் தத்தளிக்க துவங்கியுள்ளது என்பது மட்டுமின்றி கடன் 183 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மூன்று ட்ரில்லியன் பொருளாதாரத்திற்கே மூச்சை பிடித்துக் கொண்டு முக்கி கொண்டுள்ளது.
இந்த உண்மைகளை மறைக்க பொருளாதார ரீதியாக பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் பங்கு சந்தையில் முதலீடுகள் மிகவும் லாபத்தை கொடுத்து வருவதாகவும் அன்றாடம் மும்பை பங்கு சந்தை (BSE sensex) மூலமாகவும், தேசிய பங்கு சந்தை (NSE sensex) மூலமாகவும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
ஊக வாணிபத்தின் மூலம் பங்கு சந்தையில் குவிக்கப்படுகின்ற இந்த தொகையை வைத்துக் கொண்டு தேசிய பொருளாதாரம் வளர்ந்து விட்டதாகவும், அண்டப்புளுகை அவிழ்த்து விடுகின்றனர்.
பொய், பித்தலாட்டம் போன்றவற்றை ஆளும் வர்க்கத்தின் நேரடி ஏஜென்ட்டுகளான ஆர்எஸ்எஸ் பாஜக எந்த விதமான கூச்சநாச்சம் இன்றி செய்து வருகிறது என்பது மட்டுமின்றி தனது கூட்டணி கட்சிகளுக்கும், தனது சித்தாந்த அடியார்களான பேச்சாளர்கள், தனது எடுபுடி கைக்கூலி எழுத்தாளர்கள், தகவல் தொழில்நுட்ப கூலிப்படையினர் அனைவருக்கும் இந்த பாணியை கற்றுக் கொடுத்து பொய்யான ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.
இதனால் அண்டப் புளுகு ஒரு அரசியலாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடூரமான ஆயுதமாகவும் மாறியுள்ளது.
- பார்த்தசாரதி.