
ஆர்.எஸ்.எஸ்-க்கும் இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-ன் பிதாமகன்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக சித்தரிப்பதில் அதன் தேர்தல் பிரிவான அதிகாரத்தில் அமைந்திருக்கும் பாஜக ஓரளவு வெற்றி கண்டு இருக்கிறது.
இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்ட 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டிருந்த போஸ்டரில் காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், பகத்சிங் படங்களுக்கு மேலாக ‘மன்னிப்பு கடிதம் புகழ்’ சாவர்க்கர் படம் போடப்பட்டிருந்தது. தெளிவாக கூற வேண்டுமானால் சுதந்திர போராட்டத்தில் தியாகியாக சாவர்க்கரை முன்னிறுத்தி இருக்கிறது போஸ்டர்.
சாவர்க்கர் தியாகியா? துரோகியா?
ஆர்.எஸ்.எஸ்-ஐ பொருத்தமட்டில் அவர் தியாகி தான். காந்தியின் கொலைக்கு பின்னணியாக இருந்தவர். இந்துத்துவவாதியாக ஆர்.எஸ்.எஸ் பிதாமகன்களில் ஒருவர் என அவர்கள் சாவர்க்கரை தியாகியாக தான் உயர்த்திப் படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஆங்கிலேயரை எதிர்த்து போராடத் துணிவில்லாதவர். 1911-ல் அந்தமான செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பலமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம்(Mercy petition/ Clemency petition) எழுதியுள்ளார்.
1913-ல் எழுதிய மன்னிப்பு கடிதத்தில் “தான் அரசியல் கைதி அல்ல. தவறான வழியில் சென்ற இளைஞன். தன் குற்றங்களை மன்னித்திட வேண்டும். விடுதலையான பிறகு பிரிட்டிஷாருக்கு விசுவாசியாக இருந்து பயனுள்ள குடிமகனாக இருப்பேன்” என்று எழுதி இருந்தார்.
1920 இல் எழுதிய கடிதத்தில் “இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற தலைவர்களும் பொது மன்னிப்பு கேட்டு அரசிடம் மனுக்கள் அனுப்பியதை மேற்கோள் காட்டி, தன்னை விடுவித்தால் இனி எந்த வன்முறை வழிகளிலும் ஈடுபட மாட்டேன்” என்று வாக்குறுதி அளித்தார். இப்படியான கேவலமான இழப்பிறவியை ‘சுதந்திர’ தினத்தில் தியாகியாக உயர்த்திப் பிடிக்கிறது பாஜக.
படிக்க: சங்கி கும்பல் உருவாக்கிய, சாவர்க்கர் ‘புல்புல்’ பறவையில் பறந்த கதை!!!
பகத்சிங் படத்தோடு சாவர்க்கர் படத்தை போடுவது நமக்கு எரிச்சல் ஊட்டுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகசிங்கிற்கு தூக்கு தண்டனை அறிவித்த பிறகு அவரது தந்தை ஆங்கிலேய அரசிடம் கருணை மனு அனுப்பியதை கேள்விப்பட்டு தன்னையும், தன்னுடைய போராட்டத்தையும் அவமானப்படுத்தி விட்டதாக பகத்சிங் தனது தந்தையிடம் கடிந்துக் கொண்டார். அப்பேர்ப்பட்ட போராளியுடன் சாவர்க்கர் போன்ற இழிபிறவிகளை சேர்ப்பது எரிச்சலையும் கோபத்தையுமே வரவழைக்கிறது.
சாவர்க்கர், கோல்வாக்கரை திணிக்கும் பாசிஸ்டுகள்!
“ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) உலகின் மிகப்பெரும் அரசு சாரா நிறுவனமாக (NGO) திகழ்கிறது. 100 ஆண்டுகாலம் என்பது சமர்பணத்தின் வரலாறாகும். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே, இந்த 100 ஆண்டுகால தேசத்திற்கான சேவை பயணத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வலர்களை மரியாதையுடன் நினைவு கூறுகிறேன்.” என தனது சுதந்திர தின உரையில் கொலைகார ஆர் எஸ் எஸ் குறித்து பெருமை பேசியுள்ளார் பாசிச மோடி.
அதற்கேற்ப தான் இந்தியாவின் வரலாற்றை, சுதந்திரப் போர் வரலாற்றை மாற்றுவதில் முனைப்பாக செயல்படும் ஆர்எஸ்எஸ் – பாஜக பள்ளி பாட புத்தகங்களில் இருந்து மாற்றி எழுத தொடங்குகிறது. ஒருபுறம் பார்ப்பனிய வர்ணாசிரமத்தை திணிப்பது, மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தியாகிகளாக சித்தரிப்பது. அதற்கேற்றார் போல புதிய கல்வி கொள்கையை வடிவமைத்துள்ளது.
படிக்க: சுதந்திர தினமா? ஆர்.எஸ்.எஸ் தினமா?
இன்று பள்ளி சிறுவர்கள் வாங்கும் தேச தலைவர்கள் படங்களில் சாவர்க்கரும், ஹெட்கேவரும் கோல்வாக்கரும் சுதந்திரப் போராட்ட தியாகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். பாடபுத்தகங்களில் சேர்க்கப்படுவதால் இவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். நாளை இவர்களது சித்தாந்தமும் முன்னிலைப்படுத்தப்படலாம். இப்படியாக வரலாற்றை திரிப்பதன் மூலம் தனது இந்துத்துவ கருத்தை பள்ளி குழந்தைகளிடமும் விதைக்கிறது பாசிச பாஜக.
எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ள சாவர்க்கர் போஸ்டர்!
சாவர்க்கர் படத்தை சுதந்திர போராட்ட தியாகிகளுடன் இணைத்ததற்கு பல்வேறு தரப்பு மக்களிடையேயும், தலைவர்களிடையும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜான் பிரகாஷ் அரசியல் சாசனத்தை அவமதித்துள்ளது பாஜக என்கிறார். “மகாத்மா காந்தியையும் தாண்டி சாவர்க்கரை உயர்த்திக் காட்டி, மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை ஒன்றிய அரசு அவமதித்திருக்கிறது. காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் முக்கிய குற்றவாளி. போதுமான ஆதாரம் இல்லையென அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், கபூர் விசாரணை கமிஷன் அறிக்கையில் சாவர்க்கரும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அரசியல் சாசனத்தை முன்னிறுத்துபவர்கள், ஒன்றிய அரசின் இந்த திருட்டுத்தனத்தை கண்டிக்க வேண்டும்.” என்றார்.
“சுதந்திரத்துக்கென போராடியவர்களின் பாரம்பரியத்தை அவமதித்து, அவதூறு பேசி, அழித்துவிட்டு சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக நின்று, பிரிட்டிஷுக்கு உதவி செய்தவர்களை தேசபக்தர்களாக்கும் முயற்சிகளை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திர நாளான இன்று இதை முக்கியமாக நாம் அனைவரும் நினைவில் கொள்வோம்!” ஊடகவியலாளர் ராணா அயூப் உண்மையை உரக்கச் சொல்வோம் என பதிவிட்டுள்ளார்.
வரலாற்றைத் திருத்தி எழுதுவதன் மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை தியாகிகளாக சுதந்திரப் போராட்ட வீரர்களாக வரலாற்றை மாற்றி எழுதுகிறது ஆர்எஸ்எஸ் – பாஜக. ஏற்கனவே வடமாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படியான கருத்துக்களை திணித்து விட்டனர். தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தான் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பால் தப்பித்து நிற்கிறது. அதற்காக இதுபோன்ற பாஜகவின் நடவடிக்கைகளை கடந்து போய்விட முடியாது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளை அம்பலப்படுத்தும் அதே நேரத்தில் எதிர்ப்பு போராளியான பகத்சிங் உள்ளிட்டோரை உயர்த்தி பிடிப்பதன் மூலமே மக்களை அரசியல் படுத்த முடியும்.
- நந்தன்







ஆர் எஸ் எஸ் கும்பல் பள்ளி பாடங்களிலும் புக ஆரம்பித்துவிட்டது விலக்கிய இந்த கட்டுரை அருமையாக உள்ளது பகத்சிங்கின் படம் பாடங்களில் உயர்த்தி பிடிக்க வேண்டியது நம் கடமை என உணர்த்தி இருக்கிறது