பழனிசாமி ஆகிய நான் இதுவரை தோழர் வளர்மதியிடம் பேசியதில்லை!
எனது பெயரும் கைபேசி எண்ணும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
தோழர். வளர்மதி தனது முகநூல் பக்கத்தில் 23-11-2023 அன்று மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு முதுகெலும்பிருக்கா? என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள பதிவில்
“கோவன், வாஞ்சிநாதன் இருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்து பழனிச்சாமி பேசறேன் தோழர்” என்று ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார்.
“நீங்க எதுக்கு மக்கள் அதிகாரத்த பத்தி தப்பு தப்பா எழுதறிங்க? உங்களுக்கு தைரியம் இருந்தா போயி ஸ்டாலின் சட்டைய புடிச்சு கேக்க வேண்டியது தான? நாங்க என்ன பன்னா உங்களுக்கு என்ன? நாங்க என்ன முடிவெடுத்தா உங்களுக்கு என்ன?” etc…. என்று பேசினார்” என பதிவிட்டு கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
நான் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து செயல்பட்டு வருகிறேன். எனது பெயர் பழனிசாமி ஆகும். மேற்படி தோழர் வளர்மதி அவர்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் பெயரும் எனது பெயர்தான். குறிப்பிடப்பட்டிருக்கும் கைபேசி எண்ணும் எனது செல் ஃபோன் நம்பர்தான். ஆனால் தோழர் வளர்மதி அவர்களிடம் பேசிய அந்த நபர் நான் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். தோழர். வளர்மதி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கால் ரெக்கார்டிங்கில் இருப்பது எனது குரல் இல்லை என்பதையும் தோழர் வளர்மதியிடம் தெரிவித்துள்ளோம்.
நானும் எமது அமைப்பும் பல்வேறு ஜனநாயக சக்திகளுடன் நட்பு ரீதியான தொடர்பில் இருந்தே வருகிறோம். எமது அமைப்பின் நிலைப்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பொது தளத்திலேயே பதிலளித்து வந்துள்ளோம். தனிப்பட்ட முறையில் அழைத்து அராஜகமாக பேசுவது என்ற முறையில் நடந்து கொண்டதில்லை. என்னையும் எமது அமைப்பையும் நன்கு அறிந்த தோழர்களுக்கு இது நன்றாக தெரியும்.
தொழிலாளர்களுக்கு எதிரான 12 மணி நேர வேலை சட்டத்திருத்தம் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டபோது அதனை கண்டித்து எமது இணையதளத்தில் கட்டுரைகள் எழுதியும் களத்தில் போராடியும் வந்துள்ளோம். மேல்மா சிப்காட் பிரச்சினையிலும் திமுக அரசை கண்டித்தும், விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் எமது இணையதளத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளோம். மீம்ஸ்கள், காணொளிகள் பதிவிட்டுள்ளோம். பாசிச எதிர்ப்பில் திமுகவை நட்பு சக்தியாக அணுகும் காரணத்தினாலேயே திமுக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதனை கண்டிக்காமல் இருக்கும் அவசியம் எமது அமைப்பிற்கு இல்லை.
இந்நிலையில் எனக்கும், எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கவும் தொழில்நுட்ப ரீதியில் எனது எண்ணை இந்த கேடுகெட்ட சதி வேலைக்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே இதே போன்று ஒரு சம்பவம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திருமதி பேராசியர் பாத்திமா பாபு என்பவரை மக்கள் அதிகாரம் அமைப்பு சேர்ந்த முத்துக்குமார் (எ) விஜயகுமார் பேசினார் என முத்துக்குமார் என்பவரின் போன் நம்பர் போடப்பட்டு இருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக முத்துக்குமார் தான் அவ்வாறு பேசவில்லை என தெரிவித்து பொது வெளியில் அறிவித்தும் இருந்தார்.
தோழர் வளர்மதிக்கு எனது எண்ணில் இருந்து பேசப்பட்டிருப்பதும் அத்தகைய ஒரு கிரிமினல் சதி நடவடிக்கை என்றே கருதுகிறேன்.
இத்தகைய சதி வேலைகளை முறியடித்து போராடுவோம்.
தோழமையுடன்
தோழர். பழனிசாமி
மாநில அமைப்புச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை







