உரைவீச்சு :

இனி…
மணிப்பூர் மக்களிடம்
கற்போம்!


வாய்த்துளையை நீ திறக்க
77 நாட்களாக நாங்கள்
காத்திருந்தோம் என்று நினைத்தாயோ ?
இல்லை.

000

” மணிப்பூர் மகளிர்க்கு
நடந்த கொடுமைகளை
ஒருபோதும் மன்னிக்க முடியாது… “என்கிறாய்.
எதை ?
77 நாட்கள் அலட்சியமாய்த் தூங்கிவிட்டு
இப்போது சொல்வதக் கேட்டு
நாங்கள் எதற்கு உன்னை மன்னிக்கணும் ?

“எந்தக் குற்றவாளியும் தப்பமுடியாது…” என்கிறாய்.
எந்தக் குற்றவாளிதான் தப்பவில்லை
உன் ஆட்சியில், உன்னையும் சேர்த்து,
அதைச் சொல்லேன் ?
காஷ்மீரா — ஜீலம் நதி சாட்சி சொல்லுமே !
குஜராத்தா — நரோடா பாட்டியா,
கவுசர் பானுவின் ‘ஆவி’ உன்னைத் துரத்தவில்லையா ?
பாபர் மசூதி இடித்துக்
கோயில்கட்டும் திட்டம்
ஆர்எஸ்எஸ் திட்டத்தில் இல்லையா ?
ரதயாத்திரை  தொடக்கம்
லட்சக்கணக்கில் மரணயாத்திரைகள்
உன் கைவரிசை தானே ?

“நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்கிறாய்.
ஊசிப் புழுத்த உன் பிரசாத உறுதிகளை
உடைப்பில் போடு, போ !

000

மணிப்பூர்  மகள்களை  நடுத்தெருவில்
அம்மணமாக்கி இழுத்துச் சென்ற
கொடிய காலிகள்மீது
எஃப்ஐஆர் போடவே 15 நாட்கள் ;
வீடியோ வெளியே வந்தபிறகு,
நாடும் மக்களும் காறி உமிழ்ந்தபிறகு,
உச்சநீதிமன்ற சந்திரசூட்
தானே ‘கெடு’ விட்டபிறகு,
எத்தனைப் பிறகுக்குப் பிறகு
நீ பேசுவாய் ?
அதற்குப் பொருள்
மணிப்பூர் மக்களையே
நிராகரிப்பதுதானே ?

000

உனது நாடாளுமன்ற மடத்தில் —
நீடித்த அறிவுமந்த நோயின் நடுவில்
எதிர்க்கட்சிகள்  விழித்துக்கொண்டு
விவாதம் எழுப்ப —
விவாதம் மறுத்தாய், மட்டுமல்ல,
“மணிப்பூர்பற்றி விவாதிக்கத்
தடையாக இருக்கிறார்கள்” என்று
எதிர்ப்புகார் வைத்து
ராஜ்நாத்சிங் வாய்மூலம் பேசினாய்.
உங்களைப் பொறுத்தவரை
ஆர்எஸ்எஸ் பாஜக அதிகாரக் கட்சி,
எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிரிக் கட்சிகளே.
எதிர்க்கட்சிகள் எல்லா நாளுமே
எரியும் புரட்சிக் குழம்பைப்
பழைய துடைப்பங்களால் பெருக்கித்
தள்ளிக் கொண்டிருப்பார்கள்,
தெரிந்ததுதான். இப்போதும் அப்படித்தான்.
அதை நீ சொல்லித்தான்
நாங்கள்  புரிந்துகொள்ள வேண்டுமா ?

உனக்கொரு கேள்வி இதோ :
அது  என்ன —
நாடாளுமன்றமா, போஸ்ட்மார்ட்டம் டேபிளா ?

000

பாஞ்சாலி மானம் காக்க
கிஸ்ண பரமாத்மா கையிலிருந்து
ரோல்ரோலாகப் புடவை பொங்கி வந்ததாமே?
மட சாம்பிராணியே,
நீ  இங்கே  எதற்காக
மௌனவிரதமிருக்கிறாய் அதைச் சொல்.

ரோபோவாய்  உலகைச் சுற்றும்  நீ இங்கு
தாமதமாய் வந்து தோன்றுவதற்குக் காரணங்கள் பல  ரகசியமாய்
இருக்கலாம்,  அவை ஒருபக்கம் கிடக்கட்டும் ;
இன்றுவரை
பிரேன்சிங்கும் தலைமைப்பீடமான நீயும்
அறுவடை செய்து
கத்தை கத்தையாய்க் கட்டினீர்களாமா,
நம்பச் சொல்கிறாயா ?
உன் பதவியும் பவிசும் பட்டும்  செட்டுகளும்
ஐரோப்பாவரை நாறிப்போச்சே,
இனி, என்ன ?

000

(வேறு  நடையில் வேறு சில)

” ‘ சாமி ‘ வாய்  திறந்துவிட்டது,
இனியாவது காப்பாற்றுவாரா ? ” என்று
தமிழ் ரிப்போர்ட் ஒன்று எழுதுகிறது,
அது  மக்களிடம் வந்து சேர்வதற்குள்
” மேலும் கற்பழிப்பு, கொலைகள் ” என்று
அடுத்தடுத்துச் செய்திகள் வருகின்றன.

பாசிஸ்டுகள் மக்களைக் காப்பாற்றியதாக
வரலாறுகள் எங்குமே இல்லையே
தமிழ் ரிப்போர்ட்டர்களே ;
இனியாவது மக்களைக் காப்பாற்றுவதற்கு  மோடிமஸ்தான் என்ன ஆஷுதோஷியா?

ஆஷுதோஷி என்ற பெயர் சிவனுக்குஉண்டாம்,
பக்தர்கள் பக்தியுடன்
ஒரேஒரு  சொட்டுநீர்  கொடுத்தாலே போதுமாம்,
சிவன் ஓடிவந்து காப்பாற்றுவாராம்!
உங்களுக்குத் தெரிந்தே
மேரி கோம் முதல், ஓய்வுபெற்ற
ராணுவ அதிகாரிகள் வரை
இத்தனை நாள் கதறியும்
ஒரு பலனும் இல்லையே!
தப்பான முகவரியில் கதவைத் தட்டி
வேண்டுகோள் வைக்கிறீர்களே ரிப்போர்ட்டர்.

இதோ கேளுங்கள்,  இதோ பாருங்கள்  ரிப்போர்ட்டர்களே,
நீங்களே பாருங்கள் மணிப்பூரின் நடப்பை :
குற்றம் இழைத்த கொடுங்காலிகளின் வீட்டை
பெண்களே முன்நின்று உடைத்தெறிகிறார்கள்,
நெருப்பை வீசிக் கொளுத்துகிறார்கள்.
இந்த நடவடிக்கை  தானே மக்களைக் காப்பாற்றும் ?
என்ன சரியா தமிழ் ரிப்போர்ட்டிங்,
மறுக்கமாட்டீர்கள் தானே ?

இனி,
மக்கள்தான்
விசாரிப்பு தீர்ப்பு
நடவடிக்கை கண்காணிப்பு
ஆட்சி அதிகாரம்
எல்லாம்!!

இனி நாம் கவனிப்போம்,
பின்தொடர்வோம் !

இனி….

  • புதிய திருமூலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here