ஃபோன், ஐபேட், மேக்புக் போன்ற பிரபல மின்னணுக் கருவிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனமானது, இன்று சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரும் நிறுவனமாக திகழ்கிறது. அது மட்டும் அல்லாது, இந்நிறுவனம் தான் தொழில்நுட்ப ஆய்விலும் உலகின் மிக உயரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் விற்கும் ஐஃபோனின் ஒவ்வொரு புதிய வெளியீட்டையும் வாங்குவதற்காக அமெரிக்காவில் பலர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை பார்க்கிறோம். இந்த கலாச்சாரம் ஒரு பகுதி இந்தியர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனத்தின், விற்பனைப் பண்டங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான். இது போன்ற பன்னாட்டு மின்னணுக் கருவி நிறுவனங்களின் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இயங்கி வரும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆப்பிள் நிறுவனம், தன் “ஜாம்பவான்” பிம்பத்தை பாதுகாத்துக்கொள்கிற  அதே வேளையில், வளரும் நாடுகளின் தொழிலாளர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலையற்று, கடும் சுரண்டலின் வாயிலாக தன் லாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான உற்பத்தியை மேற்கொள்ளும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை காஞ்சிபுரத்தில் உள்ளது. அண்மையில் 3,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச் சூழல் மற்றும் தங்குமிடம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதற்கு ஓராண்டு முன்பு தான் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள ‘விஸ்ட்ரான்’ என்ற நிறுவனம், பெங்களூரு அருகே உள்ள தன் ஆலையின் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்க,  தொழிலாளர்கள் கொதித்தெழுந்து, பின் அது பெரும் கலவரமாக வெடித்தது. இது போன்ற நிலைமை, ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மை. நோக்கியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்திருந்த ஃபாக்ஸ்கான், 2014-15இல் தன் ஸ்ரீபெரும்புதூர் ஆலைகளை திடீரென மூடி, பத்தாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியது.

ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களின் போராட்டம்

இப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலையும், அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ-ஏகாதிபத்திய செயல்பாடுகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆப்பிளின் சுரண்டல் வேட்டை

ஆப்பிள் நிறுவனத்தின் சுரண்டல் வேட்டை இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வளரும் நாடுகளிலும் நிகழ்கிறது. சீனாவில் ஷென்சென் மற்றும் ஷெங்ஷூ ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான்  ஆலைகளில் சுமார் 12லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம், மிகக் கடுமையான சூழலில் மிக அதிக நேரம் வேலை வாங்கியதால், 2011ல் பதினான்கு தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த சம்பவம் சீன நாட்டையே  உலுக்கியது. அதன் பின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன் பின், ஃபாக்ஸ்கானும், இதர ஆப்பிள் ஒப்பந்த நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உற்பத்தியை இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு நகர்த்த தொடங்கின. இந்த வளரும் நாடுகளில் நிலவும் குறைவான கூலி, தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களையும் பயன்படுத்தி, மிக மோசமான சூழலில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். தொழிலாளர்கள் ஓரளவு நல்ல வருமானம் பெற வேண்டுமானால் ‘ஓவர் டைம்’ (Overtime) மிக அதிகமாக புரிய வேண்டும். அவர்கள் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ள கூட முடியாத அளவில் தான் கூலி விகிதம் உள்ளது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் இருந்து கனிம வளங்கள் பெறப்படுகின்றன. அந்த சுரங்கங்களில் அடிமை நிலையில் பணி புரியும் ஊழியர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஆபத்தான சூழலில் குழந்தைத் தொழிலாளர்களும் கூட மிக சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பட்ட நவதாராளமய சுரண்டலை நியாயப்படுத்தி பல முதலாளித்துவ அறிஞர்களும் பேசுகிறார்கள். அதிலும், பெண்களை பணி அமர்த்துவதன் மூலம் “பெண் விடுதலை”க்கு வழிவகுப்பது போல வாதிடுகின்றனர். ஆனால் அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் நாம் அதையா பார்த்தோம்? அடித்தட்டு மக்களின் மோசமான  வாழ்க்கை நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மோசமான வாழ்க்கைச் சூழலில், கடும் வேலைச் சுமையையும் புகுத்தி, பணி இடம், விதிகள், பெண்கள் – மகப்பேறு நல சட்டங்கள் எதையுமே பின்பற்றாமல், அற்பக் கூலிக்கு (மாதம் ரூ.12,000ற்கும் குறைவு) சுரண்டுவதன் மூலம், தன் லாபத்தை கூட்டிக் கொள்ளத்தான் பன்னாட்டு மூலதனம் முயற்சிக்கிறது.

ஆனால் இவர்கள் அனைவருமே ஆப்பிளோடு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் மூலம் தான் பணி அமர்த்தப் படுகிறார்கள் என்பதால் ஆப்பிள் நிறுவனம் ஏதோ தன் கையில் எந்த கறையும் படியவில்லை என பாவிக்கின்றது. ஆனால் அதன் கொள்ளை லாபமும், சந்தையில் வகிக்கும் எங்கிருந்து வருகிறது?

தொழிலாளர்கள் கூலியை விட லாபம் எத்தனை மடங்கு அதிகம் என்பதை “சுரண்டல் விகிதம்” (Rate of Exploitation) என மார்க்ஸ் வரையறுத்தார். ஆப்பிள் நிறுவனத்துடைய சுரண்டல் விகிதம் சுமார் 2500% ஆகும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உழைக்கும் அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உழைக்கும் நேரம் போக, 25 மடங்கு அதிக  நேரம் உபரி ஈட்டித் தருவதற்காக உழைக்கின்றனர். இதை “கொள்ளைச் சுரண்டல்” என்றும் கூட சில மார்க்சிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

குறைந்த கூலியில் சுரண்டல்

நவதாராளமய காலத்திற்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் புகழ் என்பது, தங்கள் தாய் நாட்டில் எத்தனை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பதன் மூலம் கணிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, மூன்றாம் உலக நாடுகளில், தங்கள் உற்பத்தியை திறம்பட மாற்றியமைப்பதே விதந்தோதப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், சோசலிச சக்திகளின் நலிவும் காரணமாக, உலக தொழிலாளர் இயக்க வலிமை குன்றியது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். கணினி நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வளர்ச்சியும் காரணமாக உற்பத்தியை உலகின் பல இடங்களிலும் நடத்தலாம் என்ற நிலைமை உருவானது. பல ஆண்டுகளாக, பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம், இந்த புதிய சூழ்நிலைகளை பயன்படுத்தி, கூலி விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் உற்பத்தியை மாற்றியமைத்ததன் மூலம் லாப விகிதத்தை உயர்த்திக்கொண்டது.


இதையும் படியுங்கள்: ஃபோர்டு மோட்டார் இந்தியாவை விட்டு ஒடுவது ஏன்?


சர்வதேச நிதி மூலதனத்தை தங்கள் நாட்டில் ஈர்ப்பதற்கான போட்டியில் வளரும் நாடுகள் ஈடுபட்டன. அதற்காக, இந்நாடுகளில் தொழிலாளர் நல சட்டங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, சுற்றுச் சூழல் பாதுகாப்பு காற்றில் விடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வெறும் பத்து ஆண்டுகளில் (பண வீக்கம் கணக்கில் கொண்ட பின்) தொழிலாளர் ஊதியம் மும்மடங்காக உயர்ந்த சீனாவிலும் கூட, நாட்டின் மொத்த செல்வ உருவாக்கத்தில், தொழிலாளர் ஊதியத்தின் பங்கு குறையவே செய்தது. இதர வளரும் நாடுகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டின் வழியாக நுழைந்தன. 2013இல் முதல் முறையாக வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய நேரடி முதலீடு அதிக அளவை எட்டியது. ஆனால் அண்மைக் காலங்களில் இந்த நிலையும் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஒப்பந்த நிறுவனங்களை உற்பத்தி மேற்கொள்ள செய்து, ஏற்றுமதி மூலம் பண்டங்களை வாங்கிக் கொள்கின்றன. இதனால் தொழிலாளர் சுரண்டலின் பழி முழுவதும் மூன்றாம் உலக நாடுகளையும், அந்நாட்டு நிறுவனங்களையும் மட்டுமே சேர்வதாக வியூகம் செயல்படுகிறது.

எல்லா காலங்களிலும் (மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலம் முதலே) சர்வதேச முதலாளித்துவ சுரண்டலுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வரும் ஜவுளி உற்பத்தி நிறுவனம் தான் இப்படிப்பட்ட ஒப்பந்த நிறுவன அடிப்படையிலான உற்பத்தி மாற்றத்தை துவங்கி வைத்தது. பின்னர் வாகன உற்பத்தி நிறுவனங்களும் படை எடுத்தன. இன்று மின்னணு கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

தொடரும்…

நன்றி: https://marxistreader.app/2022/07/12/the-rate-of-exploitation-the-case-of-the-iphone/

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here