கோதுமை ஏற்றுமதிக்கு தடை கார்ப்பரேட் சேவையில் பாஜக!
உலக அளவில் கோதுமை உற்பத்தியில் 20% உற்பத்தி செய்துவரும் இந்தியாவின் ஏற்றுமதி இந்திய ஒன்றிய பாஜக அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது.
உலகில் உற்பத்தியாகும் கோதுமையில் இந்தியாவில் 20 சதவீதம் உற்பத்தி ஆகின்ற நிலையில் இதுவரை ஒரு சதவீதம் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கோதுமை அதிகம் விளைகின்ற மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியதால் அவர்களை பழிவாங்க காத்திருந்த இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அரசு கோதுமையை முறையாக கொள்முதல் செய்யவில்லை. கோதுமை விலையை குறைத்து கார்ப்பரேட்டுகள் கொள்முதல் செய்வதற்கு கோதுமையை சந்தையை திறந்துவிட்டுள்ளது.
அதன் காரணமாக இந்தியாவின் மொத்த தேவைக்கு ஏற்ப கோதுமை கொள்முதல் செய்யப்படாததால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகில் கோதுமை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால் அதன் ஏற்றுமதி தடையானது இதன் காரணமாகவும் சர்வதேச சந்தையில் கோதுமை விலை கடுமையாக ஏறி உள்ளது.
படிக்க:
♦ உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேற இதுவே சரியான தருணம்!!
இந்த சூழலில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை முறையாக கொள்முதல் செய்யப்படாததால் சர்வதேச அளவில் விலை ஏறும் போதும் விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைப்பதில்லை. அவர்களின் மீது மேலும் ஒரு இடியாக கோதுமை ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது அதிகபட்ச பாதிப்பை உருவாக்கிவிடும்.
ஏற்கனவே விவசாயிகள் கட்டுபடியாகும் விலையை கோரி போராடி வரும் நிலையில் “கோதுமை விளைச்சலை முழுமையாக கொள்முதல் நடத்து!” “அதற்கு உரிய விலையை கட்டுப்படியாகும் விலையில் விவசாயிகளுக்கு வழங்கு” என்று போராடுவதும் குறுகிய நோக்கத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை எதிர்த்து போராடுவது இன்று அவசியமாகியுள்ளது.
- திருச்செங்கோடன்