பளபளக்கும் மாயத் திரையின் பின்னே
லாப நதி பெருக்கெடுத்து ஓட,
பெண்ணுடல் இங்கே…
காகிதப் பூக்களாய் உதிர்க்கப்படும்
ஒரு சந்தைக் காட்சி!
நுகர்வுப் பேராசையின் கள்ள இருட்டில்
மனித அடிமனத்து வக்கிர மிருகத்திற்கு
நாளும் பாலூட்டி வளர்க்கிறது,
மாளிகைக் கோபுரங்களின் மூலதனப் பேராசை!
இங்கே…
விளைந்த நச்சுச் செடியின்
நுனிக் கிளைகளை மட்டும்
சட்டத்தின் கத்திகள் வெட்டிச் சாய்க்கின்றன!
ஆனால்,
விதைபோட்ட வேர்களோ
புனிதப் போர்வைகளுக்குள் சுகமாய் உறங்குகின்றன!
இருட்டறையின் வக்கிரக் கூர்மைக்கு
விளிம்புநிலை மனிதனின் கைகளில்
விலங்குகள் பூட்டப்படட்டும், தவறில்லை!
ஆனால்,
அவ்வக்கிரத்திற்குப் பொன்னிற ஆடை உடுத்திய
பெரு முதலைகள் தப்புவது என்ன நியாயம்?
காரணங்களைச் சொகுசு மெத்தைகளில் வளர்த்துவிட்டு,
விளைவுகளை மட்டும் இரும்புக் கூண்டில் அடைக்கும்
இந்த ஒற்றைக்கண் தராசு உடையும் நாளே…
சந்தையின் போலித்திரை ஒழிந்து குற்றங்கள் குறையும் நாள்!
க.காவியதாசன்






