பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமரிசிக்கும் போதெல்லாம், “பாரதியை அவரது வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்றும் கூறி விமரிசிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள். சரி. வரலாற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசீலிப்போம். பாரதி, சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறார். கோகலே, தாதாபாய் நௌரோஜி, திலகர், லாலா லஜபதி ராய் போன்ற வடஇந்தியத் தலைவர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம், ரசியாவைப் பற்றியெல்லாம் பாடியிருக்கிறார். காக்கை, குயில், கிளி, மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்.

ஆனால், அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனைப் பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை. சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்ற இலக்கிய அறிவோ, உலக ஞானமோ இல்லாத அந்தப்பகுதி மக்கள் கட்டபொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி, நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால், பாரதி மட்டும் எழுதாதது ஏன்? ஒருவேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்! “எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து, எட்டப்பனின் வாரிசான ‘மன்னனுக்கு’த் தோழனாக இருந்து அவனை அண்டிப் பிழைத்த ஒரு கவிஞன், கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்?” என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக்கூடும்.

‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி…’, ‘அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் …’ அடேயப்பா! ஈட்டி போல் பாயும் சொற்கள்! பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய ‘நேர்மைத் திறத்தைப் பற்றி’ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுகளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருக்கிறார்களா?

வே.மாணிக்கம் எழுதிய ‘தானாபதிப் பிள்ளை வரலாறு’ என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர், ஆ.இரா.வேங்கடாசலபதி: ‘கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைப் பற்றியோ, பாஞ்சாலங்குறிச்சி பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு, மிகுந்த நலிவுற்று, பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1919-இல் ஓலைத் தூக்கும் சீட்டுக் கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில், ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய ‘வம்சமணி தீபகை (1878) நூலைச் செம்மைப்படுத்தித் தர பாரதி முன்வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், கட்டபொம்மனைப் பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்.”

அதாவது, எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வேங்கடாசலபதி. அத்தகைய தீயூழிலிருந்து பாரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here