2

ந்தியாவில் நிலவும் இத்தகைய யதார்த்தங்களையும், அவற்றுக்குரிய தனிச் சிறப்பான கூறுகளையும் கண்டறிந்து, வரையறுத்துக் கொள்வதற்கு பதிலாக, மாவோவின் மக்கள் யுத்தப் பாதை என்ற பெயரில் சீனத்தின் லின் பியாவோ கொச்சையாகத் தொகுத்துரைத்த கொரில்லாப் போர் முறையை எந்திரமுறையில் பிரயோகித்தனர், சாரு மஜூம்தார் தலைமையிலான இந்திய இடது சந்தர்ப்பவாதிகள், கிராமப்புறங்களில் உள்ள கொடிய நிலப்பிரபுக்களையே, முற்று முழுதான அரசு அதிகாரங்களாகக் கற்பிதம் செய்து கொண்டு, விவசாயிகளின் கொரில்லாக் குழுக்களைக் கட்டி அவர்களை அழித்தொழிப்பதன் மூலம் அதிகார வெற்றிடம் ஏற்படும்: அரசியல் அதிகாரங்களை விவசாயிகள் கைப்பற்றி, மாற்று அதிகார மையங்களை கிராமப்புறங்களில் நிறுவிட முடியும் என்றனர், சீனத்தின் தனிச்சிறப்பான சாதகமான நிலைமைகள் காரணமாக மாவோ வகுத்துக் கொண்ட மக்கள் யுத்தப் பாதை என்ற இராணுவப் போர்த்தந்திரம் – இராணுவ செயல்தந்திரங்களோடு அரசியல் போர்த்தந்திரம் அரசியல் செயல்தந்திரங்கள் நீங்காமல் ஒன்றிணைந்திருந்தன. அரசு மற்றும் அரசியல் அதிகாரம் பற்றி மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைமை முறையின் அறிவியலான போர்த்தந்திரம் செயல்தந்திரங்கள் பற்றிய அறியாமை, பாமரத்தனம் காரணமாக மாவோவின் மக்கள் யுத்தப் பாதையை வெறும் கொரில்லாவாதம் என்பதாகக் கொச்சைப்படுத்தப்பட்டது.

அரசின் கொடூரமான அடக்குமுறையை எதிர் கொண்டு, பின்னடைவை அடைந்த பிறகும் இதே கொரில்லாவாதம், தற்காப்புத் தந்திரங்களோடும், இரகசிய கொரில்லா நுட்பங்களோடும் புதுப்பிக்கப்பட்டு, தென் அமெரிக்க “சேகுவாரேயின் ஃபுக்கோயிசக் கொரில்லா முறை” யைப் பிரதியெடுத்தாற் போன்று வளர்க்கப்பட்டது. இதில் மாவோயிச கம்யூனிச மையம் முன்னோடியாக விளங்கியது. தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த மக்கள் யுத்தக் குழு, மாவோயிச கம்யூனிச மையத்துடன் ஐக்கியப்பட்டு மாவோயிசக் கம்யூனிசக் கட்சியை நிறுவிய பிறகு, இரண்டு அமைப்புகளின் கொரில்லாக் குழுக்களை இணைத்து, மக்கள் விடுதலை கொரில்லா இராணுவத்தை நிறுவினர். கொரில்லா இராணுவம், கொரில்லா இராணுவ நகரும் போர், கொரில்லா மண்டலத் தயாரிப்புக் கட்டம் என்று புதிய இடைநிலைகளை உருவாக்கிக் கொண்டு, மக்கள் யுத்தப் பாதையிலான மாவோவின் வரையறைகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் கொடுத்தாலும் இது சாரு, சே ஆகியோரின் அரசிலற்ற கொரில்லாவாதத்தின் பரிணாம வளர்ச்சிதான். மக்கள் யுத்தப் பாதை, மக்கள் படை, இராணுவப் போர்த்தந்திரம் மற்றும் அதன் இராணுவச் செயல்தந்திரங்கள் தனிச் சிறப்பான கூறுகளைக் கொண்டிருந்தாலும், அவை அரசியல் பாதை, அரசியல் படை, அரசியல் போர்த்தந்திரம் மற்றும் அதன் அரசியல் செயல்தந்திரங்களால் வழிநடத்தப்பட வேண்டும்”.

ஆனால் இத்தகைய  கண்ணோட்டமில்லாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, அலைந்து திரியும் கொரில்லா முறை மற்றும் நகர்ப்புற கொரில்லா முறை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்படும் இயக்கங்கள், குறிப்பாக மாவோயிச இயக்கம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் திரள் பாதையில் செந்தளப் பிரதேசங்களை கட்டுவதும், படிப்படியாக கிராமப்புறங்களில் இருந்து முன்னேறி நகரங்களை சுற்றி வளைக்கின்ற நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை தான் பொருத்தமானது என்பதை முன்வைத்து புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் செயல்படுகின்றன.

”மக்கள் படை என்பது தனித்தனியான ஆள்சேர்ப்பு அல்ல; மக்கள் அதிகார அமைப்பு என்பது கட்சித் தலைமையால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. மக்கள் படையும், மக்களின் மாற்று அதிகார அமைப்பும் அரசியல் எழுச்சி, பயிற்சியின் மூலம் முன்னோடிகளைக் கொண்டு உருவாக்கி, வளர்த்தெடுத்தப்பட வேண்டியவை. இந்த வளர்ச்சிப் போக்கில் செந்தளப் பிரதேசத்தை நிறுவுவது முக்கியமான படிநிலையாகும்.

உள்ளூர் அரசியல்-ஆயுதந்தாங்கிய எழுச்சிகள் மூலம் ஒரு சில இடங்களில் தளப்பிரதேசங்களை நிறுவுவது நாடு தழுவிய அளவில் அரசியல் எழுச்சியை உருவாக்கும். இதனால் ஏற்றத்தாழ்வான, சமச்சீரற்ற முறையில் வளர்ந்துள்ள மக்களின் அரசியல் உணர்வை சமச்சீராக்குவதற்கும் அதன் ஏற்றத் தாழ்வு மட்டத்தைக் குறைப்பதற்கும் மற்றும் அரசியல் உணர்வை பொதுவில் உயர்த்துவது, சிதறியிருக்கும் அரசியல் சக்திகளை மையப்படுத்துவதற்கும் புரட்சியின் பால் பல்வேறு பிரிவு மக்களை ஈர்க்கவும் மிகப் பெரிய உந்துவிசையாக செயல்படும் நீண்டகால மக்கள் யுத்தப் பாதைக்கான அடிப்படை சித்தாந்தம் இதுதான்.”

நாடு சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்டு 77 ஆண்டுகள் கடந்த பின்பு நாட்டில் உள்ள 143 கோடி மக்களின் வாழ்க்கை நிலைமை தான் என்ன? விரல் விட்டு எண்ணக்கூடிய தேசங்கடந்த தரகு முதலாளிகளும், தரகு முதலாளிகளும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சாதி பின்னணி கொண்ட நிலப்பிரபுத்துவ சக்திகளும் அதிகாரத்தை கைப்பற்றி பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர்.

படிக்க: 

 ஆகஸ்ட் 15: போலி சுதந்திரத்தை புறக்கணி! விடுதலைக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடு!

 ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின்  கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு முதலாளித்துவம் மற்றும் தொழிலாளி வர்க்கம் இரண்டு கூறுகளாக பிரிந்து கிடந்த உலக சூழ்நிலை இன்று இல்லை. தற்போதைய நிலைமையில் தொழிலாளி வர்க்கமே பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றது.

குறிப்பாக உத்தரவாதமான வாழ்க்கை பின்னணி கொண்ட குட்டி முதலாளித்துவ, நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை இந்தியா போன்ற நாடுகளில் அதிகரித்துக் கொண்டே செல்வது, எதிர் புரட்சி மனப்பான்மையை அதிகரித்துள்ளது. அதாவது சமூக மாற்றத்தை புரட்சியின் மூலம் நடத்துவதற்கு பதிலாக இருக்கின்ற அல்லது நிலவுகின்ற சமுதாய அமைப்பிலேயே மேம்பட்ட சமூக அமைப்பை உருவாக்குவதற்கு போராடுவது தான் தற்போதைக்கு சாத்தியம் என்று பேசுகின்ற புதிய வகையான சித்தாந்த குழப்பங்கள் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினரிடம் தொடர்ந்து விதைக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்கம் பல்வேறு தொழிற்சங்கங்களில் பிரிந்துக் கிடக்கின்றனர். அந்த தொழிற்சங்கங்களும் அரசியல் உரிமைக்காக போராடுகின்ற தொழிற்சங்கங்களாக இல்லாமல் பிழைப்புவாதமாகவும், பொருளாதார நலன்களை முன்னிறுத்துகின்ற தொழிற்சங்கங்களாக இருப்பதால் தொழிலாளி வர்க்கம் அணி திரட்டப்பட்டாலும், இத்தகைய சங்கங்கள் ஒரு வரம்புக்கு மேல் அவர்களை போராடுவதற்கு அனுமதிப்பதில்லை.

அதேபோல தொழிலாளிகளின் நட்பு சக்தியான விவசாயிகள், விவசாய உற்பத்தியில் இருந்து சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், நேரடியாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே செல்கிறது.

நகரமயமாக்கலின் காரணமாக உதிரிப் பாட்டாளிகளாக, அதாவது அரை பாட்டாளிகளாக மாறி குறிப்பிட்ட காலங்களில் விவசாய வேலைகளிலும், பெரும்பான்மையான காலங்களில் நகரங்களில் தினக்கூலி தொழிலாளர்களாகவும் வாழ்கின்ற நிலைமை உருவாகியுள்ளது என்பதையும் நாம் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

இத்தகைய நிலைமைகள் இருப்பினும் உற்பத்தி உறவுகளில் விவசாய பின்னனி கொண்ட மக்கள் மத்தியில் ”உழுபவனுக்கே நிலம்” என்று சொத்துடமை அவர்களுக்கு சொந்தமாகவில்லை. இன்னமும் ஆதீனங்கள், மடங்கள், ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள், வக்ஃப் வாரியங்களின் கைகளில் தான் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துள்ளன.  கிராமப்புறங்களில் சாதி ஆதிக்க சக்திகளாக உள்ள பிற்படுத்தப்பட்ட மேல் சாதியினர்தான். இன்றைக்கும் நாடு முழுவதும் நில உடமையாளர்களாக உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் 90-களில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கத்தின் தீவிரதன்மையானது இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசமாக மக்களின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.  இந்த புதிய நிலைமைகளை கணக்கில் கொண்டு உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் மார்க்சிய லெனினிய இயக்கங்களின் பணியாக மாறியுள்ளது.

நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் பயங்கரவாதமாக, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான சக்தியாக உருவெடுத்துள்ள சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, பிற்போக்குத்தனமான (பார்ப்பன) இந்து மத வெறியை தூக்கிப் பிடிக்கின்ற காவிப் படையினர், கார்ப்பரேட் பாசிசத்தையும், காவி பாசிசத்தையும் ஒன்றிணைத்து உருவாகியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவது தான், புதிய ஜனநாயக புரட்சிக்கு முந்தைய புதிய இடைக்கட்டம் என்பதை  அவதானித்து களமாடுகின்றோம். கட்சித் திட்டம், அமைப்புவிதிகள் மற்றும் அவ்வப்போது அரசியல் அமைப்பு அறிக்கைகளோடு “புரட்சிக்கான பாதை” என்கிற ஆவணம் ஒன்றை மார்க்சிய-லெனினிய அமைப்புகள் ஒவ்வொன்றும் வைத்திருக்கத் தான் செய்கின்றன,

ஆனால் இந்த இடைக்கட்டத்தை கடப்பதற்கு பொருத்தமான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணி கட்டப்படுவதும், அதன் மூலம் அமைக்கப்படுகின்ற ஜனநாயகக் கூட்டரசு ஒன்றுதான் தற்போதைய இந்திய நிலைமைகளுக்கு பொருத்தமானது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இந்தப் பாதையின் மூலம் உண்மையான விடுதலையை மக்களுக்கு பெற்று தருவதற்கு போராடுவோம் புரட்சிகர அரசியல் வழியில் முன்னேறுவோம்.

  • ருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here