அன்பார்ந்த வாசகர் நண்பர்களே! தோழர்களே!
மக்கள் அதிகாரத்தின் ஊடக இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்கள் செயல்படத் துவங்கி ஏறக்குறைய மூன்று மாதங்கள் ஆகிறது. இந்த மூன்று மாத காலத்தில் எங்களுடன் இணைந்து பல கட்டுரைகளையும், மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும், வீடியோக்களையும் பகிர்ந்த வாசகர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கார்ப்பரேட் -காவி பாசிசம் என்பது அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியான அடக்குமுறைகளையும், போராடுகின்ற மக்களின் மீதான பயங்கரவாத ஒடுக்குமுறையையும் திணிக்கும் கொடூரமான அரசியலாகும்.
கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற அடிப்படையில், அதை எதிர்த்து போராடும் ஜனநாயக சக்திகள், தொழிற்சங்கங்கள், போராட்ட அமைப்புகள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், தனி நபர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் மக்கள் அதிகாரத்தின் ஊடகம் தனது செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டு முன்னேறி வருகிறது என்பதை எமது பதிவுகளின் மூலம் நீங்கள் அறிவீர்கள்.
இந்த காலகட்டத்தில் எமது தவறுகளின் மீது நேரிலும், அஞ்சல் வழியிலும் நீங்கள் சுட்டிக்காட்டிய விமர்சனங்களை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதை பரிசீலித்து களைந்து கொண்டு வருகிறோம்.
இந்த இணைய தளத்தையும், முகநூல் பக்கங்களையும் எந்த பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் அரசியல் ஒன்றை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு இயக்கி வருகிறோம்.
பொதுவாக சுதந்திர ஊடகம் என்று கூறிக்கொண்டு ஒரு வர்க்க சார்பாக நின்று செயல்படுவதில் எமக்கு விருப்பமில்லை.
நாங்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொடுமைகளையும் இன்றைய காலகட்டத்தில் அது முன்வைக்கின்ற வலதுசாரி பாசிச பயங்கரவாதத்தையும் முறியடிக்கின்ற கம்யூனிச சித்தாந்தத்தை முன்வைத்து செயல்படுகிறோம் என்பதை மீண்டும் அறியத்தருகிறோம்.
இயல்பாகவே கம்யூனிஸ்டுகள் மக்களின் உதவியின்றி செயல்படுவது சாத்தியம் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் எமது ஊடகத்திற்கு தேவையான நிதி உதவியையும் தங்களிடம் இருந்து தான் பெற முடியும். எனவே எமது செயல்பாடுகளை அங்கீகரித்து நிதி உதவி அளித்து எமது பயணத்தை ஊக்கப் படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி!
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
ஒடுக்கப்படுகின்ற மக்களின் உரிமைக் குரல்