திருச்சியில், மலைக்கோட்டை என்.எஸ்.பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் தர்ணா போராட்டம்! கைது!
திருச்சி மாநகராட்சி சார்பாக தரைக்கடைகளை ஒழுங்குபடுத்த வெண்டிங் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் தேர்தல் நடத்தி தரைக்கடை சார்பாக 6 நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்களுடன் 10 க்கும் மேற்ப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட கமிட்டியாக உருவாக்கியது.
இதனை அம்பலப்படுத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான நமது அனைத்து தரைக்கடை பாதுகாப்பு சங்கம் சார்பாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், பிரச்சாரங்கள் செய்து வந்த நிலையில், இன்று (29.11.2025) காலை 11 மணிக்கு பாதிக்கப்பட்ட அனைத்து தரைக்கடை வியாபாரிகளும் என்.எஸ்.பி சாலையில் ஒருங்கிணைந்து கொட்டும் மழையில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் செந்தில் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, தோழர் லதா மற்றும் நமது தரைகடை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,மனித நேய மக்கள் கட்சியின் வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் மற்றும் அதன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒருங்கிணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அனைவரையும் தற்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது காவல்துறை. மண்டபத்தில் அடைத்தாலும் சற்றும் சோர்வடையாமல் தரைக்கடை வியாபாரிகளிடம் சங்கங்களின் நிர்வாகிகள் ஒருங்கினைந்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
000
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்!

திருச்சியில் மாலைக்கோட்டை NSB சாலையில் தரைக்கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து அனைத்து தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு இன்று 01.12.2025 காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியிடம் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி தன்னால் எதுவும் செய்ய முடியாது உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கினார்.

அதை தொடர்ந்து அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். பேரணியில் வெண்டிங் கமிட்டியை கலைத்திடவும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாரும் முழக்க அட்டைகளை ஏந்தியவாரும் வியாபாரிகள் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 5 பேருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என கூற அனைவரும் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து ஊடகங்களும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை பதிவு செய்தனர். ஊடகங்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் பேட்டி அளித்தனர். பிறகு போரட்டத்தின் நோக்கத்தை விளக்கியும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் அனைத்து வியாபாரிகளுக்கும் இருவரும் விளக்கி பேசினர்.

உடனடியாக காவல்துறை அதிகாரி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதி அளித்தார். உள்ளே சென்றவுடன் ஐந்து ஐந்து நபர்களாக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிக்கலாம் என அதிகாரி கூறி வியாபாரிகளை உள்ளே செல்ல அனுமதி அளித்தார். வியாபாரிகள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் தங்களது மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அதன் பிறகு தரைக்கடை வியாபாரிகள் அனைவரையும் அழைத்த தரைக்கடை கூட்டமைப்பின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இப்போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்.

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி மாவட்டம்
தொடர்புக்கு : 809860 4347.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here