சிலி காட்டுத்தீ உயிரிழந்தோர் எண்ணிக்கை 112ஐ கடந்ததுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் கடந்த ஞாயிறு அன்று அறிவித்துள்ளார். இதில் 32 உடல்களை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. தற்போது பிப்.5 இல் கிடைத்த தகவலின்படி தற்போதும் கூட 40 இடங்களில் நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலி கடந்த இரு மாதங்களாகவே பருவ நிலையில் தீவிர மாற்றத்தை சந்தித்து வந்தது. மத்தியில் சிலியில் ஒரு வாரமாக உச்சபட்ச வெப்பநிலை பதிவானது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காட்டுத்தீ பரவ தொடங்கியது. இந்த காட்டுத்தீயில் குறைந்தது 112 பேர் உயிரிழந்துள்ளதாக சிலி அரசு தெரிவித்துள்ளது.
இது சிலி வரலாற்றில் பதிவான மோசமான காட்டுத்தீ என நம்பப்படுகிறது. மொத்தம் 43,000 ஹெக்டேருக்கு மேல்,அதாவது சுமார் 64 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலி உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 3,000 முதல் 6,000 வீடுகள் தீயில் சேதமடைந்துள்ளதாக வீட்டுவசதி அமைச்சகம் கூறுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவிலும் இதே போன்று கடுமையான வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக ஏற்பட்ட காட்டுத் தீயில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர்கள் எரிந்து சாம்பலானது.
சிலியில் 1931இல் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்காவும் இந்த காட்டுத்தியில் அழிந்து விட்டுள்ளது. சுமார் 1600 பேர் வீடுகளை இழந்து தெருவில் நிற்கின்றனர்.
உலகின் வளமான பகுதிகள் பூமத்திய ரேகையை ஒட்டியே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட வளமான தென் அமெரிக்க கண்டமானது தற்போது வரலாறு காணாத வறட்சி மற்றும் காட்டுத்தீயால் பொசுங்கி வருகிறது. உலகின் பிற பகுதிகளிலோ மேக வெடிப்பை ஒத்த கன மழையும், புயல்கள் மற்றும் சூறாவளியின் தாக்கமும் கொடூரமாக நடந்து வருகின்றது. இதற்கும் பெருங்கடல்களின் இயல்பான வெப்ப நிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ள தொடர்பை எந்த பல்கலைக்கழகம் மக்களுக்கு விளக்கப் போகிறது?
ஏற்கனவே அமேசான் மழை காடுகளில் உள்ள ஆறுகள் வறண்டு விட்டன. அதன் விளைவாக டால்ஃபின்கள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.
இதையும் படியுங்கள்:
ஒரு நாட்டை ஏவுகணைகள் அணுகுண்டுகளை போட்டுத்தான் அளிக்க வேண்டும் என்பதில்லை. ஏகாதிபத்தியங்கள் தூண்டி வரும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலால் குண்டுகள் வீசப்படாமலேயே நாடுகள் தீக்கிரையாகின்றன. மக்கள் கொத்துக்கொத்தாக மடிகின்றனர்.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏகாதிபத்தியங்களையும் அவர்களின் அடிவருடி நாடுகளின் தலைவர்களையும் உலக மக்கள் நம்பி இருப்பது? இவர்கள் நடத்தும் பருவநிலை மாற்ற COP மாநாடுகள் ஒன்றையும் புடுங்க போவதில்லை என்பதை இனியாவது உலகிற்கு உரத்துச் சொல்வோம். புவி வெப்பமயமாதலை தடுக்க, கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு கடிவாளமிட, போராட்டங்களை கட்டியமைப்போம்.
இளமாறன்.