செப்டம்பர் 17
தந்தை பெரியார் பிறந்தநாளில்..
மக்கள் அதிகாரம் – நடத்தும்
மனுசாஸ்திரம் எரிப்புப்
போராட்டத்தினைப்
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது..
போராட்டம் வெல்ல வாழ்த்துகிறது..

அன்பார்ந்த தோழர்களே! வணக்கம்.
அரசியல் சட்டம் நடைமுறையில் இருக்கிற ஒரு நாட்டில் அரசியல் சட்டம் பேசும் சமத்துவத்துக்கு எதிரான பல கருத்துகளையும், மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலாக இருக்கிற பெண்களை மனிதப் பிறவிகளாகக் கூடக் கருதாமல் இழிவுபடுத்தும் ஒரு மத நூலாகும் மனு சாஸ்திரம்.

புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் போராடியத் தலைவர்களான புரட்சியாளர் அம்பேத்கரும் பெரியாரும் 1927 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் காரணங்களுக்காகவே மனுசாஸ்திரத்தை எரித்தார்கள். தொடர்ந்தும் பல காலகட்டங்களில் உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் பல்வேறு இயக்கங்களும் எரித்த நூல் இந்த மனுநூலாகும்.

மதவாதத்தையும், வெறுப்பு பரப்புரையையும் மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய விரும்பும் பாரதிய ஜனதா கட்சிக்காரர்களுக்கு மனு சாஸ்திரம் ஒரு கருவியாகக் கிடைத்திருக்கிறது. அதில் உள்ளவற்றை எடுத்துப் பேசினாலும்கூட இந்துக்களைப் புண்படுத்தி விட்டார்கள் என்று ஓலமிடுவது ஒரு வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

மனு சாஸ்திரம் போன்ற ஜாதி ஆணவத்தைத் தாங்கிப் பிடிக்கிற நூல்களை – அதில் பொதிந்து கிடக்கிற நச்சு சிந்தனைகளை உணராமல் இருக்கிற மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில்தான் பெரியாரின் பிறந்த நாளில் (17-9-2022) மனு சாஸ்திர நூல் பிரதிகளை எரிப்பது என்று ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு திட்டமிட்டு இருக்கும் போராட்டம் மனுசாஸ்திரத்தைப் பற்றி ஒரு விரிவான விவாதத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் என்று நாம் நம்புகிறோம்.

விவாதம் வரவேண்டும் என்று விரும்புகிற நாம் சரியான நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற ‘மக்கள் அதிகாரம்’ – அமைப்பின் போராட்டத்தை வாழ்த்துகிறோம்; வரவேற்கிறோம்.

அது குறித்த செய்திகள் தமிழ்நாடு முழுதும் பரவுவதற்கு அனைவரும் நம்மால் ஆன உதவிகளைச் செய்வோமாக! –
என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது..

தோழர். பொழிலன்
முகநூல் பக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here