அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இலங்கை பற்றி எரிகிறது. 90களில் அமலாக்கத் தொடங்கிய புதிய தாராளவாதக் கொள்கை இலங்கையை மறுகாலனியாக்க பாதையில் வேகமாக கொண்டு சென்றது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கும், இந்திய,சீன பிராந்திய ஆதிக்கத்திற்கும் இலங்கையின் இயற்கை வளங்களும், உலகிலேயே தரமான ‘பச்சைத் தங்கம்’ என்று அழைக்கப்படுகின்ற தேயிலை தோட்டங்களும், இயற்கை எழில் கொஞ்சும் சூழலைப் பயன்படுத்தி கட்டப்பட்ட ரிசார்ட்டுகள் மூலம் கிடைத்த சுற்றுலா வருமானமும் சுரண்டி கொள்ளையடிக்கப்பட்டன.
உள்நாட்டில் நடைபெற்ற தமிழ் மக்களின் இன அழிப்பு யுத்தமானது சிங்கள பொருளாதாரத்தை பல மடங்கு அதல பாதாளத்திற்கு தள்ளியது. நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு தமிழர்களின் தனி ஈழக் கோரிக்கையை தான் காரணம் என்று சொந்த மக்களை திசை திருப்பி அடக்கி ஒடுக்கி வந்த சிங்கள பேரினவாத அரசு இன்று ஆள தகுதி இழந்து மக்களால் தூக்கி எறியப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார திவால் நிலைமை தமிழர், சிங்களர், இஸ்லாமியர் மூவரையும் ஒன்றிணைத்து நாட்டில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பது என்ற புதிய பாதையில் பயணிக்கத் துவங்கி உள்ளனர் என்பதை இந்தக் காணொளி நமக்கு சுட்டுகிறது.
ஆசிரியர் குழு
மக்கள் அதிகாரம்