பார்ப்பன(இந்து) மதத்தை மறுத்து சுத்த சன்மார்க்கம் கண்ட வள்ளலாரை காவிகளிடம் இருந்து மீட்போம்!

வள்ளலார் முன்வைத்த சுத்த சன்மார்க்க நெறிகளை, பார்ப்பன மறுப்பு கொள்கையை புறந்தள்ளிவிட்டு, வடலூர் சத்திய ஞான சபையை இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது ஒரு வரலாற்று கேடான செயலாகும்.

1

அன்பார்ந்த பெரியோர்களே!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் கமைக்கண்டே இளைக்கேன்.

(திருவருட்பா -3471)

என்று பிற உயிர்களையும் உயர்வாக கருதும், சக மனிதர்களின் துன்ப துயரங்களைக் கண்டு துன்புறும் உயர்ந்த மனிதப் பண்பையும், “கொல்லா விரதம் குவலயம். ஓங்குக என்று உயிர் பலிகளை தவிர்க்க கோரிய வள்ளலார், தமக்கென்று தனி வழியையும், தமது மார்க்கத்திற்கென சங்கம் கண்டதோடு, சன்மார்க்கத்திற்கென தனிக் கொடியையும், “அருட்பெரும் ஜோதி! தனிப் பெரும் கருணை!” என்ற மகா மந்திரம் என்று அழைக்கப்படும் தனி மந்திரத்தையும் கண்டவர். தமது உத்திர ஞான சிதம்பரம் எனப்படும். சத்திய ஞான சபையை கோவில் வடிவில் அமைக்காமல் ‘சபை’ என்ற வடிவில் அமைத்தார்.

இவை ஒவ்வொன்றும் ஆழமான பொருள் கொண்டவையாகும். பார்ப்பனர்கள் பூணூல் போடும் போதும்,வேத சடங்குகளின் போதும் உச்சரிக்கும் காயத்திரி மந்திரத்திற்கு மாற்றாக மகா மந்திரமும், கோவில்-சிலைவழிபாடு-கருவறை போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மக்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பன மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் வகையில் அனைவரையும் சமமாக மதிக்கும் ‘சபையை’ அமைத்ததும், ஆதிசங்கரன் தூக்கி திரிந்த காவிக் கொடிக்கு பதிலாக வெள்ளை நிறக் கொடியை சன்மார்க்க சங்கத்திற்கு தீர்மானித்ததும் என அனைத்தும் அவர் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய தீண்டாமை உள்ளிட்ட சமூக கொடுமைகளுக்கு எதிரான கலகம் ஆகும். இதுவே சுத்த சன்மார்க்க சமயம் ஆகும்.

தமிழகத்தின் பெருமைக்குரிய வள்ளலாரின் வழிபாட்டு முறையானது, பார்ப்பன (இந்து) மதத்தின் வழிமுறைகளை மறுக்கும் தனித்துவம் மிக்க வழிபாட்டு முறையாக, தனிமத வழிபாடாக உள்ளது. அந்த வழிபாட்டு முறையை அங்கீகரிக்க கோரி போராடுவோம். கர்நாடகாவின் லிங்காயத்துகள், தமிழகத்தில் அய்யா வழிபாட்டு முறை போலவே வள்ளலார் வழியும் தனி வழிபாடு முறை என்பதே சரியான தீர்வாகும்.

இந்திய நாட்டின் மிகப் பெரும் சாபக்கேடான, இந்து மதத்தின் இழிவான சாதியமைப்பை பகவத் கீதை முன் வைக்கும் நால் வருண சமூக அமைப்பையும், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பரப்பும் ஆசாரம், குலம், கோத்திரம், சாதிய அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட இந்துமத சமூக வாழ்வியல் நெறிகளையும், பிற்போக்கு பழக்க வழக்கங்களையும் மறுத்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இணையற்ற சீர்திருத்தவாதியான வள்ளலாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபே நமது மரபாகும்.

வள்ளலார் முன்வைத்த சுத்த சன்மார்க்க நெறிகளை, பார்ப்பன மறுப்பு கொள்கையை புறந்தள்ளிவிட்டு, வடலூர் சத்திய ஞான சபையை இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது ஒரு வரலாற்று கேடான செயலாகும். அதுமட்டுமல்ல! வரலாறு நெடுக தனக்கு எதிராக போராடிய சீர்திருத்தவாத, முற்போக்கு கருத்துக்களை எல்லாம் அழித்து, ஒழித்த பார்ப்பன இந்து மதம், சமய சாஸ்திரங்கள், நால்வர்ண பாகுபாடு இவற்றை மறுத்து வாழ்ந்த வள்ளலாரை தின்று செரிப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலமாக முயற்சி செய்து கொண்டுள்ளது. அந்த கொடிய செயலுக்கு துணை போவதாகும்.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை அவர் உயிருடன் இருக்கும் போதே ஆடூர் சபாபதி குருக்களின் மூலம் உடன் புகுந்த பார்ப்பனக் கும்பல் சதி செய்து, அவரை இருட்டுக்குள் தள்ளி ஒழிக்க முயன்றது. ஆனால் அந்த சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது வேத மறுப்புக் கொள்கைகளால் சமத்துவம் போதித்த, புதிய ‘ஒளி வழிபாட்டை’ காட்டிய அவரை பின்பற்ற இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்ல வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறை உரைநடை பகுதியில் “ஜீவ ஒழுக்கமாவது ஆண்மக்கள், பெண்மக்கள் முதலியவர்கள் இடத்திலும் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி எல்லாரும் நம்மவர்களாக சமத்தில் கொள்ளுவது” என்பது வள்ளலாரின் நெறியாக வகுத்து தரப்பட்டுள்ளது.

ஐந்து திருமுறைகளும் சமய சன்மார்க்கம்!
ஆறாம் திருமுறையே சுத்த சன்மார்க்கம்!

சென்ற நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிலும், தமிழகத்திலும் நிலவிய கேடான நால்வருண-சாதிய சமூக அமைப்பையும் அது உண்டாக்கிய ஏற்றத் தாழ்வுகளையும் கண்டு மனம் கொதித்த வள்ளலார், தனது ஆறாம் திருமுறையில் அதற்கு எதிராக கலகம் புரிகிறார். பார்ப்பன மதத்தின் கொடுங்கோன்மையான சாதி, வருண பாகுபாடுகளை எதிர்த்து ஆறாம் திருமுறையில் முன் வைத்த சமத்துவ கொள்கைகளே நமது மரபாகும்.

வள்ளலார் பொதுவாக சமய மதங்களை எதிர்த்து போராடியவர் மட்டுமல்ல! அப்போது ஆதிக்கத்தில் இருந்த சைவ மதத்தையும் சேர்த்தே விமர்சிக்கிறார்.

“பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுத்தாதீர்”

என்றும், இதில் எல்லாம் என்பதில் சைவ மதமும் உள்ளடங்குகிறது.

மதம் என்னும் பேய் பிடித்தாடுகின்றார் எல்லாம்
மன்றிடத்தே வள்ளல் செயும் மாநடம்
கண்குவரோ
மதமாகிய பேய் பிடியாதிருக்க வேண்டும்

பார்ப்பன மதத்தின் கொடுமைகளை முகத்தில் அறைந்து போதிக்கிறார்.

தனது திருவருட்பாக்களின் மூலம் முதன் முதலில் பண்டித தமிழ் நீக்கி, உழைக்கும் மக்களுக்கு புரிகின்ற வகையில் எளிய தமிழில் சாதி, சமயம், சடங்கு, வருணம், ஆச்சிரமம், கோத்திரம், அனைத்தையும் சாடி வீழ்த்தினார்.

வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்
ஒதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே

(திருவருட்பா – 3767)

வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவறியீர் – சூதாகச்
சொன்னஅலால் உண்மை வெளி உரைத்திலை
என்ன பயனோ இவை

(திருவருட்பா – 5516)

என்று வேதங்களின் சூதுபற்றியும், அதன் பித்தலாட்டங்களையும் திருவருட்பா மூலம் மககளுக்கு தோலுரிக்கிறார்.

நாம் முன் பார்த்தும் கேட்டும்
லட்சியம் வைத்துக் கொண்டிருந்த
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய
கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்.
ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது
குழுஉக்குறி யன்றித் தெய்வத்தை
இன்னது என்றும் தெய்வத்தினுடைய
உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும்
புறங்கவியச் சொல்லாமல்
மண்ணை போட்டு மறைத்துவிட்டார்கள்

என்று தனது பேருபதேசத்தில் வேதம், ஆகமம், புராணப்புரட்டுகளை நேரடிப் பொருளில் அம்பலப்படுத்தி தெளிந்த நோக்குடன் புறந்தள்ளும்படி எடுத்துரைக்கின்றார்.

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்

(திருவருட்பா -5566)

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணர்ந்தேன்.

(திருவருட்பா – 4025)

வேத, சாதி மறுப்பே வள்ளலாரின் வழி! அதை செரிக்கப் பார்க்கும் பார்ப்பன (இந்து)மதத்தை ஒழி!

நிலப்பிரபுத்துவ கொடுங்கோண்மையும், பார்ப்பன சாதி ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில், கி.பி 1823 முதல் 1874 வரை வாழ்ந்த வள்ளலார் 1874 -ல் மறைந்தார். அவர் மறைவையொட்டி அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியின், தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியர் A.H ஹார்கின்ஸ் ICS என்பவரால் வெளியிடப்பட்ட அரசாணையிலும், 1878 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தென் ஆற்காடு மாவட்ட அரசு இதழிலும் (கெஜட்), அதன் பிறகு 1906 தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பிரான்சிஸ் என்பவரால் இரண்டாம் பதிப்பாக மீண்டும் வெளியிடப்பட்ட அரசாணையின் பக்கம் 316, 317 ஆகிய இரண்டிலும், வள்ளலாரின் வழிபாட்டு முறை என்பது பார்ப்பன இந்து மதத்திற்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு தனி வழிபாட்டு முறை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அதாவது “இது ஒரு சாதாரண கோவில் அல்ல! ஏனெனில் அதன் வழிபாட்டு முறைகள் வழக்கமான வழிபாட்டு முறைக்கு அப்பாற்பட்டது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் காலணியாதிக்கம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு ஆறு மதங்களாக பிரிந்து கிடந்த பார்ப்பன இந்து மதம் இன்று அனைவரும் நினைப்பதைப் போல ஒரே மதமாக இல்லை. செத்துப்போன சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற ‘உபதேசத்தில்’ கூறியுள்ளபடி “நல்லவேளையாக பிரிட்டிஷ்காரர்கள் வந்ததால் நமது இந்து மதம் ஒருங்கிணைக்கப்பட்டது” என்று கூறியுள்ளதே உண்மையாகும்.

ஆனால் இந்த சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் வடலூர் சத்திய ஞான சபையை பார்ப்பன இந்து மதம் விழுங்கியதை எதிர்த்து ஒரு நூற்றாண்டு காலமாக பலரும் போராடி வருகின்றனர். குறிப்பாக, ‘சத்திய ஞான சபையை இதன் பூசாரியாக இருக்கும் சபாநாத ஒளி (பார்ப்பனர்) சீரழித்து வருகிறார். வள்ளலார் வகுத்த நெறிகளுக்கு எதிராக சமய வழிபாடு நடத்தி அதன் தனித் தன்மையை கெடுக்கிறார். இதனை ஒழுங்கு படுத்துங்கள்’ என்று இராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடியை சேர்ந்த வள்ளலாரின் தொண்டர், தொண்டர்குல வெ.பெருமாள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஜி. சுப்பிரமணியன் ஆகிய இருவரும் மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வாதப் பிரதிவாதங்களை ஆய்வு செய்து தீர்ப்பளித்தார். அதன் அடிப்படையில் 2007 ஆம் ஆண்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டுள்ளது. விருப்பபடி ஆனால் வள்ளலாரின் தனி வழிபாட்டு முறை என்பதனை அமுல்படுத்தாமல் சத்திய ஞான சபையும், சித்தி வளாகமும் இன்னமும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இந்து என்று சொல்லாதே! பார்ப்பான் பின்னே செல்லாதே!

பார்ப்பன இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பக்தர்களின் நிலைமை தான் என்ன? தமிழகத்தில் ஆகம விதிகளின்படி செயல்படும் 36 ஆயிரம் கோயில்களில், பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்யவும், அர்ச்சனை செய்யவும், பிறப்பை மட்டுமே தகுதியாக கொண்டு கருவறைக்குள் செல்லும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சி முடித்த, வேத, ஆகமங்களை அவர்கள் சொல்லும் நீதிப்படியே முழுமையாக கற்றுக் கொண்ட பிற சாதியைச் சார்ந்த தகுதி படைத்த அர்ச்சகர்களை கருவறைக்குள் அனுமதிப்பதை அறநிலையத்துறை கூட அதிமுக ஆட்சி இருந்தவரை திட்டமிட்டு தவிர்த்து வந்தது.

அனைத்து இந்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. சைவ கோவிலில் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் கண்டு பார்ப்பனக் கும்பலுக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. கருணாநிதியை விட மோசமானவர் ஸ்டாலின் என்கிறார், ஹெச் ராஜா. இது பற்றி எல்லாம் கவலையின்றி காஞ்சி சங்கரமடம் பார்ப்பனர்களுக்கு மட்டும். வருடந்தோறும் வேத பாடசாலை மூலம் பயிற்சியளிக்கிறது.

இந்த சூழலில் வள்ளலாரின் சத்திய ஞான சபையை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விட்டு வைத்திருப்பது அவரது சாதி, சமய மறுப்பு கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல! அறம் கொன்ற செயலாகும்.

தமிழகத்தில் வள்ளுவர் முதல் வள்ளலார், அய்யா வைகுந்தர் வரை பார்ப்பன மயமாக்குவது, தனது பார்ப்பன மதத்திற்குள் இழுப்பது, பணியாவிட்டால் வீழ்த்துவது, கேரளாவில் நாராயண குருவை போற்றுவது அதன் மூலம் தனக்குள் விழுங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பார்ப்பனியத்தையும், சாதியையும் எதிர்த்து நின்ற முன்னோடிகள் அனைவரையும் தின்று செரிப்பதன் மூலம் பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை விழுங்கி விட எத்தணிக்கிறது பார்ப்பன கும்பல்.

அதுமட்டுமின்றி ஜக்கி, பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் மூலம் “இந்துக் கோவில்களை “கைப்பற்றவும், பார்ப்பன எதிர்ப்பு பண்பாடுகளை செரிக்கவும் கிளம்பியுள்ளனர். இதையெல்லாம் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.

வள்ளலாரின் கொள்கைகளை மக்களுக்கு பரவ விடாமல் தடுத்து அவரது சுத்த சன்மார்க்க கருத்துகளை பார்ப்பன (இந்து) மதத்திற்குள் அடக்கி வைத்துள்ள பார்ப்பன – பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

பார்ப்பன இந்து மதம் விதிக்கும் நால் வருண பாகுபாடு, சாதி, சமயம் அனைத்தையும் ஒழித்து, புதிய ஜனநாயக வாழ்வியல் முறையை உருவாக்குவோம்.

வள்ளலாரின் பெயரில் பொதுசேவைக்கு கிடைத்த ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து சத்திய ஞான சபைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்போம். அணிதிரண்டு வாரீர்.

♦♦♦

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
9788808110

1 COMMENT

  1. இந்து என்று சொல்லாதே ! பார்ப்பான் பின்னே செல்லாதே !

    காலத்திற்கும் பொருந்தகூடிய அரசியல் முழக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here