2023-ல் ஹருண் உலக பில்லியனர்களின் பட்டியலில் (Hurun Global Billionaires List) இடம் பெற்றிருந்த 187 டாலர் பில்லியனர்கள் மீது செல்வ வரி விதிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர் பேரா. ஜெயதி கோஷ், தலைவர்களில் ஒருவராக இருந்த சர்வதேச கார்ப்பரேட் வரிகளின் சீர்திருத்தத்திற்கான சுதந்திரமான ஆணையம் (Independent Commission for the Reform of International Corporate Taxation) பரிந்துரைத்திருந்தது. ஆனால் எந்த மைய நீரோட்ட பத்திரிக்கைகளிலும் இது குறித்து விவாதம் எழவில்லை.
2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் உள்ள செல்வங்களை சூறையாடி வரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற விவாதம் துவங்கிய உடனே கார்ப்பரேட் கைக்கூலி மோடியின் இருதயம் துடித்துக் கொண்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவிலும் அதே போன்ற அலறல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்வதற்கு பதிலாக முதலாளித்துவ கைக்கூலி எழுத்தாளர்கள் எதிர்மறையாக அதனைப் பற்றி எழுதி வருகிறார்கள்.
”பணக்காரர்களின் மீது வரி விதித்தால் அவர்கள் கோபித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். வரிகளற்ற சொர்க்கங்களில் தங்கி தமது மூலதனத்தை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவார்கள். அப்போது அவர்களிடமிருந்து தொழில் நடத்துவதற்குரிய வரி, அதாவது கார்ப்பரேட் வரி மட்டும் தான் பெற முடியும். எனவே இது போன்ற அபத்தமான முன்மொழிவுகளை நிறுத்த வேண்டும்” என்று பாஜகவின் ஊது குழலான கெளதம் சென் போன்ற பொருளாதார வல்லுநர்கள் கூவத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை அதற்கே உரிய முகத்தை காட்டாமல் போகாது. 2008 பொருளாதார நெருக்கடியின் போது உலகின் முதல் பெரும் பணக்காரனான பங்கு சந்தை சூதாடி வாரன் பஃப்பெட், ”அமெரிக்க அரசாங்கம் எங்களின் மீது கூடுதல் வரி போட்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், அவ்வாறு செல்வந்தர்களின் மீது வரி போடுவதை உடனடியாக செய்யாவிட்டால் சமூகத்தில் உள்ள எதார்த்தம் அதற்கே உரிய முடிவுகளை மேற்கொள்ளும்” என்று அலறினார்.
அது என்ன அதற்கே உரிய முடிவு? செல்வத்தை குவித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தனது உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட செல்வங்களையும், அதாவது அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறித்தெடுப்பதற்கு பெரும்பான்மை மக்கள் தயாராகி விடுவார்கள் என்பது தான் அந்த அலறல்.
இப்போது “உலகில் பல்வேறு நாடுகளில் செல்வ வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. ஆனால் அதனை முறையாக அமல்படுத்த முடியாததால், அதாவது செல்வந்தர்கள் வரி விதிப்பதை பொறுத்துக் கொள்ளாமல், நாட்டை விட்டு வெளியேறி ஓடியதால், அந்த நாடு பொருளாதார ரீதியாக பின் தங்குகிறது என்ற காரணத்தைக் காட்டி செல்வ வரிவிதிப்பு பல்வேறு நாடுகளில் தோல்வியடைந்த்து விட்டதால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாடுகளில் மட்டும்தான் இது நடந்து கொண்டுள்ளது. எனவே அது போன்ற முயற்சிகளை இந்தியாவில் மேற்கொள்ளக்கூடாது” என்று இப்போதே சாமியாட துவங்கிவிட்டனர்.
இந்தியாவில் உள்ள வெறும் ஒரு சதவீதம் பணக்காரர்கள் நாட்டில் உள்ள 40.6 சதவீதத்தில் சொத்துக்களை கையில் வைத்திருக்கும் போது மீதமுள்ள 99 சதவீத மக்கள் 60 சதவீத சொத்துக்களை பிரித்துக் கொள்வது எப்படி சாத்தியமாகும். எனவே ஏற்றத்தாழ்வுகளையும் நாட்டில் உள்ள அனைத்து விதமான சிக்கல்களையும் தீர்ப்பதற்கு செல்வ வரி விதிப்பு நடத்தப்பட வேண்டும்.
சொத்து வரி ஆண்டுதோறும் செலுத்தப்படுவதாகும். ஆனால் வாரிசு உரிமை வரியோ பெரும் பணக்காரரின் வாழ்நாளில் ஒரு முறை அதுவும் அவர் சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்றித் தரும்போது செலுத்தப்பட வேண்டிய வரி. ஆனால் இதை செலுத்த விருப்பமில்லாமல் அரசாங்கத்தை ஏய்க்கின்றனர்.
ஒரு புள்ளி விவரப்படி முதல் ஒரு 1% பணக்காரர்கள் மீது 2% சொத்து வரியும், 33.3% வாரிசு உரிமை வரியும் வசூலித்தால் கிடைக்கும் தொகையானது இந்தியாவின் ஜிடிபி யில் 10% க்கு சமமாகும். ( சுமார்1500 பில்லியன் டாலர்).
சமீபத்தில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி பிரிட்டன் பிரதமருக்கும், தனது மகளுக்கும் பிறந்த குழந்தைக்கு (பேரனுக்கு) சொத்துக்களில் பங்கு கொடுத்திருந்தார். அதன் மீது அமெரிக்காவில் சில மாநிலங்களிலும்< சில முன்னேறிய ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது போல வாரிசு உரிமை (Inheritance tax) வரி இந்தியாவில் போடப்பட்டு இருந்தால் அவர் சுமார் 20 ஆயிரம் கோடி வரி செலுத்தி இருக்க வேண்டும்.
செல்வ வரி, பரம்பரை வரி ஆகியவை இருக்கட்டும். தற்போது நடைமுறையில் உள்ள கார்ப்பரேட் வரி 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த போது 34.5 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களின் செல்வத்தை பல்லாயிரம் கோடி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்து உள்ளனர். அந்த பணத்தைக் கொண்டு மீண்டும் உலகில் பல்வேறு மூலைகளில் மூலதனம் போட்டு தனது செல்வத்தை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
இதையும் படியுங்கள்:
- இந்து மதவெறியைக் கிளப்ப பயன்படுத்தப்படும் பரம்பரை வரி!
- இந்துமத வெறியைக் கிளப்ப பயன்படுத்தப்படும் பரம்பரை வரி! பாகம் 2
இதைப் பற்றிய விவாதம் நடத்துவது மட்டுமின்றி நாட்டில் நிலவுகின்ற இரு துருவ ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரே தீர்வு நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் சமமாக பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்பதுதான்.
இத்தகைய கருத்துகளை மக்கள் மத்தியில் முன்வைத்து பிரச்சாரம் செய்தால், ’நகர்ப்புற நக்சல்கள்’, ’மாவோயிஸ்டுகள்’, ’தீவிர கம்யூனிஸ்டுகள்’ என்று பல்வேறு பெயர்களை சூட்டி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கு முயற்சிப்பார்கள் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி எழுத்தாளர்களும், அரசு கட்டமைப்பை வைத்துக்கொண்டு உல்லாச ஊதாரி வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள், கலெக்டர், தாசில்தார் மற்றும் அதிகார வர்க்கத்தினர்.
இது போன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாமல், தற்போது உருவாகியுள்ள இந்த விவாதத்தை பரவலாக்குவோம். தனது உழைப்பினால் நாட்டில் அனைத்து செல்வங்களையும் உருவாக்கியுள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு ஏன் செல்வத்தில் பங்கு கேட்கக் கூடாது என்ற கருத்தை உருவாக்குவோம்.
- மாசானம்