
பஞ்சாபில் உள்ள CT பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்கள், ரமலான் மாதத்தில் சஹரி மற்றும் இஃப்தார் நேரங்களில் அடிப்படை உணவு வசதி கோரியதற்காக, விடுதி வளாகத்தை காலி செய்யுமாறு கூறப்பட்டதுடன், தங்கள் சேர்க்கை ரத்து செய்யப்படும் என மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாங்கள் இங்கு நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறோம், ஏனெனில் எங்களுக்கு சஹ்ரி அல்லது இப்தாரிக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்று கூட, நாங்கள் மெஸ்ஸுக்குச் சென்றபோது, உணவு எதுவும் கிடைக்கவில்லை,” என்று மாணவர்கள் எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோவில் பேசுவதை கேட்க முடிகிறது.
“துணைவேந்தர் எங்களிடம் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, ‘இங்கே கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறுங்கள்’ என்றார். எங்கள் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.” சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், காஷ்மீர் மாணவர்களை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு துணைவேந்தர் மிரட்டுகிறார்.
பஞ்சாபில் உள்ள சி.டி. பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் மாணவர்கள் ரம்ஜான் மாதத்தில் நோன்பு துறக்கும் இப்தார் மற்றும் செஹ்ரி உணவு ஏற்பாடுகளைச் செய்துகேட்டதற்காக, வளாகத்தை விட்டு வெளியேறும்படியும் அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்று அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. pic.twitter.com/TNm0JuHZlV
— Makkal Athikaram (@peoplespowerTN) February 24, 2026
Jammu and Kashmir Students Association (JKSA) அமைப்பு, பிப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை அன்று, இந்த விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் அவர்களின் தலையீட்டை கோரியுள்ளது.
இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாசிர் குஹேஹாமி கூறுகையில் “இந்த மாணவர்கள் முறையாக கட்டணம் செலுத்தும் விடுதி மாணவர்கள். ரமலான் மாதத்தை முன்னிட்டு தேவையான உணவு ஏற்பாடுகளை மட்டுமே அவர்கள் கேட்டனர். ஆனால், அவர்களின் நியாயமான மற்றும் சரியான கோரிக்கையை கவனிக்காமல், துணைவேந்தரும் சில பல்கலைக்கழக அதிகாரிகளும் மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் தவறான வார்த்தைகள் பிரயோகித்து விடுதி வளாகத்தை காலி செய்யுமாறு எச்சரித்ததாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது மதத்தை கடைப்பிடிப்பதற்காக எந்த மாணவரும் பகைமை, மிரட்டல் அல்லது கட்டாயத்திற்கு உள்ளாகக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.
“பல்கலைக்கழகங்கள் பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் இடங்களாக இருக்க வேண்டும். அவை அரசியலமைப்பின் மீது மதிப்புக் கொண்டு, அனைத்து மனிதர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் — அது எந்த இனம், மதம் அல்லது சமூக பின்னணியிலிருந்தாலும் பொருந்தும். கல்வி நிலையங்களில் மிரட்டல் விடுப்பதும், பாகுபாடு காட்டுவதும் மிகவும் கவலைக்கிடமான முன்னுதாரணமாகும். அது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும்,” என்றும் குஹேஹாமி மேலும் கூறினார்.
JKSA, இந்த விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் நியாயமான மற்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும், தங்களது மதத்தை கடைப்பிடிப்பதற்காக எந்த மாணவரும் தொந்தரவு செய்யப்படவோ, மிரட்டப்படவோ, கல்வி ரீதியாக தண்டிக்கப்படவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதோடு, ரமலான் மாதத்தில் மாணவர்கள் மரியாதையுடன் நோன்பை கடைப்பிடிக்க, சஹரி மற்றும் இஃப்தார் உணவுக்கான உடனடி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
படிக்க:
♦ முஸ்லிம் மாணவர்கள் அதிகம் சேர்ந்ததால் மருத்துவக் கல்லூரி உரிமத்தை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு!
♦ மாணவர்கள் அடிப்படை உரிமைக்காக களத்தில் புமாஇமு!
இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் நுழைவு வாயிலில் கோவில்கள் இருந்து வருகின்றன. இந்துக்களை தவிர்த்து மற்ற மதத்தினர் எவரும் அங்கு கோவில் இருக்கக் கூடாது என சொல்வதில்லை. மாணவர்கள் வழிபடுவதையும் தடுப்பதில்லை. அதே போல், தங்கள் மத வழிபாட்டைக் கடைபிடிக்கும் மத சிறுபான்மையினரும் பயமின்றி தங்கள் கல்வியைத் தொடரும் சூழல் உருவாக்க வேண்டும்
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான அரசு விழாக்களில் அல்லது கட்டிடங்கள் கட்டத் துவங்கும் போதும், திறப்புவிழாவின் போதும் பார்ப்பனிய சடங்கு முறைகளை கடைபிடிக்கிறார்கள்.
ஆனால், மதச்சிறுபான்மையினரின் மத உரிமைகள் சமீப காலங்களாக தடுக்கப்படுவதும், சம்பந்தப்பட்ட மதத்தினர் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் பாசிச மோடியால் ஆளப்படும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
காஷ்மீரில் நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற காஷ்மீர் மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டதும் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் மேற்கண்ட பிரச்சினையுடன் தொடர்புடையது தான்.
பஞ்சாப் பல்கலைகழக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் மத வழிபாட்டு உரிமைகளை கடைபிடிக்கிறார்களே ஒழிய யாரிடமும் திணிக்க முற்படுவதில்லை. ஆனால், கல்லூரி நிர்வாகம் அப்படி அணுகாமல் அவர்களின் மீது மதவெறுப்பை உமிழ்கிறது. இப்படியான அதிகாரிகள் கல்வியாளர்களாக இருப்பதற்கு துளியும் தகுதியில்லாதவர்கள். பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மாணவர்களிடம் மத வேற்றுமையை உருவாக்கி அதில் அரசியல் செய்துக் கொண்டிருக்கும் பாஜக, ஏற்கனவே பல்வேறு கல்வி நிலையங்களில் தனது மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலம் வன்முறையை ஏவி வருகிறது. இதுபோன்ற மாணவர் அமைப்புகள் தடை செய்யப்பட்டு மாணவர்களிடம் ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கும் மாணவர் அமைப்புகளை அங்கீகரிப்பது மக்கள் நலனை விரும்பும் அரசின் கடமை. அதனை ஆளுகின்ற பாசிச பாஜக செய்யாது.
- சுவாதி






