இந்தியாவில் அமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் - தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
சந்தை ஆராய்ச்சி மற்றும் வணிக நுண்ணறிவு நிறுவனமான அரிஸ்டன் அட்வைசரி செப்டம்பர் 2025-ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தற்போது 132 தரவு மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டுக்குள் 17 நகரங்களில் மேலும் 84 தரவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

ன்றைய உலகில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. இத்தகைய அறிவியலின் வளர்ச்சியை அங்கீகரிப்பதுதான் நமது கடமை. ஆனால் இதன் பயன் யாரை சென்றடைகிறது என்பதும், அதற்காக இயற்கை வளங்கள் முற்றிலும் சூறையாடப்படுவதுமான நிலை ஏற்படின், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) காலகட்டமாக உள்ளது. இதற்கான தொழில் நுட்பம் முன்னேறி வரும் நிலையில், இதன் தேவைக்காக தரவு மையங்கள் (Data Centres) உலகின் பல்வேறு நாடுகளிலும் அமைக்கப்படுகின்றன. நல்லரசாக இயங்க முடியாத நிலைமையில், வல்லரசாகத் துடிக்கும் நமது இந்தியாவிலும் பல நகரங்களில் இத்தகைய தரவு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு தரவு மையம் என்றால் என்ன?

கிளவுட் கம்ப்யூட்டிங் எனும் தொழில்நுட்பத்திற்கு சக்தி வாய்ந்த கணினிகள் பிரம்மாண்டமான உயர் பாதுகாப்பு கட்டிடங்களில் அமைக்கப்படுகின்றன. தரவு மையம் என்பது இந்த கணினி அமைப்புகளுடன் தொலை தொடர்பு மற்றும் தரவுகள் சேமிப்புக்கான வசதிகளையும் கொண்டுள்ளன. நாம் ஆன்லைனில் எதையாவது தேடும்போது, ஒவ்வொரு முறையும் ஒரு தரவு மையத்துடன் தொடர்பு கொண்டு நமக்கான தகவல் பெற்று வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக நாம் ஆன்லைனில் ஒரு வீடியோவை பார்க்க விரும்பும் போது அல்லது ஒரு தகவலைத் தேடும்போது அருகில் உள்ள தரவு மையத்தில் உள்ள சேமிப்பகத்தில் இருந்து அந்த கோப்புகள் நமது சாதனத்திற்கு (மொபைல் போன், லேப்டாப்…) அனுப்பப்படுகின்றன. தரவு மையங்கள் அதன் அளவு மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் நான்கு வகைகளாக உள்ளன.

1. எண்டர்பிரைஸ் என்பது கோல்ட்மேன் சாக்ஸ் போன்றப் பெரு நிறுவனங்கள் தங்களது சேவைக்காக மட்டும் அமைத்துக் கொள்வதாகும்.

2. கூட்டு இடம் என்பது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தரவு மையங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாகும்.

3. ஹைப்பர் ஸ்கேல் என்பது google, அமேசான் போன்ற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் வெகுஜனப் பயன்பாட்டிற்கும் சேர்த்து அமைப்பதாகும்.

4. எட்ஜ் என்பவை நகரங்களுக்கு அருகில் அமைக்கப்படும் சிறிய வசதிகளாகும்.

தரவு மையங்களின் தாகம் பெரியது!

இந்தத் தரவு மையங்களை பராமரிக்க செலவிடப்படும் மிக அதிகப்படியான தண்ணீர்தான் இப்போது பிரச்சினையாக உள்ளது. விவசாயத்துக்கான பயன்பாட்டைத் தவிர நீர் மின்சாரம், காகிதம் மற்றும் துணி உற்பத்தி போன்றவற்றிற்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது தரவு மையங்களின் பராமரிப்பும் சேர்ந்து கொள்கிறது. இந்த மையங்களின் தாகத்தைத் தணிக்க எவ்வளவு நீர் தேவைப்படுகிறது என்பதை சரியாக கணிக்க முடியவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூட்டன் கவுண்டி நகரில் “மெட்டா” (முகநூலின் தாய் நிறுவனம்) 750 மில்லியன் டாலரில் அதன் தரவு மையத்தை நிறுவியது. அடுத்தடுத்த வருடங்களில் அதைச் சுற்றிய பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே சென்றது. சென்ற ஆண்டு ஜூலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அங்கு வாழும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த செயற்கை நுண்ணறிவு தரவு மையத்துக்கு ஒரு நாளைக்கு தோராயமாக 5000 கேலனுக்கு (18 லட்சம் லிட்டர்) மேல் நீர் தேவைப்படுவதாகவும் எழுதியது.

தரவு மையத்தில் நிறுவப்பட்டுள்ள வன்பொருள் (Hardware) அமைப்புகளை குளிர்விக்க இவ்வளவு நீர் தேவைப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்கள் குடிநீருக்கு தள்ளாடும் நிலையில் (குழாயைத் திறந்தால் காற்றுதான் வருகிறது) நமது நாடு இந்தப் பிரச்சனையை கூடுதலாக சந்திக்கக் காத்திருக்கிறது.

இந்தியாவால் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியுமா?

சமீபத்தில் டெல்லியில் செயற்கை நுண்ணறிவுக்கான உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, “தரவு மையங்கள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். எனவே உலகத் தரவுகள் அனைத்தையும் இந்தியாவில் சேமிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த அழைப்பு விடுக்கிறோம்” என அறைகூவினார். ஆனால் தரவு மையங்கள் தானியங்கி முறையில் இயங்குவதால் மிகக் குறைவான நபர்களே வேலைக்கு அமர்த்தப்படுபவர் என்ற உண்மையை மறைத்து வழக்கம் போல புளுகினார்.

இந்த ஆண்டுக்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கை இந்தியாவில் தரவு மையங்களுக்கான உள்கட்டமைப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு கிளவுட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2047 வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்பதை பற்றி கவலையேப் படாமல் இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மோடி அரசு. முதலீடுகள் வந்தால் இவர்களுக்கு இலாபம். ஆனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் பாதிப்புக்கு ஆளாவது மக்கள்தானே!

இந்தியாவில் அமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் - தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

உத்திரப் பிரதேசத்தின் புல்டோசர் முதல்வர் யோகி ஆதித்யநாத் 2022 ஆம் ஆண்டு துசியானா எனும் இடத்தில் சுமார் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் “யோட்டா” என்ற நிறுவனத்தின் தரவு மையத்தை தொடங்கி வைத்தார். அடுத்த மூன்றே ஆண்டுகளில் அருகில் வசித்த கிராம மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட செய்தியை டவுன் டு எர்த் பத்திரிகை அம்பலப்படுத்தியது. அந்த கிராமத்து மக்கள் 20 முதல் 30 அடியில் நீர் கிடைத்து வந்ததாகவும் ஆனால் இப்போது 80 அடியில் தான் நீர் கிடைக்கிறது என தெரிவித்ததாகவும் செய்தி வெளியிட்டது.

அடுத்த 7 ஆண்டுகளில் இதுபோன்ற 6 தரவு மையங்களை உத்தரப்பிரதேசத்தில் அமைப்பதற்காக யோட்டா நிறுவனத்துடன் 39,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் யோகி கையெழுத்திட்டுள்ளார். சந்தை ஆராய்ச்சி மற்றும் வணிக நுண்ணறிவு நிறுவனமான அரிஸ்டன் அட்வைசரி செப்டம்பர் 2025-ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தற்போது 132 தரவு மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டுக்குள் 17 நகரங்களில் மேலும் 84 தரவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

படிக்க:

 “உலகத்தரத்தில் குழாயில் குடிநீர்!” தண்ணீர் கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சிக்குகிறதா ஒடிசாவின் பூரி!

 இனி தண்ணீர் காசுக்கு!!!

இந்தியாவில் மும்பையில்தான் அதிகப்படியான தரவு மையங்கள் உள்ளன. பெங்களூரு, சென்னை, புனே, நொய்டா மற்றும் ஹைதராபாத் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நகரங்களிலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. அதானி குழுமம் சென்ற வாரம் 100 பில்லியன் டாலர் (சுமார் 9000 கோடி) முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை 2035-ல் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மையங்களில் ஒன்றாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KPMG எனும் நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தரவு மையங்கள் ஐந்து மடங்கு வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது. இது தவிர செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் ஜாம்பவானான ஆந்த்ரோபிக் நிறுவனம் பெங்களூரில் தனது அலுவலகத்தை திறந்துள்ளது. இந்தியா முழுவதும் பல நிறுவனங்களுடன் இணைந்து தனது க்ளாட் (Claude) எனும் செயற்கை நுண்ணறிவு செயலியை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பெரிய சந்தையில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தரவு மையங்களுக்கு தேவைப்படும் நன்னீர்!

தரவு மையங்களில் நிறுவப்பட்டுள்ள கணினி உள்ளிட்ட பிரம்மாண்ட சாதனங்கள் வெப்பமடையாமல் பாதுகாப்புடன் இயங்க வைக்க நன்னீர் தேவைப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும், செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தி வரும் பாட்காஸ்டரும், எழுத்தாளருமான ஆகாஷ் குப்தா, தரவு மையங்களுக்கு நன்னீர் ஏன் தேவைப்படுகிறது என்பதன் அறிவியல் காரணத்தை விளக்கியுள்ளார்.

இதற்கான குளிரூட்டும் கோபுரங்கள், சூடான மேற்பரப்புகளில் நீரை இயக்கி ஆவியாக்குவதன் மூலம் உள்ளே குளிரூட்டும் விதத்தில் செயல்படுகின்றன. தரவு மையம் பயன்படுத்தும் நீரில் 80 சதவீதம் உண்மையில் நீராவியாக வளிமண்டலத்தில் மறைந்து விடுகிறது. எனவே இந்த நீராவியை மறுசுழற்சி செய்ய முடியாது. மீதமுள்ள 20% நீரும் கனிமக் கழிவுகளாக மாறி அரிக்கும் தன்மையுடையதாகிறது. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள உபகரணங்களை பராமரிக்க ஏராளமான தூய நீர் தேவைப்படும் காரணம் இதுதான்.

ஐஐடி கோரக்பூர் பேராசிரியரும், நிலத்தடி நீர் ஆய்வாளரும் அல்ல அபிஷித் முகர்ஜி, “தரவு மையங்களின் விரிவாக்கத்தால் தென்னிந்திய நகரங்கள் மிகவும் பாதிக்கப்படும். ஏனெனில் தென்னிந்தியாவில் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது நிலத்தடி நீர் மட்டம் குறைவாகவே உள்ளது” என்கிறார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இந்த பிரச்சனையை சமாளிக்க சந்திரனில் தரவு மையங்களை அமைக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

குடிநீர் திவால் நிலையை நோக்கி உலகம்!

2021 ஆம் ஆண்டிலிருந்துதான் இந்த தரவு மையங்கள் அதிகரிக்க தொடங்கின. 2023 ஆம் ஆண்டு மட்டும் 17 பில்லியன் கேலன் நீர் (சுமார் 6500 கோடி லிட்டர்) தரவு மையங்களுக்காக செலவாகி உள்ளது. இது 2028 -ல் 68 பில்லியன் கேலனாக – 4 மடங்கு – அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் கழிவை விட தரவு மையங்கள் அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் மேலும் புவி வெப்பம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நமது பூமியில் இருக்கும் நீரில் 3% மட்டுமே நன்னீராக உள்ளது. சமீபத்தில் வெளியான ஐநா-வின் அறிக்கை, “மழை மற்றும் பனி மலைகள் உருகுவதன் மூலமாக உருவாகும் நீரின் அளவு மனிதர்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது. இவ்வுலகில் ஏறத்தாழ 220 கோடி மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 400 கோடி மனிதர்கள் நீருக்காக வருடத்தில் ஒரு மாதமாவது திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறுகிறது.

இந்தியாவில் அமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் - தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

சுற்றுச்சூழல் பாதுகாவலரும், மகசேசே விருது பெற்றவருமான ராஜேந்திர சிங், “கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தண்ணீர் பற்றாக்குறை, அடுத்த மிகப்பெரிய உலக நாடுகளின் மோதலுக்கு காரணமாக அமையப் போகிறது. செயற்கை நுண்ணறிவின் அறிமுகம் இந்தப் பதட்டங்களை ஆபத்தான வேகத்தில் துரிதப்படுத்துகிறது” என்கிறார்.

ஏற்கனவே ஏகாதிபத்திய உற்பத்தி முறைகளால் புவி வெப்பமாதல் பிரச்சனையும், கால நிலை மாற்றமும் நிகழ்ந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அடுத்த ஐம்பது வருடங்களில் நிச்சயமாக நீரின்றி தவித்து மனிதர்கள் மரணிக்கும் நிலை ஏற்படும் என்பதே நிதர்சன உண்மை. உலகெங்கும் சோசலிசம் மலர்வதே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

  • குரு

மூலம்:  https://www.telegraphindia.com/india/india-bets-big-on-data-centres-in-ai-race-where-will-the-massive-amounts-of-water-come-from/cid/2148036

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here