முடிவு கட்டு
கருவறை தீண்டாமைக்கு!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கும், வழிபடுவதற்கும் உள்ள உரிமையை தனது பிறப்பின் அடிப்படையிலான தகுதியாக கொண்டு சமூகத்தை இழிவுபடுத்தி அடக்கி, ஒடுக்கி வருகிறது பார்ப்பனியம்.
கோவில்கள் கட்ட கல்லையும், மண்ணையும் சுமந்த பார்ப்பனர் அல்லாத, சூத்திர, பஞ்சம சாதிகள் கட்டுமான வேலை முடிந்தவுடன் ‘லகு சம்ரோக்ஷணம்’ என்ற தீட்டுக் கழிக்கும் நிகழ்வுடன் கோவிலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
காரணம் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள், சூத்திரர்கள் என்பதுதான்.
இந்தியாவில் தமிழகத்தை தவிர வெளியில் இதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எந்த மாநிலத்திலும் எந்த அமைப்பும் தயாராக இல்லை. (விதிவிலக்காக சிலர் தவிர)
‘கருவறைக்குள் ஒளிந்திருக்கிறது, பார்ப்பன (இந்து) மதம் நாம் கருவறைக்குள்ளே செல்வதன் மூலம் இந்து மதத்தை வெளியே தள்ள முடியும் என்று முழங்கினார் தந்தை பெரியார்.
பெரியார் நெஞ்சில் குத்திய முள் ஒரு வழியாக அனைத்து சாதி அர்ச்சகர் என்ற முயற்சியின் மூலம் திமுகவால் பிடுங்கப்பட்டது.
ஆனால் ஆகமங்களையும், வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்வதற்கு சாதி என்ற தகுதி, குறிப்பாக பார்ப்பான் என்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சண்டமாருதம் புரிந்தனர் பார்ப்பனர்கள்.
அதை எதிர்த்து நீண்ட நெடிய சட்டப் போராட்டமும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் மூலம் வீதிகளிலும், சமூக ஊடகங்கள், மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் என அனைத்து வகையிலும் பிரச்சாரம், கிளர்ச்சிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நெஞ்சில் குத்திய முள்ளைப் பிடுங்கி, திமுகவை எட்டி உதைத்து, பார்ப்பன பயங்கரவாத ஈட்டியை நெஞ்சில் குத்தி உள்ளது நீதிமன்றம் என்ற பெயரில் செயல்படும் உச்சி குடுமி மன்றம்.
நீதிமன்றங்களில் சட்டரீதியாக போராடுவது ஒரு பக்கம் அதே சமயம் நீதிமன்றங்களுக்கு வெளியில் மக்களை திரட்டி நமது உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது என்பது மறுபுறம்.
இதற்கான அறைகூவல் விடுக்கும் சென்னை கருத்தரங்கத்திற்கு அணிதிரண்டு வாரீர்!