கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தீட்சிதப் பார்ப்பனர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்ததை கோவிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்ட தீட்சிதப் பார்ப்பனர்கள் அவரின் கையை முறுக்கித் தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டுள்ளனர். இது குறித்து அந்த நபர் தீட்சிதர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறை ஐந்து தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கோயில் புனிதமான இடம். அங்கு பக்தியைத் தவிர வேறு விசயங்களுக்கு இடமில்லை. கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடுவது தேவையில்லாத விஷயம். கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடியதை தட்டி கேட்டதற்காக அந்த நபரின் கையை முறுக்கி தீட்சிதர்கள் ரவுடித்தனம் செய்வது தவறு என்று சாதாரண பக்தர்கள் கூறிவிடுவர். ஆர் எஸ் எஸ் சங்கிக்கூட்டமும் இப்படித்தான் கூறும் என்று அப்பாவி பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பாஜகவின் H.ராஜா “தீட்சிதர்கள் என்ன கோயில் கர்ப்பகிரகத்திலா கிரிக்கெட் விளையாடினார்கள்?” என தீட்சிதர்கள் செயலுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வது பற்றி சங்கி ரவி, அதாங்க ஆளுநர் ரவி, ‘நானே அம்மாதிரி குழந்தை திருமணம் செய்து கொண்டவன் தான்’ என்று தீட்சிதர்களின் குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஆளுநர் ரவியும் இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய பிரச்சனை சமூகத்தில் பேசு பொருளானால்  தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா, அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகள்  ஏதாவது புது விதமான கதை ஒன்றை சொல்லி தீட்சிதர்களை அப்பாவிகளாக காட்ட முயற்சிப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்ததைப் போலவே சங்கி எச். ராஜா “கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் தவறில்லை. கோவில் பிரகாரத்திற்குள் கிரிக்கெட் விளையாடியிருந்தால் தான் தவறு” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

தில்லையில் தீட்சிதர்கள் கொட்டத்தை அடக்குவோம்!

இதற்கு, “தமிழக மக்களால் வெறுப்போடு எச்சை என்று தூற்றப்படும் எச்.ராஜா அவர்களே, தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய இடத்தில் அமர்ந்து மற்றவர்கள் முட்டை சாப்பிடலாமா? இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிடாதுதானே?” என்று ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நாம் முடித்துக் கொள்ளலாம்.

அப்படி மிகப்பெரிய அளவில் சமூகத்தில் இப்பிரச்சனை பேசப்பட்டாலும் சம்மந்தப்பட்ட தீட்சிதர்கள் யாரும் அதற்காக கவலைப்பட மாட்டார்கள். தீட்சிதப் பார்ப்பனர்கள், காலம் காலமாக, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் நிகழ்த்திவரும் திருவிளையாடல்கள் ஏராளம். இவர்களின் அயோக்கியத்தனத்தை ஒரு கூந்தல் அளவிற்கு கூட தடுத்து நிறுத்த முடியாத பக்தர்களின் எதிர்ப்பை எப்படி முறியடிக்க வேண்டும் என்பது தீட்சிதர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஏனெனில், தீட்சிதர்கள்

  • கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை கொன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் இருக்கும் தெப்பக்குளத்திலேயே மிதக்க விட்ட குற்றத்திலிருந்து தப்பிவிட்டவர்கள்.
  •  சிற்றம்பல மேடையில் நின்று சாமி கும்பிடும் பெண்களின் நகைகளை கத்தரிக்கோலால் வெட்டி திருடிய வழக்கில் இருந்தும் தப்பியவர்கள்.
  •  சிதம்பரம் நடராஜர் பாதத்தில் இருந்த கொலுசு உட்பட பல நகைகளை திருடிய வழக்கில் இருந்தும் தப்பியவர்கள்.
  •  கோவிலின் தங்கக் கூரையில் இருந்து தங்கத்தை திருடிய வழக்கில் இருந்தும் தப்பியவர்கள்.
  •  கடவுள் நடராஜருக்கு சொந்தமான நிலத்தை, அதாவது கடவுள் நடராஜரின் பெயரில் உள்ள நிலத்தை, நடராஜர் என்ற பெயர் கொண்ட தீட்சிதர் தனக்கு சொந்தமானது என்று கூறி பத்திரம் எழுதிக்கொடுத்து பிறருக்கு விற்பனை செய்த வழக்கை எல்லாம் கையாண்டு அனுபவம் பெற்றவர்கள்.
  •  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தரின் கைதுப்பாக்கியை தீட்சிதர் களவாண்டு பிடிபட்ட வழக்கையும், கோவிலுக்கு வெளியில், தெருவில், தீட்சிதர் ஒருவர் சைக்கிள் திருடி மாட்டிக் கொண்ட வழக்கையும் கையாண்ட அனுபவம் கொண்டவர்கள்.
  •  சிற்றம்பல மேடையில் வைத்து சாராயம் குடிப்பது அதற்கு சைடு டிஷ் ஆக கோழிக் கறியையும் கோழி முட்டைகளையும் தின்று கொட்டமடிப்பது போன்ற விசயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து நாறிய போதும் கலங்காத நெஞ்சுடன் எதிர்கொண்டு நின்ற பழுத்த அனுபவம் கொண்டவர்கள்.
  • தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் மணி அடிக்க வந்த தீட்சித பார்ப்பனர்கள் அந்தக் கோவிலே எங்களுக்குத் தான் சொந்தம் என்று ஆக்கிரமித்துக் கொண்டவர்கள். உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் தங்களுக்கு உரிமையானது என்று தீர்ப்பு பெற்று வந்த வல்லமை மிக்கவர்கள்.

இப்படிப்பட்ட தீட்சிதர்கள் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடியது, அதை படம் எடுத்த பக்தரின் கையை முறுக்கி அடித்தது தொடர்பான வழக்கைப் பார்த்தெல்லாம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் சிறிதும் சஞ்சலப்படப் போவதில்லை.

இப்படிப்பட்ட தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்க, தமிழ் மக்களின் உரிமையை – சிதம்பரம் நடராஜர் கோவில் எனும் பொது சொத்தை மீட்டு பக்தர்களின் உரிமையை பாதுகாக்க மக்கள் போராட்டத்தை தவிர வேறு வழி இல்லை.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here