ந்திரபாபு நாயுடு மீதான 371 கோடி ஊழல் வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைத்த அமலாக்கத்துறை இப்போது குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்துள்ளது. மோடியின் வாசிங்மிஷினில் ஊழல்கறை அகற்றப்பட்ட மற்றுமொரு நபரானார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

பாசிச பாஜக மாநில கட்சிகளை மிரட்டி தன் கூட்டணி வலையில் சிக்க வைக்க பயன்படுத்திய அஸ்திரம் தான் அமலாக்கத்துறையும் சிபிஐயும். இந்த அஸ்திரத்தை பயன்படுத்தி மாநில கட்சிகளில்  செல்வாக்குள்ள  சில தனிநபர்களையும் குறிவைத்து தூக்கியது.

சமீபத்தில் டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை பணிய வைக்க முயன்று தோற்றுப் போனதால் மணீஷ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது பாசிச பாஜக. அதேபோல் திமுகவில் செந்தில் பாலாஜியை ஊழல் வழக்கிலும், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பிஆர்எஸ் கட்சியின் தலைவரான கவிதாவையும் ஊழல் வழக்கில் கைது செய்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு ஜார்க்கண்டை ஆளக்கூடிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவரும் அம்மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரனை நிலமோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் சிறை சென்ற பின் முதல்வரானார் சம்பாய் சோரன். ஜார்க்கண்டில் அடுத்த மாதத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் சம்பாய் சோரனை மிரட்டி தற்போது பிஜேபியில் இணைத்துள்ளது.

இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி,  சிவசேனா,  உள்ளிட்ட கட்சிகளை இரண்டாக உடைத்து அந்த கட்சியின் தலைவர்கள் மீது அமலாக்கதுறையை ஏவி பணிய வைத்தது. பஞ்சாப்பில் காங்கிரஸ்  கட்சியை உடைத்தது போல் பல மாநிலங்களில் பிளவை ஏற்படுத்தி மிரட்டி பாஜகவில் இணைத்தது என பாசிஸ்டுகள் அமலாக்க துறையை, சிபிஐயை கேடாக பயன்படுத்தி மாநில கட்சிகளை அழித்தே பாஜகவை வளர்த்தார்கள்.

மஹாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்பு! கிழிந்து தொங்குகிறது பாஜகவின் ஊழல் ஒழிப்பு முகமூடி!

ஊழல் குற்றச்சாட்டு, நிலமோசடி, முறைகேடு என கைது செய்யப்பட்ட மாநிலக் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்த உடன் அவர்கள் வழக்கை அதே அதிகாரம் மையங்களை பயன்படுத்தி ரத்து செய்ததும் நடந்து வருகிறது.

இந்த வரிசையில் இணைந்திருப்பவர் தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

கடந்த 2014 – 2017 ஆம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் ஆந்திர பிரதேச திறன் மேம்பாட்டு கழகம் (APSSDC)-ன் கீழ்  மாநிலத்தில் இருக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்தி வேலை பெற உதவுவதாக கூறி ரூபாய் 371 கோடி ஊழல் செய்ய துணை புரிந்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றம் சுமத்தியது ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்.

இந்த காலகட்டங்களில் பாஜக கொண்டு வரும் நாசகார திட்டங்களை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரித்த கட்சி தான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். மோடியின் செல்வாக்கு பெற்ற நபராகத் திகழ்ந்த ஜகன்மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்தது. 2023 செப்டம்பர் 9 ஆம்  தேதி கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து கண் அறுவை சிகிச்சை காரணம் காட்டி 2023 அக்டோபர் 31  இடைக்கால ஜாமீன் பெற்றார். தொடர்ந்து 2023 நவம்பர் 20ஆம் தேதி சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்.

கொலைகார, கொள்ளைக்கார சந்திரபாபு நாயுடு, மோடியுடன் கைகோர்ப்பது ஏன்?

5 ஆண்டுகால  ஆட்சியில் ஜெகன்மோகன் ரெட்டி மக்களிடம் செல்வாக்கை இழந்துள்ளார் என தெரிந்து கொண்ட பாஜக, சந்திரபாபு நாயுடுவிடம்  டீல் பேசி கூட்டணி வைத்து ஒரே நேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் போட்டியிட்டு குறிப்பிட்ட வெற்றி பெற்றது. பாஜகவின் வாக்கு சதவீதமும் உயர்ந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தயவு இல்லாமல் ஆட்சி கைப்பற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சந்திரபாபு நாயுடு.  ஒன்றிய அமைச்சர் பதவி முதல் தற்போது ஊழல் வழக்கில் இருந்து விடுதலையானது வரை ஏற்கனவே பாசிஸ்டுகளுடன் பேசி முடிக்கப்பட்ட விஷயம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மிஸ்டர் கிளீன் என காவி கும்பலாலும் சங்கிகளாலும் போற்றப்படும் ரஃபேல் புகழ் மோடி ஊழலை ஒழிக்க வந்தவர் அல்ல. அந்த ஊழலை பயன்படுத்திக் கொண்டு தனது கட்சியை வளர்க்க வந்தவர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஏவி ஊழல்வாதிகளையும் கட்சித் தலைவர்களையும் மிரட்டி தன் பாசிச கூட்டணியில் இணைத்துக் கொள்கிறார்.

பாசிச கூட்டணியில் இணைந்தவர்களின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதும் அவர்களின் அழுக்குகள் வெளுப்பதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இயல்பான ஒன்றாய் மாறிவிட்டது. இது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டாலும் சமூக ஊடகங்களில் விவாதமாகி நாறினாலும் பாசிஸ்டுகள் கண்டுகொள்வதில்லை. இதனை திசைதிருப்ப புதிய நிகழ்ச்சி நிரலைகளை உருவாக்குவதில் இவர்கள் வல்லவர்கள்.

ஊழல், முறைகேடு, நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதன் மூலம் இவை அனைத்தும்  நிறுவனமயம் ஆகின்றன. மோடி கூட்டணியில் உள்ளோம் என்ற தைரியத்தில் மேலும் கொள்ளை அடிக்கவும் மோசடி, முறைகேடுகளில் ஈடுபடுவதை முன்பை விட அதிகமாகவே செய்கிறார்கள்.  மோடியை எதிர்க்காத வரை அவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.

இந்த போக்கு மிக ஆபத்தானது.  பாசிஸ்டுகளின் அத்தனை செயல்களையும் வேடிக்கை பார்க்கும் நீதித்துறை கேள்வி எழுப்பதில்லை. உதாரணமாக சந்திரபாபு நாயுடு ஊழல் செய்துவிட்டார் என்ற காரணத்தினால் தான் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அதே அமலாக்கதுறையால் உத்தமர் என்று கூறப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார் சந்திரபாபு நாயுடு. இதனைக் கண்டு கொள்ளாமல் இவர்களில் நானும் ஒருவனும் தான் என கடந்து செல்கிறது நீதித்துறை.

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் இதே நடைமுறையையே பின்பற்றும் பாசிச பாஜக. ஓட்டு போடுவதோடு கடமை முடிந்துவிட்டது என ஒதுங்கி நிற்காமல் பாசிச கும்பலின் இந்த அயோக்கியதனத்தை எதிர்த்து போராடுவதும் நம் முன் உள்ள கடமையாக உள்ளது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here