பருவநிலை மாற்றத்தால் சமீப காலமாக உலகின் பல நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. திடீரென்று அதிகரிக்கும் கடும் வறட்சி, வெப்ப அலைத்தாக்குதல், காட்டுத்தீ ஒருபுறமும், அதீத பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு மறுபுறமும் என ஏழை மக்களை வாட்டி வதைக்கிறது.
நம் நாட்டில் ஏப்ரலில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 42.0°C (107°F) பதிவாகியுள்ளது. மே மாதத்தில் வெப்ப அலைத்தாக்குதல் அதிகரிக்கும், தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று மஞ்சள், ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேட்டுக்குடிகளின் சொகுசு வீடுகளும் அவர்களின் அலுவலகங்களும், அவர்கள் செல்லும் மால்களும் குளிரூட்டப்பட்டு வழக்கம்போல் இயங்குகிறது. வெள்ளம் வந்தாலும், வெயில் சுட்டெரித்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலைகுலைவதில்லை.
ஆனால், தமது பிழைப்புக்காக சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரியும் சாமானிய மக்களின் தோல்கள்தான் வெப்பத்தால் தீய்கின்றன. வெப்ப அலை குறித்து எந்த எச்சரிக்கை விடப்பட்டாலும் வழக்கம்போல் பேருந்தில், ஷேர் ஆட்டோவில், புறநகர் ரயில்களில் பயணித்து தமது வழக்கமான வேலைகளை செய்தாகவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். வெள்ளம் வந்தால் தவணைமுறையில் வாங்கிய தமது கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிகொடுக்கின்றனர்.
சுழற்றி அடிக்கும் இயற்கை!
கடந்த டிசம்பரில் சென்னையை மிரட்டி வெள்ளத்தில் மூழ்கடித்து சென்ற மிக்ஜாம் புயலின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களை புரட்டி எடுத்தது கனமழை.
சென்னையில் புறநகர் மட்டுமல்லாது நகர்புறத்திற்குள்ளும் கூட 40 சென்டிமீட்டரைத் தாண்டி மழை பெய்தது போலவே, தென் மாவட்டங்களில் அதைவிட இரு மடங்கு மழை பொழிவு பதிவானது. குறிப்பாக, திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் 90 சென்டிமீட்டரை தாண்டியும் மழை பெய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஏமன், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கன மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்கள் உயிரையும் உடமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -ல் வழக்கமாக ஓர் ஆண்டில், 9.47 செ.மீ., அளவுக்கு மழை பெய்யும். ஆனால், ஏப்ரல் 16 இல், 24 மணி நேரத்தில் 14.2 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. அதாவது ஒன்றரை ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியுள்ளது. துபாய் பாலைவனப்பகுதி என்பதால் மழைநீர் வடிகால்களுக்கு அவசியம் இல்லை என கருதி இருந்தனர். ஆனால் அது தவறு என்று 24 பேரை உயிர்பலி வாங்கியுள்ள இயற்கை வளைகுடாவுக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது.
படிக்க:
♦ உருகும் பனி மலைகள் நெருங்கி வரும் பேரபாயம்!
இதே துபாயில்தான் COP-28 பருவநிலை மாற்ற மாநாடு நடந்தது. அதில், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து ‘மாற்றம்’ செய்யவேண்டும் என விவாதித்தனர். சொன்னதற்கு நேர்மாறாக லாப வெறிபிடித்த கார்பரேட் நிறுவனங்களோ புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களைத் திறக்கின்றன. நமக்கு பெய்த மழை அளவில் 10 -ல் ஒரு பங்குக்கே துபாய் நிலைகுலைந்தது.
வளைகுடாவைத்தாண்டி ஆப்ரிக்க கண்டத்தை எடுத்துக்கொண்டால் வடக்கில் லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் பெருக்கெடுத்த மழைவெள்ளம் அணைகளை உடைத்து டெர்னா உள்ளிட்ட கடலோர நகரங்களை புரட்டிப்போட்டது. கண்டத்தின் தெற்கு பகுதியில் கடும் வெப்பமும் வறட்சியும் நீடிக்கிறது. ஜிம்பாவேயில் மழை பொய்த்து மக்காச்சோள பயிர்கள் கருகியுள்ளது. தென்னாப்ரிக்க கண்டத்தில் கோடிக்கணக்கானோர் உணவுப்பஞ்சத்தில் சிக்கி பட்டினி சாவை எதிர்நோக்குகின்றனர்.
தென்அமெரிக்காவில் அமேசானின் ஆறுகளும், ஏரிகளும் வறண்டுள்ளது. 2023 டிசம்பரில் டீஃபே ஏரியில் நீரின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை எட்டியபோது குறைந்தபட்சம் 70 டால்பின்கள் செத்து மிதந்து கொண்டிருந்தன. இது சராசரியை விட 10 டிகிரி அதிகமாகும். அமேசானின் இரண்டாவது துணை நதியான நெகரோ ஆறு ஏறக்குறைய வறண்டு விட்டது.
பிப்ரவரியில் சிலி நாட்டில் காட்டுத்தீயில் சுமார் 112 பேர் உயிரிழந்தனர். 64 ஆயிரம் ஏக்கர் கருகியது. காட்டுத்தீ அண்டை நாடுகளிலும் தனது கோரமுகத்தை காட்டியே வருகிறது. இதற்கெல்லாம் எது அடிப்படையாக உள்ளது?
காலநிலையை உணர்த்தும் கண்ணாடி!
புவிவெப்பமயமாதலின் கூறுகளை அடையாளம் காட்டுகிறது பசிபிக் பெருங்கடல். பசிபிக் பெருங்கடலில் உருவாகும் கிழக்கு காற்று மற்றும் நீரோட்டங்கள் பூமியின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதால், பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அதிகரிக்கும் வெப்பநிலை நம் பார்வையில் முக்கியமானது.
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான வானிலை போக்கான ‘எல் நினோ’ இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பலவீனமடைய ஆரம்பித்துவிட்டாலும், மிதமான அளவில் எல் நினோ இன்னமும் அந்தப் பகுதியில் நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ, லா நினா என்றால் என்ன? இவை ஏன் நடக்கிறது? அதையும் பார்ப்போம்.
கிழக்குக் காற்று மெதுவாக அல்லது எதிர் திசையில் வீசத் தொடங்கினால், மேற்பரப்பு நீரின் வெப்பநிலையும் அதிகரித்து, சூடான நீர் கிழக்கு நோக்கி தென் அமெரிக்காவை நோக்கி நகரும். இந்த நிலை எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த கிழக்குக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் போது, சூடான நீரும் காற்றின் நீராவியும் முதலில் ஆசியாவை நோக்கி நகர்ந்து, பின்னர் இந்த குளிர்ந்த நீரும் மேற்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. இது லா நினா என்று அழைக்கப்படுகிறது.
இவை அனைத்தும் கிழக்குக் காற்றின் (Trade wind) காரணமாக நடக்கிறது. இந்த காற்று பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தெற்கு அரைக்கோளத்தில் தென்கிழக்கிலிருந்தும் வீசுகிறது. இந்த காற்று பசிபிக் பெருங்கடலில் உள்ள கடல் நீரோட்டங்களை பாதிக்கிறது.
சாதாரண சூழல்களில், பசிபிக் பெருங்கடலின் மேல் அடுக்கில் உள்ள நீர் வெப்பமடையும் போது, அது ஆசியாவை நோக்கி பாயத் தொடங்குகிறது. மேலும், கீழ் அடுக்கின் குளிர்ந்த நீர் அதன் இடத்தைப் பிடிக்கிறது. மறுபுறம், பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள நீர் கிழக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவும், ஆசியாவிற்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் வெப்பமாகவும் இருக்கிறது.
“(தற்போது நடப்பதுபோல்) எல் நினோ முடியப்போகும் வருடத்தில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015ல் எல் நினோ முடிவுக்கு வந்தபோது, 2016ல் வெப்பம் மிக அதிகமாக இருந்தது” என்கிறார் தனியார் வானிலை ஆர்வலரான ஸ்ரீகாந்த். இது மட்டுமின்றி இந்தியாவின் பருவ மழை பொழிவுகளையும் தடுக்கிறது.
முதலாளித்துவம் முன் வைக்கும்
‘வளர்ச்சி’ யாருக்கானது?
இயற்கையின் இயற்பியலுக்கு எதிராக பலநூறு கோடி ஆண்டுகள் இயற்கை சேமித்து வைத்த சுற்றுச்சூழலையும் மனிதகுலம் காத்து வந்த இயற்கை கட்டமைப்பையும் முதலாளித்துவம் தோன்றி வெறும் மூன்று நூற்றாண்டுகளுக்குள் ஒழித்துக் கட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதகுலம் பல சாதனைகளை படைத்துள்ளது. ஆனால், அதன் பலனை ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வுவெறி பிடித்தலையும் மேட்டுக்குடிகளும், கார்ப்பரேட்டுகளும் அனுபவித்துவர, வளர்ச்சியின் எதிர்விளைவாக நடக்கும் நாசத்தை வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காத கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள்தான் சந்திக்கின்றனர். வெப்ப அலை உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் அன்றாடம் உழைக்கின்ற மக்களுக்குத்தான் தோல் வியாதி முதல் புற்றுநோய் வரை அனைத்து விதமான நோய்களையும் உருவாக்குகிறது. மனித குலத்தின் தேவைகளை உருவாக்குகின்ற ஏழைகள் தான் அனைத்து விதமான கொடுமைகளையும் அனுபவித்து வருகிறார்கள்.
அழிந்து வரும் சுற்றுச்சூழலையும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசாங்கங்களால் ஒருபோதும் முடியாது. சுற்றுச்சூழலின் மீதும், இயற்கை வளங்களின் மீதும், மனித குலத்தின் மீதும் உண்மையான காதல் கொண்டுள்ள கம்யூனிஸ்டுகளாலும், கம்யூனிச சித்தாந்தத்தின் மூலமாக மட்டுமே உலகை காப்பாற்ற முடியும்..
பயிர்கள் கருகுவதோ, குடிசைகள் வெள்ளத்தில் மூழ்குவதோ அம்பானி, அதானிகளை பாதிப்பதில்லை. லாப வெறிபிடித்தலையும் கார்ப்பரேட்டுகளுக்கு உலகமே பற்றி எரிந்தாலும் கவலையில்லை. அடுப்பில்தான் தீ எரியவேண்டுமே தவிர, வளர்ச்சி என்று கொண்டாடிக் கொண்டு கூரையையும் சேர்த்து எரிய விடக் கூடாது.
மே மாத இதழ்
- கரிகாலன்