கருங்குழி இரவு
குளமெங்கும் தாமரை மலர்ந்தன
பண மதிப்பிழப்பால்
வரிசையில் சோர்ந்த சீமாட்டிகள்போல
பொலிவிழந்தன தெருவெங்கும் மரங்கள்
பல்லாயிரம் கால்களில் பயணித்த மரணம்
பிணமான தாயின் பாலில்லா மார்பை
பசியுடன் உந்திய குழந்தைபோல
எலும்பு தோல் போர்த்திய நாயினை குட்டிகள்
குடிசையின் முற்றத்தில் மொய்த்தன
தாயின் வயிறு கிழித்து
சிசுவை எரித்த சூலாயுதம்போல பொந்திலிருந்த கிளிக்குஞ்சுகளை விழுங்கித் தீர்த்தது சுழல் பாம்பு
ஏந்திய மெழுகுவர்த்திகளின் சிற்றொளிக்கு
அஞ்சி மறைந்த கொரனாபோல்
மின்மினிக்கு அஞ்சி முளித்தன
பெருங்கண் ஆந்தைகள்
இதையும் படியுங்கள்: புரட்சி பல்லாக்கு!
பேரிருள் சூழ
தேர்தல் இரதங்களில் யாத்திரை தொடங்கிட
சாதி வெறியுடன் சனாதன நடனம்
பரப்புரை எங்கும் மதவெறி ஜாலம்
இலாப வெறிக்கு சாகச மகுடம்
மனிதநேயத்தின் அஸ்தம கோலம்
கோமாளிகள் கூத்திட வெடிப்பொலி அதிர்ந்தன
ச்ச்சீ…
நரியிடும் ஊளை என்றனர் பலர்
பேய் என்றது பிள்ளை
நீ என்றேன் நான்.
- புதியவன்