இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 3


டுத்து இராமனை ஒரு மன்னன் எனும் நிலையில் வைத்து ஆராய்வோம். அறநெறி பிறழாத இலட்சிய மன்னன் என இராமன் கருதப்படுகிறான். ஆனால் இந்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை என்னவெனில் இராமன் மன்னனாயிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில்தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறார். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான்.

இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை.

நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்றவாளியைப் பிடித்து தண்டித்து செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான்.

அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது” என்றும் நாரதன் சொன்னான். “தரும (புனித) சட்டங்களின்படி, பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை” என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்த தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்கு செல்ல தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

அதே நொடியில் எங்கோ தொலை தூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன்தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். ‘’அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான்’’ என்று அவர்கள் இராமனுக்கு சொல்லி விட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்துக்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்கு பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்தியை அடைந்தான். இத்தகையவனே இராமன்.

(தொடரும்…)

(டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 3)
(பகுதி 4 முதல் கிருஷ்ணனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம்)

முந்தைய பதிவுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here