கடைகளில் குவிந்து இருக்கும் நாற்காலிகள்!
நின்று கொண்டே இருக்கும் தொழிலாளர்கள்!
நேற்று வீட்டுக்கு போகும் வழியில், பாடியில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கண்ணில்பட்டது. பகுதியில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டது. டெங்கு பரவி வரும் வேளையில், பாதுகாப்புக்கு கொசுவலை வாங்கலாம் என உள்ளே நுழைந்தோம்.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் குறுக்கும் நெடுக்குமாய் சுறுசுறுப்பாய் பணியாற்றிக்கொண்டு இருந்தார்கள். உள்ளே நுழைந்த உடனே ஒரு விசயத்தை ஆவலாய் தேடினேன். அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உட்கார்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் என! ஆனால் நாற்காலிகளை காணோம். எல்லோரும் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் உறுதிப்படுத்துவதற்கு அங்கு வேலை செய்த இரண்டு இளம் பெண்தொழிலாளர்களிடம் கேட்டேன். சமீபத்தில் தமிழக அரசு ஜவுளிக் கடைகளில் உட்கார்வதற்கு நாற்காலி தரவேண்டும் என சட்ட மசோதா நிறைவேற்றியதே! உங்களுக்கு நாற்காலி தரவில்லையா? என்றேன். ”இல்லை” என மவுனமாய் தலையாட்டினார்கள்.


ஜவுளி கடைகளில் தொழிலாளர்களுக்கு நாற்காலி தருவதில்லை. அதனால் அவர்கள் பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள். ஆகையால், அனைத்து தொழிலாளர்களுக்கும் உட்கார்வதற்கு நாற்காலி தரப்படவேண்டும் என கடந்த செப். 9ந் தேதி சட்ட சபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இருபது நாட்களுக்கு மேலாகியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் தலைநகர் சென்னையில் இயங்கும் சரவண ஸ்டோர்ஸ் கடைகளில் இன்னும் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அந்த கடைக்கு தினசரி பல ஆயிரம் மக்கள், அதிகாரிகள் என எல்லோரும் தான் அந்த கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக போய்வருகிறார்கள். இதெல்லாம் அரசுக்கு தெரியாதா?
தொழிலாளிகளுக்கு அடிப்படையான வசதிகள் செய்து தரவேண்டும் என்ற அடிப்படை விதிகளை ஒரு முதலாளி கடைப்பிடிக்க மாட்டார். அரசும் கண்டு கொள்ளாது. ஒன்று மட்டும் புரிகிறது. எத்தனை சட்டங்கள் போட்டாலும், அதை முதலாளிகள் கண்டுகொள்ளமாட்டார்கள். தான் போட்ட சட்டத்தை சின்சியராக நடைமுறைப்படுத்த அரசு அமுல்படுத்தாது. அப்படியானால் இதற்கு தீர்வு. தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடினால் தான் உட்கார்வதற்கு நாற்காலிகள் போடப்படும் என்பது இதில் கிடைக்கும் அடிப்படை பாடம்.
வரலாறு நெடுக போராடியதால் தான் தொழிலாளர்களுக்கு பல உரிமைகள் கிடைத்தன. போராடாமல் விட்டதால் தான் பெற்ற உரிமைகளையும் பாதுகாக்க முடியாமல், ஒவ்வொன்றாக தொலைத்து வருகிறோம். சங்கம் வைக்க கூடாது என பதறும் முதலாளிகள், கலைக்க பாடுபடும் முதலாளிகள் அனைவருமே ஒற்றுமையாய் ஒரு சங்கம் வைத்து தான் இயங்குகிறார்கள். அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். தங்களுக்கான உரிமைகளை பெறுகிறார்கள். முதலாளித்துவ பண்பாடு என்பது ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக ஆக்கி, ஒன்றுசேர விடாமல் செய்வதில் வெற்றி பெற்று வருகிறது. அதனால் தங்கள் லாபத்தை இன்னும் பெரிதாக பெருக்கி கொள்கிறார்கள். தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதில் தான் அவர்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது.
அதே சரவண ஸ்டோர்சில் நாற்காலிகள் மொத்தம் மொத்தமாய் நாற்காலிகளை குவிந்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். தூரம் அதிகமில்லை. அதை எடுத்துப் போட்டு உட்கார்வதற்கு ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு குறுக்கு வழிகள் இல்லை
வெளியே வந்து அண்ணாந்து பார்த்தேன். ”The Legend” என பெரிதாய் போட்டிருந்தார்கள். நான் பார்ப்பதை பார்த்துவிட்டு, “The Legend” ன்னா என்னப்பா? என என் பொண்ணு கேட்டார். தொழிலாளர்களுக்கு உட்காருவதற்கு சீட் கூட தராத ஆள் தான் “The Legend” என்றேன்

  • சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here