மாடுகளை கொண்டு சென்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனையா? குஜராத் நீதித்துறைக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்தது.


குஜராத்தில் இருந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு அனுமதியின்றி மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற குற்றத்திற்காக கடந்த 27-08-2020 அன்று குஜராத்தின் நிஜார் காவல் நிலைய போலீசார் முகமது அமீன் என்ற இளைஞரை கைது செய்கிறார்கள்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத் மாநிலத்தின் Tapi, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அதன் அடிப்படையில் 04-11-22 -ம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்ட முகமது அமீன் என்ற 22 வயது இளைஞருக்கு நீதிபதி சமீர் சந்திர வியாஸ் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதாவது,கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து ஜாமீன் இன்றி 30 மாதங்களாக சிறையில் இருந்த அமீனுக்கு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே 5 லட்சம் அபராதமும், கட்டாதவறினால் 5 ஆண்டுகள் தண்டனை கூடுதலாக அனுபவிக்கவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதோடு, பசுவின் சாணம் புனிதமானது, கதிரியக்கத்தையே தடுக்கும் ஆற்றல் கொண்டது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிருந்தார்.

https://theprint.in/…/cow-dung-protects-from…/1329663/

ஆனால், இந்தியாவின் கால்நடைத்துறை அமைச்சகம் பசுவின் சாணம் குறித்து எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை தெரிவிக்கிறது. அப்படியிருக்க, நீதிபதி சமீர் சந்திர வியாஸ் தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் காரணமாக தாய் தகப்பனை இழந்த,எந்த வித குற்றப்பின்னணியும் இல்லாத முகமத் அமீனுக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை விதித்தது இயற்கை நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல, அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டு, கடந்த ஜனவரி 30-01-23 ம் தேதி இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இதையும் படியுங்கள்: ராமராஜ்யம்: மனிதர்கள் மீது கொலைவெறியும் மாடுகளின் மீது கரிசனையும்!

இந்தியாவில் இருக்கும் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுத்து நிறுத்தவேண்டுமென கோரிக்கையும் விடுத்திருந்தேன்.

தனியாக வழக்கறிஞர் வைத்து வாதாடக்கூட வசதியற்ற நிலையில், அரசின் இலவச சட்ட உதவியோடு வழக்கை எதிர்கொண்ட முகமது அமீனுக்கு, அறிவியலுக்கு புறம்பான காரணங்களை எல்லாம் கூறி ஆயுள் தண்டனை விதித்தது மனித உரிமைக்கு எதிரானது என்பதால் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் புகார் அனுப்பியிருந்தேன்.

இந்நிலையில்,நான் அனுப்பிய புகாரின் அடிப்படையில் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்,குஜராத் நீதித்துறைக்கு எதிராக 20-03-23 ம் தேதியன்று (வழக்கு எண்; 351/6/38/2023) வழக்கு பதிவு செய்துள்ளது.. பசுவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை.

B.R.அரவிந்தாக்ஷன்

ஊடகவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here